இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனின் அன்றாட வாழ்விலும் பிரிக்க முடியாத அங்கமான 'ஆதார்' கார்டு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (Unique Identification Authority - UIDAI) வழங்கப்படும் 12 இலக்க தனித்துவமான அடையாள எண்ணாகும். ஆதார் கார்டு என்பது தற்போது இந்தியாவில் இந்த முகவரியில் வசிக்கிறோம் என்பதற்கான அடையாள ஆவணம் மட்டுமே.
இந்தியாவில் அடையாளம் மற்றும் முகவரிக்கான ஆதாரமாகச் செயல்படும் ஆதார் கார்டு பத்திரபதிவு முதல் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவது வரை என அனைத்து இடங்களிலும் முன்னிலைப்படுத்தப்படுகிறது. அதேபோல் வங்கி முதல் டிக்கெட் பதிவு வரை எங்கே சென்றாலும், நம்மிடம் கட்டாயம் கேட்கப்படும் ஒரு ஆவணம் - ஆதார் கார்டு அல்லது ஆதார் கார்டு எண்.
இந்தியாவில் வசிக்கும் எவரொருவரும் கட்டாயம் ஆதார் கார்டு பெற்றிருக்க வேண்டும். ஆதார் கார்டை வெறுமனே குடியுரிமைக்கான ஆவணம் இல்லை என்று மட்டும் சொல்லிவிட முடியாது. பெயர், பிறந்த தேதி, முகவரி, பாலினம், புகைப்படம், கைரேகைகள், கருவிழி உள்ளிட்ட தகவல்கள் மூலம் ஒரு குடியிருப்பாளரை ஆதார் அடையாளம் காட்டுகிறது. ஆதார் என்பது ஒரு அடையாளங்காட்டியாக விளங்குகிறது.
தற்போது இந்தியாவில் அனைத்து துறைகளும் டிஜிட்டல் என்பதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. கையிலேயே கிடைக்கும் டிஜிட்டல் வசதி மூலம் மக்கள் தங்களுடைய பெரும்பாலான ஆதார் சேவைகளை வீட்டிலிருந்தே செய்து கொள்கின்றனர். இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் மக்கள் ஆதார் அட்டையில் மாற்றங்கள் செய்ய சிரமப்படக்கூடாது என்பதற்காகவே கொண்டு வந்தது தான் "mAadhaar" ஆப்.
ஆனால் விரைவில், தற்போதுள்ள எம்ஆதார் (mAadhaar) ஆப் விரைவில் நிறுத்தப்பட உள்ளதாகவும், எனவே சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஆதார் ஆப்பிற்கு (Aadhaar App) மாறும்மாறும் பயனர்களை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த புதிய அப்ளிகேஷனை ஆண்ட்ராய்டு மொபைலாக இருந்தால் கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் போன்களாக இருந்தால் ஆப்பிள் ஆப் ஸ்டோர் போன்றவற்றில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
இதுகுறித்து யுஐடிஏஐ எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ பதிவில், எம்ஆதார் ஆப் விரைவில் நிறுத்தப்படவுள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் புதிய ஆதார் ஆப் வேகமான மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் பயணத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், பிராந்தியங்கள் முழுவதும் மேம்பட்ட அணுகலுக்காக 13 இந்திய மொழிகளில் கிடைக்கும் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது.
புதிய ஆதார் ஆப்பில், QR Code அடிப்படையிலான ஆதார் பகிர்வு மற்றும் ஆஃப்லைன் அடையாள சரிபார்ப்புக்கான ஆதரவாகும். சமீப காலமாக நடக்கும் மோசடி சம்பவங்களை கருத்தில் கொண்டு ஆதார் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பயனர்கள் தங்கள் ஆதார் எண்ணை வெளிப்படுத்தாமல் தங்கள் அடையாளத்தை சரிபார்க்க அனுமதிக்கிறது.
இதன் மூலம், பயனர்கள் தங்கள் புகைப்படம், பெயர், வயது, பாலினம், மொபைல் எண், முகவரி அல்லது ஆதார் ஸ்டேட்டஸ் உட்பட, தாங்கள் பகிர விரும்பும் தகவல்களை துல்லியமாக தேர்ந்தெடுக்க முடியும் என்பதுடன் அடையாள சரிபார்ப்புக்காக அங்கீகரிக்கப்பட்ட முனையங்களில் ஸ்கேன் செய்யக்கூடிய ஒரு QR Codeஐயும் இந்த ஆப் உருவாக்குகிறது.
அங்கீகரிக்கப்படாத பயன்பாட்டை தடுக்க, ஒரு பயனரின் கைரேகை, முகம் மற்றும் கருவிழி அங்கீகாரத் தரவை தேவைப்பட்டால், லாக் செய்யவும், பின்னர் அந்த லாக்கை நீக்கவும் இந்த ஆப்பை பயன்படுத்தலாம். இதனால் யாரும் உங்களுடைய தகவல்களை பார்க்க முடியாது.
ஆதார் உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்கள் மற்றும் முகவரிகளை நேரடியாக புதுப்பிக்கவும் இந்த ஆப் பயனர்களை அனுமதிக்கிறது. மேலும் ப்ரொபைல் செக்ஷன் (Profile section) மூலம் பயனர்கள் தங்கள் அக்கவுண்ட்களில் ஐந்து குடும்ப உறுப்பினர்கள் வரை சேர்க்க முடியும். புதிய ஆதார் ஆப் வழியாக பயோமெட்ரிக் லாக் கட்டுப்பாடுகளும் அணுக கிடைக்கும் என்பது கூடுதல் சிறப்பு அம்சமாகும்.
பழைய எம்ஆதார் ஆப்பில் சேமிக்கப்பட்ட தரவுகள், புதிய ஆதார் ஆப்பிற்கு தானாகவே மாற்றப்படுமா, இல்லையா என்பது குறித்து யுஐடிஏஐ தெளிவுபடுத்தவில்லை என்பதால் தற்போதுள்ள பயனர்கள், புதுப்பிக்கப்பட்ட ஆப்பை பதிவிறக்கம் செய்த பிறகு, உங்களுடைய விபரங்களை மீண்டும் ஒருமுறை பதிவு செய்து ப்ரொபைலை செட்டப் செய்வது அவசியம்.