

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையே ஏற்பட்ட நேரடி அரசியல் மோதல் காரணமாக, திமுகவினர் விஜய்யின் தனிப்பட்ட குடும்ப விவகாரத்தைக் குறிப்பிட்டு மிகக் கடுமையான தனிநபர் தாக்குதலை (Personal Attack) நடத்தியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
17வது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முதல் கூட்டத்தொடர், புதிய முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆளுநர் உரையுடன் ஜூன் 18-ம்தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்று நேற்றுடன் நிறைவடைந்தது.
முதல் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீதான விவாதத்திற்குப் பதிலளித்த முதலமைச்சர் விஜய், ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையே நேரடி அரசியல் போராக வெடித்துள்ளது.
அப்போது ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே காரசாரமான விவாதங்கள் அரங்கேறின. தமிழக வெற்றிக் கழகத்தின் அரசை நோக்கி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மின்வெட்டு மற்றும் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, தன்னை நோக்கி விமர்சனக் கணைகளைத் தொடுத்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துடன், தவெகவை 'நடிகர் கட்சி' என்று விமர்சிப்பவர்களுக்கு பதிலளித்த முதலமைச்சர் விஜய், தாங்கள் முதலில் மக்களைச் சந்தித்துவிட்டுத்தான் கட்சியைத் தொடங்கினோம் என்றார்.
திரைத்துறையிலிருந்து நேரடியாக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தது போலச் சிலர் பேசுகிறார்கள். ஆனால், சினிமா என்பது ரீல்; இது ரியல். நான் இந்த நிலைக்கு உயர்ந்ததற்கு எனது உழைப்பு மட்டுமல்ல, தமிழக மக்களின் அளப்பரிய அன்பும் அரவணைப்புமே காரணம் என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்.
முதலமைச்சர் விஜய் ஆற்றிய உரை, திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (AIADMK) ஆகிய கட்சிகளை கடுமையாக விமர்சித்தும், தவெகவின் (TVK) தேர்தல் வெற்றியை நியாயப்படுத்தியும் அமைந்தது.
இதற்கிடையே, டாஸ்மாக் நிர்வாகத்தில் நடைபெற்ற முந்தைய ஊழல்கள் குறித்துப் பேசிய முதலமைச்சர், ‘டாஸ்மாக் என்பது ஒரு கட்சியின் நிதியாக’ மாற்றப்பட்டிருந்தது என்று குறிப்பிட்டதும், அவையிலிருந்த திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகளுக்குத் தகுந்த பதிலடி கொடுத்தனர்.
‘மக்களின் பணத்திலிருந்து ஒரு பைசாவைக் கூட நாங்கள் தொட மாட்டோம்; மற்றவர்களையும் தொட விட மாட்டோம்; மீறித் தொட்டவர்களைச் சும்மா விடவும் மாட்டோம்’ என்று முதலமைச்சர் ஆவேசமாகப் பேசியதைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளை தெரிவிக்க வேண்டும் என குறுக்கிட்டு எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச சபையில் கடும் அமளி நிலவியது. தொடர்ந்து எதிர்கட்சி தலைவர் உதயநிதி உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அதனை தொடர்ந்து விஜய் ‘அப்பாவைக் காணோம்’ என்ற குட்டி ஸ்டோரி மூலம் அவர்களின் விமர்சனங்களைச் சம்பந்தமில்லாதவை என எள்ளி நகையாடினார்.
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசிய குட்டிக்கதைக்கு பதிலடியாக, அவரது குடும்ப விவகாரத்தைக் குறிப்பிட்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் கடுமையான தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர். முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர, மின்வெட்டு, விவசாயிகள் பிரச்சினை, மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு, வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது. செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும். ஆகவே, நடிகர் விஜய் என்பதை மறந்து, இனியாவது தமிழ்நாட்டு முதலமைச்சராக நடந்து கொள்ள வேண்டும் என்று விஜய்யின் தனிப்பட்ட குடும்ப விவகாரத்தைக் குறிப்பிட்டு மிகக் கடுமையான பர்சனல் அட்டாக்கை உதயநிதி ஸ்டாலின் தொடுத்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்த விமர்சனத்தைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த திமுகவின் முன்னாள் அமைச்சர் சிவசங்கரும் முதலமைச்சர் விஜய் மீது மிகக் கடுமையான தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அப்போது அவர், இசை நிகழ்ச்சி நடைபெறும்போது குட்டிக்கதை சொல்வது போல இன்றும் குட்டிக்கதை சொல்கிறார் முதல்வர் விஜய். மகன் என்றால் மு.க.ஸ்டாலின் போல இருக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.
ஆனால், உங்கள் குடும்ப பிரச்சனை பற்றி அனைவருக்கும் தெரியும். கணவனைக் காணவில்லை என்று மனைவி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளதாகவும், அப்பாவைக் காணாமல் மகனும் மக்களும் தவித்துக்கொண்டிருக்கும் சூழல் நிலவுவதாகவும் குறிப்பிட்டார். எங்களுக்கு அறிவுரை கூறும் வேலையை முதலமைச்சர் நிறுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் குடும்பத்தை முதலில் பாருங்கள், அடுத்தவரை குறை சொல்வதை பிறகு பார்க்கலாம். இத்தகைய குடும்பப் பின்னணி இருக்கும் போது, அதையெல்லாம் விடுத்துவிட்டு முதலமைச்சர் விஜய் மேடையில் அப்பாவைப் பற்றிய கதைகளைக் கூறிக்கொண்டிருக்கிறார் என்று சாடினார்.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் 'எங்கப்பா உங்கப்பாவ காணோம்' என ஒரு குட்டிக் கதை சொல்லியிருந்தார். அதாவது, முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையிலேயே இல்லை என்பதை சைலண்டாக விமர்சித்திருந்தார்.
இதற்கு உதயநிதி ஸ்டாலின் தற்போது விஜய்யின் விவாகரத்து வழக்கை குறிப்பிட்டு பதிலடி கொடுத்துள்ளார். செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு அவரது மனைவி சங்கீதா வழக்கு தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
திமுகவினர், விஜய்யின் தனிப்பட்ட குடும்ப விவகாரத்தைக் குறிப்பிட்டு மிகக் கடுமையான பர்சனல் அட்டாக்கை செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் மோதல்களுக்காக ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசுவது அநாகரீகம், கண்ணியமற்ற, தரம் தாழ்ந்த செயல் என்று பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.