
இரண்டு சீன விண்கலங்கள் விண்வெளியில் சந்தித்திருக்கின்றன. இதை வேவு பார்த்த ஒரு நிறுவனம் செய்திகளை இப்போது வெளி உலகிற்குத் தெரிவித்து விட்டது.
சீனாவைச்சேர்ந்த லாங் மார்ச் 3பி (Long March 3B) என்ற ராக்கட் ஜிஜாங் ஏவுதளத்திலிருந்து ஷிஜான் – 21 சாடலைட்டை 2021 அக்டோபர் 24ம் தேதி விண்ணில் ஏவியது. இந்த சாடலைட் சீனா 2025 ஜூன் மாதம் ஏவிய இன்னொரு சாடலைட்டான ஷிஜான் – 25ஐச் சந்தித்திருக்கிறது! 22236 மைல் உயரத்தில் இந்த விசித்திர சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது!
பூமிக்கு மேலே இவை நெருக்கமானது எதற்காக? அங்கு கூட எரிபொருளை நிரப்பிக் கொள்ள முடியும் என்று காட்டுவதற்காக!
ஷிஜான் – 21 மற்றும் ஷிஜான் – 25 ஆகிய இரண்டு துணைக்கோள்களும் ஜியோசிங்க்ரொனஸ் சுற்றுப் பாதையில் (geosynchronous orbit) ஈக்வேடருக்கு மேலே 22236 மைல் உயரத்தில் அருகருகே சுற்றிக் கொண்டிருந்தன. இப்போது இந்த இரண்டு துணைக்கோள்களும் சந்தித்திருக்கின்றன என்ற செய்தி வெளி உலகிற்குத் தெரிய வந்துள்ளது. 2025, ஜூன் 14ம் தேதி இது நிகழ்ந்திருக்கிறது.
இதன் மூலம் நமக்குத் தெரிய வருவது ஷிஜான் – 21 மற்றும் ஷிஜான் – 25 ஆகிய இரண்டும், சோதனை ஓட்டத்திற்குப் பின்னர் இணைவது மற்றும் பிரிவது (a docking and undocking test) ஆகிய சோதனைகளையும் மேற்கொண்டிருக்கக்கூடும் என்பது தான்!
ஜூன் 13 மற்றும் 14ம் தேதிகளில் இவை நெருங்கி இருந்தன என்று கீழிருந்து கண்காணித்தவர்கள் உறுதிப்படுத்துகிறார்கள்.
விண்வெளிப் பயணத்தை நீட்டிக்க வேண்டி எரிபொருளை விண்ணிலேயே நிரப்ப முடியுமா என்ற பெரிய சோதனை நிகழ்ந்திருக்கிறது.
இரண்டு துணைக்கோள்களில், ஷிஜான் – 25, எரிபொருளை விண்ணில் நிரப்ப முடியும் என்ற சோதனையை நிகழ்த்தியுள்ளது. ஷிஜான் – 21 ஒரு செயலற்ற, ‘இறந்து போன’ துணைக்கோளை அதன் ‘கல்லறைச் சுற்றுப்பாதையிலிருந்து’ கட்டி இழுத்து வந்திருக்கிறது!
இந்த இரண்டுமே சீனாவில் உள்ள ஷாங்காய் அகாடமி ஆஃப் ஸ்பேஸ் ஃப்ளைட் டெக்னாலஜி (Shanghai Academy of Spaceflight Technology (SAST) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டவையாகும்.
அமெரிக்க கண்காணிப்பு சாடலைட்டுகளான யுஎஸ்ஏ 270 மற்றும் யுஎஸ்ஏ 271 ஆகிய இரண்டும் இதன் கிழக்குப் பக்கத்திலும் மேற்குப் பக்கத்திலும் மிக அருகில் இருந்து கண்காணிக்க இருக்கின்றன!
என்ன நடக்கிறது என்று தெரிய வேண்டாமா என்ன?