

விமான ரத்து காரணமாக தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் பயணிகள், ஏற்கனவே தங்கியுள்ள ஹோட்டல்களில் தங்குமிட காலத்தை இலவசமாக நீட்டித்துக் கொள்ளலாம் என்றும், அமீரக அரசுக்கு விருந்தினர்களின் பாதுகாப்பே முக்கியம் என்றும் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பயணிகளுக்கு அந்நாட்டு அரசு அடைக்கலம் அளித்துள்ளது.விமான ரத்து காரணமாகத் தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் சுமார் 20,200 பயணிகளுக்கு, தற்காலிக தங்குமிடம், உணவு மற்றும் சிற்றுண்டிகளை வழங்க அமீரக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
கடந்த 2 நாட்களாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை இலக்காகக் கொண்டு ஈரானிய தாக்குதல்கள் நடத்தப்பட்டதால், அதிகாரிகள் பாதுகாப்பை அதிகரித்து விமான போக்குவரத்து நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளனர். ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலைத் தொடர்ந்து பிராந்திய வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டிருப்பதால் ஐக்கிய அரசு அமீரகத்தில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் சிக்கி தவிக்கின்றனர்.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள அனைத்து விமானங்களும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பான இடத்தில் தங்கும் இடம் தேடவும், வழிமுறைகளுக்காக காத்திருக்கவும் கூறப்பட்டுள்ளது. அங்கு சிக்கி தவிக்கும் பயணிகளுக்கான ஹோட்டல் தங்குதல், உணவு மற்றும் மறு முன்பதிவு செலவுகளை ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் ஏற்றுக் கொள்வதாக GCAA அறிவித்துள்ளது. துபாய் மற்றும் அபுதாபியில் உள்ள ஹோட்டல்கள் பயணிகளை வெளியேற்றவோ அல்லது பணம் செலுத்தவோ கட்டாயப்படுத்தாமல் விருந்தினர் தங்குமிடங்களை நீட்டிக்கவும் அறிவுறுத்தி உள்ளது.
ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா இடையிலான போரில் ஐக்கிய அரபு அமீரகமும் பாதிப்புள்ளாகி வரும் நிலையில் நாட்டில் அடிப்படை உணவுப் பொருட்களின் இருப்பு குறித்த கவலை அங்குள்ளவர்களிடம் நிலவி வருகிறது. இந்நிலையில் அமீரகம் முழுவதும் உள்ள சந்தைகளில் அடிப்படை உணவுப் பொருட்கள் போதுமான அளவில் இருப்பதை அரபு அமீரகம் உறுதிப்படுத்தி உள்ளது. நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் போதுமான அளவில் நீண்ட காலத்திற்கு கிடைக்கும் என்றும், அடிப்படை உணவு பொருட்கள் குறித்து கவலை வேண்டாம் என்பதையும் அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது.
பெரும்பாலான விமான நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இலவச மறு முன்பதிவு அல்லது முழு பணத்தை ரீபண்ட் செய்ய அனுமதிக்கிறது. அத்துடன் பயணிகள் அதிகாரப்பூர்வ விமான வலைதளங்கள் அல்லது பயன்பாடுகள் மூலம் முன்பதிவுகள் செய்யவும் அறிவுறுத்தப்படுகிறது.