

உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் சமூக வலைத்தளத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட ஒரே ஒரு பதிவு சோசியல் மீடியாவில் புதிய விவாதத்தை கிளப்பி இருக்கிறது.
தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நடிகை குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக த.வெ.க. மகளிர் அணி சார்பில் மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி சங்கர்ராமன் மற்றும் நிர்வாகிகள் புகார் அளித்தனர்.
இதையடுத்து, சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைத்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை தஞ்சை மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூர் நடுவர் நீதிமன்றம் -1க்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
உதயநிதி ஸ்டாலின் நடிகை குறித்து பேசிய சர்ச்சை பேச்சுக்கு பாஜக, குஷ்பு உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே உதயநிதி ஸ்டாலின் கைது (உதயநிதி கைது) செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட ஒரே ஒரு பதிவு சோசியல் மீடியாவில் புதிய விவாதத்தை கிளப்பி இருக்கிறது. அதில் அவர் எந்த விளக்கமும் இல்லாமல் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு திருக்குறளை பகிர்ந்து இருக்கிறார்.
அதாவது,
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும்.
- திருக்குறள் 183
‘பொய்களை பேசி பிறரை பற்றி அவதூறு பரப்பி வாழ்வதைவிட அப்படிப்பட்ட வாழ்க்கையை விட்டு விலகுவது உயர்ந்த அறத்தை தரும்’ என்பது தான் அந்த குறளின் உண்மையான பொருளாகும்.
என்ற திருக்குறளை மட்டும் பதிவிட்டு இருக்கிறார். இந்த திருக்குறளின் பொருளை கூறாமல் குறளை மட்டும் பதிவிட்டு இருப்பது சமூகவலைத்தளத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதாவது இவர் வெளிப்படையாக குறிப்பிடாததால், உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக பதிவிட்டு உள்ளாரா? அல்லது திரிஷாவிற்கு ஆதரவாக பதிவிட்டு உள்ளாரா? என்ற குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் இந்த பதிவு வெளியான நேரம் தான் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இவ்வளவு பெரிய சம்பவத்திற்கு இடையே உதயநிதி ஸ்டாலினின் சர்ச்சை பேச்சு குறித்து நடிகை திரிஷா இதுவரை எந்த பதிலும் அளிக்காத நிலையில், நிவேதா பெத்துராஜ் திடீரென இந்த திருக்குறளை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு இருப்பது திரிஷாவுக்கு ஆதரவாக வெளியிட்ட பதிவாக இருக்கலாம் என்று நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்
இதற்கிடையே தஞ்சை பொதுக்கூட்டத்தில் பேசியது தொடர்பாக கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் குற்ற எண் 287/2026-ன் கீழ் 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் உதயநிதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமின் மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று பிற்பகலில் தொடங்கியது.
அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் கூறுகையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்படுவார். உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை. உதயநிதி விசாரணைக்கு பின் போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, விசாரணைக்கு பின்னர் உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும் என ஐகோர்ட் நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார். மேலும், காவல்துறை விசாரணைக்கு உதயநிதி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.