

தமிழர்களின் பாரம்பரியத்தில் மிக முக்கிய இடம் வகிப்பது தமிழகத்தில் உள்ள கோவில்கள் சேர சோழ பாண்டிய மன்னர் காலங்களில் ஆயிரக்கணக்கான கோயில்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கட்டி எழுப்பப்பட்ட வழிபாடு மட்டுமல்லாது வரலாற்றின் பக்கங்களை திரும்பிப் பார்க்கும் ஒரு அற்புத புத்தகமாகவும் கோயில்கள் திகழ்கின்றன.அந்த அளவுக்கு தமிழர்களை பாரம்பரியத்தோடு பின்னிப் பிணைந்தவை கோவில்கள். இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் கோவில்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடாகும்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த இந்து சமய அறநிலையத துறை முன்னாள் அமைச்சர் சேகர் பாபுவின் காரை போலீஸ் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.அதற்கு, போலீசார் "சேகர் பாபுவின் கார் மேலே வருவதற்கு அனுமதி பெறவில்லை. அதற்கான சிறப்பு அனுமதி குறித்து எங்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆகையால் அவரது காரை மேலே அனுமதிக்க முடியாது. அப்படி அனுமதித்தால் மலைக்கோவிலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்" என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அறநிலையத்துறை அமைச்சர் சார்பில் புதிய உத்தரவு ஒன்று வெளியாகியுள்ளது.
திரைத்துறை பிரபலங்கள் விஐபிக்கள் கோயிலுக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கு தகவல் தெரிவிப்பது கட்டாயம்: கோயில்களில் புகைப்படம், வீடியோ மற்றும் ரீல்ஸ், மொபைல் போன் தடை.இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள முதுநிலைத் திருக்கோயில்களில், இனிவரும் காலங்களில் பின்வரும் வழிமுறைகள் கட்டாயமாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
1. திரைத்துறை பிரபலங்கள் / முக்கியஸ்தர்கள் / VIP தரிசனம்:
திரைத்துறை பிரபலங்கள், முக்கியஸ்தர்கள் அல்லது VIP-க்கள் திருக்கோயிலுக்கு தரிசனம் செய்ய வருவதாக இருந்தால், குறைந்தது ஒரு நாளுக்கு முன்பாகவே, அவர்கள் வரவிருக்கும் திருக்கோயில், வருகை நேரம், அவர்களுடன் வருபவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட முழு விவரங்களையும் எனது அலுவலகத்திற்கு கட்டாயமாகத் தெரிவிக்க வேண்டும்.
2. திருக்கோயில்களில் மொபைல் போன் தடை:
வருகின்ற 01.09.2026 முதல், அனைத்து முதுநிலைத் திருக்கோயில்களிலும் பக்தர்கள் மொபைல் போன்களை கோயிலுக்குள் கொண்டு செல்லும் நடைமுறை முழுமையாகத் தடை செய்யப்பட வேண்டும்.
இதற்காக, பக்தர்கள் தங்களது மொபைல் போன்களை பாதுகாப்பாக ஒப்படைக்க லாக்கர் வசதிகள் உடனடியாக ஏற்படுத்தப்பட்டு, மேற்கண்ட தேதிக்குள் அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும்.
3. புகைப்படம், வீடியோ மற்றும் ரீல்ஸ் தடை:
திருக்கோயில்களுக்குள் இறைவனின் திருவுருவங்களை புகைப்படம் எடுப்பது, கோயில் வளாகத்தில் புகைப்படம், வீடியோ, ரீல்ஸ் போன்றவற்றை பதிவு செய்வது மற்றும் ஊடகங்களுக்கு VIP-க்கள், முக்கியஸ்தர்கள், திரைத்துறை பிரபலங்களுடன் கோயிலுக்குள் வீடியோ அல்லது புகைப்படம் எடுக்க அனுமதி வழங்குவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
இதுபோன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில் ஏதேனும் நடைபெற்றதாக செய்திகள் வெளியானால், அதற்கு பொறுப்பான சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.மேற்கண்ட அனைத்து அறிவுறுத்தல்களையும் எவ்வித விதிவிலக்கும் இன்றி, மிகக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என அமைச்சர் ரமேஷ் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.