

தமிழ்நாட்டில் தகுதி வாய்ந்த 1.31 கோடி குடும்பத் தலைவிகளுக்கு உதவித்தொகை மற்றும் கோடை சிறப்புத் தொகை என்ற வகையில் அரசு ₹5000 வழங்கி பெண்களை மகிழ்வித்தது. அந்த வழியில் தற்போது புதுச்சேரி (Puducherry) அரசும் பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இது அங்குள்ள பெண்களுக்கு 'ஜாக்பாட்' அடித்தது போன்ற மகிழ்ச்சியைத் தந்துள்ளளது.
புதுச்சேரி லெப்டினன்ட் கவர்னர் கே. கைலாஷ்நாதன் (K. Kailashnathan),வறுமைக் கோட்டிற்கு கீழ் (BPL) உள்ள குடும்பங்களில் உள்ள பெண் குடும்பத் தலைவர்களுக்கு மாதம் ₹2,500 வீதம் 2 மாதங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அதாவது மொத்தம் ₹5,000 ஒவ்வொரு பயனாளிக்கும் கிடைக்கும் .இதன் மூலம் புதுச்சேரியில் உள்ள சுமார் 63,000 பெண் குடும்பத் தலைவர்கள் இந்த உதவியை பெற உள்ளதாக கூறப்படுகிறது. Direct Benefit Transfer (DBT) முறையில் பெண்களின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்பட உள்ளது.
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களின் பெண் தலைவர்கள் மற்றும் அரசின் சமூக பாதுகாப்பு உதவி பெறுபவர்கள் இதற்குத் தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் 63,000 குடும்பத் தலைவிகள் இந்த நிதியுதவியைப் பெறவுள்ளனர்.
புதுச்சேரியில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள மாதாந்திர நிதியுதவித் திட்டத்தின் கீழ் ஒரு மாதத்திற்கு ரூ. 2,500 வழங்கப்படுகிறது. தற்போது தேர்தல் வரவுள்ளதால், அடுத்த இரண்டு மாதங்கள், அதாவது மார்ச் மற்றும் ஏப்ரல் தொகையைச் சேர்த்து மொத்தம் ரூ. 5,000 ஆக ஒரே தவணையில் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
பெண்கள் தங்களின் குடும்ப செலவுகளை சமாளிக்க உதவும் விதத்திலும், பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும், குடும்ப வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கவும் இத்தொகை வழங்கப்படுவதன் நோக்கமாக சொல்லப்படுகிறது.
சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழகத்தில் 3 மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியிலும் மகளிர் உதவித்தொகை முன்கூட்டியே வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே விதவைப் பெண்கள் ஓய்வூதியம், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கான மாதாந்திர உதவித்தொகை, கர்ப்பிணிப் பெண்களுக்கான நிதி உதவி, 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஓய்வூதியம் மற்றும் சுய உதவிக்குழுக்களுக்கான உதவிகள் எனப் பல திட்டங்களைப் புதுச்சேரி அரசு முன்னெடுத்து வருகிறது. அந்த வரிசையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த ₹5,000 நிதியுதவியும் பெண்களுக்குப் பெரும் பக்கபலமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.