

தவெக தலைவர் விஜய் நேற்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிலையில், 17 வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9:30 மணிக்கு தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் 233 தொகுதிகளிலும் வென்ற எம்எல்ஏ-க்கள், பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
நேற்று திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் ராஜினாமா செய்த காரணத்தால், அந்தத் தொகுதியில் மட்டும் இடைத்தேர்தல் விரைவில் நடக்க உள்ளது.
இந்நிலையில் இன்று சட்டப் பேரவையில் சிவகாசி தொகுதியில் வென்ற தவெக வேட்பாளர் எஸ்.கீர்த்தனா மட்டும் இன்று எம்எல்ஏ-வாக பதவியேற்கவில்லை.
நேற்று முதல்வராக விஜய் பதவி ஏற்றுக் கொண்டபோது அவருடன் 9 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். இதில் ஒரே ஒரு பெண் அமைச்சர் கீர்த்தனா என்பது குறிப்பிடத்தக்கது. சிவகாசி தொகுதியில் வென்ற கீர்த்தனா இள வயது பெண் எம்எல்ஏ-க்களில் ஒருவராவார். இவர் புள்ளியியல் துறையில் முதுகலைப் பட்டத்தை முடித்துள்ளார்.
முதல்முறையாக சட்டமன்றத்திற்கு வரும் அமைச்சர் எஸ்.கீர்த்தனா சிவகாசி தொகுதியில் தான் வெற்றி பெற்றதற்கான வெற்றிச் சான்றிதழை கொண்டு வரவில்லை. இதன் காரணமாக அவர் இன்று சிவகாசி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்க முடியாமல் போனது.
இதனால், தவெக-வின் மற்ற அமைச்சர்களுடன் அவரால் உறுப்பினராக பதவியேற்க முடியாமல் போனது. வெற்றி பெற்ற சான்றிதழைக் கொடுத்த பிறகு, அமைச்சர் கீர்த்தனா பதவியேற்றுக் கொள்வார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசியல் களத்தில் ஒரு புதுமுக முதல்வரும், புதுமுக எதிர்க்கட்சித் தலைவரும் தற்போது சட்டப்பேரவையில் எதிரெதிரே அமர்ந்துள்ளனர். 59 ஆண்டுகளுக்குப் பிறகு, திராவிட கட்சிகள் அல்லாத ஒரு கட்சி தமிழகத்தில் ஆட்சி புரிவது இதுவே முதல் முறை. இருப்பினும் திமுக எதிரிக் கட்சியாக அல்லாமல், சிறந்த எதிர்க் கட்சியாக செயல்படும் என்று தெரிவித்துள்ளது.
விஜய் முதல்வராக பதவியேற்ற பிறகு கூடும் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் இது என்பதால், தமிழக அரசியல் களத்தில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதிமுகவில் மீண்டும் ஒரு பிளவு ஏற்பட்டுள்ளதால், இபிஎஸ் தலைமையில் ஒரு அணியினரும், சிவி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மற்றொரு அணியினரும் சட்டமன்றத்திற்கு வருகை புரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.