

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த சில நாட்களாக தீவிரமாக போர் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக உலக பொருளாதாரச் சந்தை ஆட்டம் கண்டுள்ளது. மேலும் பல்வேறு நாடுகளில் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரை அமைதியான முறையில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தி இருக்கிறார்.
இந்நிலையில் பயணிகள் விமானத்திற்கு பாதுகாப்பு அளிக்க போர் விமானத்தை உடன் அனுப்பியுள்ளது ஐக்கிய அரபு அமீரகம் (UAE). இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி நெட்டிசன்களை கவர்ந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி முதல் ஈரான் மற்றும் அமெரிக்க, இஸ்ரேல் இடையே கடுமையான போர் நிலவி வருகிறது. இந்தப் போர் அடுத்த நான்கு முதல் ஆறு வாரங்களுக்கு நீடிக்கும் எனவும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
போர் பதற்றம் காரணமாக ஹார்மூஸ் நீரிணையை ஈரான் அரசு மூடியுள்ளதால், கச்சா எண்ணெய் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் 37 இந்திய கப்பல்கள் ஈரானில் நேற்று சிக்கின. இந்திய கப்பல்களை மீட்டு வர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் சூழலில், அடுத்த 30 நாட்களுக்கு மட்டும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா வாங்கிக் கொள்ள அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்க இடையிலான போரில் ஐக்கிய அரபு அமீரகத்திலும் அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு துபாயில் இருந்த அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
இதன் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து, ஐக்கிய அரபு அமீரகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அவ்வகையில் இங்கிருந்து புறப்படும் பயணிகள் விமானத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக போர் விமானங்களை உடன் அனுப்புகிறது அந்நாட்டு அரசு. போர் பதற்றங்களுக்கு நடுவில், துபாய் வழியாக சென்ற பயணிகள் விமானத்திற்கு இணையாக போர் விமானமும் பறந்து சென்றது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளன.
நாட்டு மக்களின் நலனுக்கும், அந்நாட்டை நம்பி வரும் மக்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த செயலுக்கு, நெட்டிசன்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
போர் பதற்றம் காரணமாக பல்வேறு நாடுகளில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வரும் நிலையில், துபாய் வழியாக சென்ற விமானத்திற்கு பாதுகாப்பு அளித்த ஐக்கிய அரபு அமீரகத்தின் செயல் உண்மையிலேயே பாராட்டுக்குரியது.