

அமைச்சரவையில் இடம்பெற்றாலே அதில் நீங்களும் ஒரு அங்கம்தான். வார்த்தை விளையாட்டு வேண்டாம் என அமைச்சரவையில் இடம்பெற்றதாலேயே தவெக கூட்டணியில் இணைந்துவிட்டதாக சொல்ல முடியாது எனக் கூறிய எம்பி திருமாவளவனுக்கு மாணிக்கம் தாகூர் பதில் அளித்துள்ளார்.
இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளையொட்டி கிண்டியில் உள்ள அவருடைய நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனுன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ரீல்ஸ் போடுவதில் அமைச்சர்கள் மட்டுமின்றி அதிகாரிகள், உலக அளவிலும் நாடு முழுவதும் வழக்கமாக மாறி இருக்கிறது. ஒருவர் மட்டும் ரீல்ஸ் போடுவதாக கூற முடியாது. சமூக ஊடகங்கள் வலிமை உள்ள இந்த காலகட்டத்தில் ஒவ்வொருவரின் அசைவுகளை பதிவு செய்வது தவிர்க்க முடியாததாக மாறி இருக்கிறது.
அது பொதுவெளியில் ஒழுக்கக்கேடாக இருந்ததை சுட்டிக்காட்டுகிறேன். இதனை அமைச்சர்கள் உள்வாங்கிக் கொள்வார்கள், தவிர்ப்பார்கள் என்று கருதுகிறேன். தவெக அமைச்சரவையில் நாங்கள் சேர்ந்ததால் கூட்டணியில் இணைந்ததாக பொருள் இல்லை என்று கூறினார்.
திருமாவளவனின் இந்த பேச்சு தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், எம்.பி.யுமான மாணிக்கம் தாகூர் கூறுகையில், அமைச்சரவையில் இடம்பெற்றாலே தவெக கூட்டணியில் விசிகவும் ஒரு பகுதி தான். கூட்டணி தொடர்பாக திருமாவளவன் வார்த்தைகளில் விளையாட வேண்டாம். வார்த்தை விளையாட்டு விளையாட இது தொலைக்காட்சி அல்ல; திருமாவளவன் கொண்ட கொள்கையில் தெளிவாக இருப்பவர். ஆட்சிக்கு ஆதரவு தந்து உள்ளே வந்துவிட்ட பிறகு வேறு மாதிரி பேசுவது வெட்டி வேலை என்றார். ஆதரவு கொடுத்துவிட்டாலே கூட்டணிக்குள் வந்துவிட்டீர்கள் என்றுதான் அர்த்தம். அதாவது Left Turn எடுத்துவிட்டாலே Left-ல் வந்துவிட்டீர்கள் என்று அர்த்தம். எனவே Left Turn எடுத்துவிட்டு Right Turn பற்றி பேசுவது வெட்டி வேலை என்று கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், தவெக தலைமையில் ஒரு நல்ல கூட்டணி அரசு அமைந்துள்ளது. ஆட்சியில் பங்கு கொடுத்து, முதல்வர் விஜய் தோழமையை உருவாக்கியுள்ளார். தவெக தலைமையில் 4 கட்சிகள் சேர்ந்து ஆட்சி அமைத்துவிட்டோம். 2 கட்சிகள் வெளியே இருந்து ஆதரவு தருகிறார்கள்.
பரஸ்பர நம்பிக்கையோடும், சகோதரத்துவத்தோடும் தவெக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தவெக ஆட்சிக்கு வந்து முதல் அமைச்சரவை கூட்டம் நடந்து விட்டது.
அதில் 4 கட்சியும் கலந்து கொண்டது. ஒரு அமைச்சரவை கூட்டத்தில் இத்தனை கட்சிகள் கலந்து கொண்டது 50 ஆண்டுகளில் இது முதல்முறையாகும். இந்த ஆட்சியை சோபா மாடல் ஆட்சி என எதை சொன்னாலும் நாங்கள் எங்கள் பணிகளை செய்து வருகிறோம் என்று கூறினார்.
விசிக அமைச்சரவையில் இடம் பெற்றதாலேயே திமுகவுக்கு நாங்கள் துரோகம் செய்துவிட்டோம் என்ற பலரும் விமர்சனங்களை முன் வைப்பதாக கூறிய திருமாவளவன், பதவி கிடைத்தவுடன் ஒரு கூட்டணியை உதறிவிட்டு ஓடிவிடவில்லை. எடுக்கும் முடிவுகள் ஒவ்வொன்றையும் கூட்டணி தலைமையிடம் தெரிவித்து பகிர்ந்து கொண்டோம். ஸ்டாலினையும் சந்தித்து பேசியிருக்கிறோம். திமுகவுடனான நட்பும் உறவும் தொடர்கிறது என திருமாவளவன் தெரிவித்திருந்தார். இதை மாணிக்கம் தாகூர் எதிர்த்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திராவிட கட்சிகளை வீழ்த்தி தவெக தனிப்பெரும் கட்சியாக ஆட்சியை கைப்பற்றியது. 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் ஆட்சி அமைக்க கூடுதல் இடங்களை தேவைப்பட்ட நிலையில் காங்கிரஸ் முதல் கட்சியாக திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தவெகவிற்கு ஆதரவளித்தது. அதனை தொடர்ந்து, விசிக, கம்யூனிஸ்ட்டு கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவு அளித்த நிலையில் தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.