

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலில் (Voter List) பெயர் சேர்க்க இன்று (மார்ச் 26) தான் கடைசி நாள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதாவது, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சேர்க்கவும், திருத்தங்கள் செய்யவும் இன்று (மார்ச் 26) மாலை வரை மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனவே, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் இன்று உடனே அதற்கு விண்ணப்பித்தால் மட்டுமே தமிழக சட்டப்பேரவை தேர்தலில் உங்களால் ஜனநாயக கடமையை ஆற்றமுடியும்.
தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் மார்ச் 30-ம்தேதி முதல் ஏப்ரல் 6-ம்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 7-ம் தேதி நடைபெறும் என்றும், வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் ஏப்ரல் 9 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (SIR) பிந்தைய, இறுதி வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்டது. சிறப்பு தீவிர திருத்தத்துக்கு முன்பிருந்த வாக்காளர் பட்டியலில் தமிழகத்தில் 6,41,14,587 வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் 5,67,07,380 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிவிட்ட நிலையில், ‘இதற்குப் பின்னும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம்’ என்று தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார். இதுவரை பெயர் சேர்க்காதவர்கள் அல்லது இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத வாக்காளர்கள் https://electoralsearch.eci.gov.in/என்ற இணையதளத்திற்கு சென்று அதில், new voter registration என்ற ஆப்ஷனை தேர்வு செய்து, உங்களது பெயர், பிறந்த தேதி, முகவரி, அடையாள ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். முகவரி சான்று, வயது சான்று, அடையாள ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன்பிறகு தேர்தல் அதிகாரிகள் உங்கள் விண்ணப்பத்தை சரிபார்த்து வாக்காளர் பட்டியலில் உங்களது பெயரை சேர்ப்பார்கள்.
அல்லது மொபைல் செயலி கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் Voter Helpline App அல்லது ECINet செயலியைப் பயன்படுத்தி உங்கள் விவரங்களைப் பதிவேற்றலாம்.
ஆன்லைனில் செய்ய தெரியாதவர்கள் வாக்காளர் பதிவு அலுவலகத்திற்கு சென்று, form 6 என்ற படிவத்தை பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்தும், தேவையான ஆவணங்களை அதனுடன் இணைத்து சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரின் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.
உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை voters.cci.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று சரிபார்த்து கொள்ளலாம்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்புமனுத் தாக்கல் உள்ளிட்ட பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதால், வாக்காளர் பட்டியலில் இறுதி மாற்றங்களைச் செய்ய இந்த 24 மணி நேர அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்பட்டு, அவை வரும் ஏப்ரல் 23 அன்று நடைபெறும் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியானவர்களின் இறுதிப் பட்டியலில் இடம்பெறும். எனவே, 18 வயது பூர்த்தியடைந்தவர்கள், முகவரி மாற்றம் செய்தவர்கள் மற்றும் இதுவரை பெயர் சேர்க்காத தகுதியுள்ள நபர்கள் இந்த இறுதி வாய்ப்பைத் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அதேபோல் வாக்காளர் அடையாள அட்டையை தொலைத்தவர்கள் கூட இன்று விண்ணப்பிக்கலாம். ஆனால், அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் 12 ஆவணங்களான ஆதார் அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய வங்கி கணக்கு புத்தகம், ஸ்மார்ட் கார்டு, பென்ஷன் ஆவணம், மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கான அடையாள அட்டை உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒரு ஆவணத்தை காட்டி வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.