

தமிழ்நாட்டில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் சூழலில், தவெக தனது பலத்தைக் காட்ட முழுவீச்சுடன் ஆயத்தமாகி வருகிறது. இந்நிலையில் தமிழக அரசியல் வரலாற்றில், ஒரு பெண்மணியை கொள்கை தலைவராக ஏற்ற முதல் கட்சி தவெக தான் என அக்கட்சியின் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் இன்று தெரிவித்துள்ளார்.
இதுவரை தமிழக வெற்றிக் கழகத்தில் எந்த ஒரு கட்சியும் கூட்டணியில் இணையாத நிலையில், மூத்த அரசியல்வாதிகள் ஒருசிலர் மட்டுமே இணைந்துள்ளனர். இந்நிலையில் தவெக கூட்டணியில் ஒரு தேசிய கட்சியும், ஒரு மாநில கட்சியும் இணைய போவதாக அக்கட்சியின் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
ஆனால் இதற்கான சாத்தியக்கூறுகள் ஏதும் தென்படாத நிலையில், வருகின்ற சட்டமன்றத் தேர்தலை தவெக தனித்தே எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக ஒரு குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தமிழ்நாட்டில் தவெக தனது பலத்தை நிச்சயம் காட்டும் என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “தமிழக அரசியல் வரலாற்றில் பெண்களை கொள்கை தலைவர்களாக ஏற்றுக்கொண்ட முதல் கட்சி தவெக தான். வேலுநாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் ஆகிய இரண்டு பெண்மணிகளை தவெக கொள்கை தலைவர்களாக ஏற்றுக் கொண்டுள்ளது. இதுவே எங்களின் பலம். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தவெக ஒரு அதிரடியான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி” என அவர் தெரிவித்துள்ளார்.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர்களாக தந்தை பெரியார், பி.ஆர்.அம்பேத்கர், கர்ம வீரர் காமராஜர், வேலுநாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.
கடந்த 2024 அக்டோபர் 27 இல் நடந்த விக்கிரவாண்டி மாநாட்டில், ஐந்து கொள்கை தலைவர்களின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, சாதி,மத, பேதமற்ற சமூக நீதி மற்றும் மதச்சார்பற்ற கொள்கைகளைத் தவெக பின்பற்றுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு இன்னும் முடிவுக்கு வராத நிலையில், திமுக சார்பில் 22 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளை காங்கிரஸ் கேட்டு வருகிறதால், தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. ஏற்கனவே காங்கிரஸ் தவெக-வில் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் திமுக-விடம் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ், தவெக-வில் இணைவது இனி கடினம் தான் என கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள மாநில கட்சிகள் ஏற்கனவே திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் இணைந்து விட்டதால், தவெக தனித்துப் போட்டியிடுவது உறுதியாகி விட்டதாகவே தெரிகிறது. இருப்பினும் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னால், எதுவும் நடக்கலாம் என்பதால், பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.