

பத்தாவது டி20 உலகக்கோப்பையின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று இரவு 7:00 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசததில் வீழ்த்தி, 4வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது இந்தியா.
கடந்த 2022 உலகக்கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்தும், 2024-ல் இந்தியாவும் வென்றன. இந்நிலையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக இவ்விரு அணிகளும் அரையிறுதியில் மோதுவதால், இறுதிப் போட்டிக்கு தகுதி பெறப் போவது யார் என்ற எதிர்பார்ப்பில் போட்டி தொடங்கியது.
இரண்டாவது அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் பௌவுலிங்கை தேர்வு செய்தார். இதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. இந்த உலகக்கோப்பை தொடர் முழுவதும் சொதப்பி வரும் அபிஷேக் சர்மா, அரையிறுதிப் போட்டியிலும் 9 ரன்களில் வெளியேறி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார்.
அடுத்து வந்த இஷான் கிசன், சஞ்சு சாம்சன் உடன் ஜோடி சேர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் சஞ்சு சாம்சன் கொடுத்த எளிதான கேட்ச்சை, இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் தவற விட்டார். இதன் விளைவாக இங்கிலாந்து பௌலர்களின் பந்துவீச்சில் பவுண்டரியும், சிக்ஸர்களுமாக விளாசி 89 ரன்களைக் குவித்தார் சாம்சன்.
இஷான் கிஷன் 39 ரன்களும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 11 ரன்களிலும் வெளியேற இந்தியாவின் ரன் டேட் குறையாமல் பார்த்துக் கொண்டார் சிவம் துபே. கடைசி ஓவர்களில் இந்தியா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், அடுத்தடுத்து விக்கெட்டுகளும் வீழ்ந்தன.
சிவம் துபே 43, திலக் வர்மா 21 மற்றும் ஹர்திக் பாண்டியா 27 ரன்களில் வெளியேறினர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 253 ரன்களைக் குவித்து அசத்தியது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக வில் ஜேக்ஸ் மற்றும் அதில் ரஷித் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அடுத்ததாக 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கியது இங்கிலாந்து அணி. தொடக்க வீரர் ஃபிலிப் சால்ட் 5 ரன்களிலும், அடுத்து வந்த கேப்டன் ஹாரி புரூக் 7 ரன்களிலும் அவுட் ஆக, ஜாஸ் பட்லர் மட்டும் நம்பிக்கை அளிக்கும் விதமாக விளையாடினார்.
வருண் சக்கரவர்த்தியின் முதல் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து அசத்தினார் ஜேகப் பெத்தல். ஆனால் அதே ஓவரில் பட்லர் தனது விக்கெட்டை 25 ரன்களுக்கு பறிகொடுத்து வெளியேறினார். பவர்பிளே முடிவில் இங்கிலாந்து அணி 68 ரன்களை குவித்தாலும், 3 விக்கெட்டுகளை இழந்தது.
அடுத்து வந்த வில் ஜேக்ஸ் உடன் ஜோடி சேர்ந்த ஜேகப் பெத்தல், இந்திய பந்துவீச்சை சிதறடித்தார். இதனால் இங்கிலாந்தின் ரன்ரேட் எகிறியது. ஒரு கட்டத்தில் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொள்ளவே, யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியது.
தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தவித்த இங்கிலாந்து அணி, ஜேக்கப் பெத்தலின் அதிரடியான ஆட்டத்தால் மீண்டும் ஆட்டத்திற்குள் வந்தது. 14வது ஓவரில் அர்ஷ்தீப் சிங், வில் ஜேக்ஸ் விக்கெட்டை எடுத்ததும் இந்திய வீரர்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர். அப்போது இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்களை எடுத்திருந்தது.
கடைசி 6 ஓவர்களில் 82 ரன்கள் தேவைப்பட, இங்கிலாந்து வசம் 5 விக்கெட்டுகளே இருந்தன. இருப்பினும் ஜேக்கப் பெத்தல் களத்தில் இருந்ததால், இங்கிலாந்து அணி நம்பிக்கையுடன் இருந்தது.
ஒருபுறம் இந்திய பௌலர்கள் ரன்களை வாரி வழங்க, பும்ரா மட்டும் கட்டுக்கோப்பாக பந்து வீசினார். கடைசி 2 ஓவர்களில் இங்கிலாந்து வெற்றி பெற 39 ரன்கள் தேவைப்பட்ட போது, 19வது ஓவரை பாண்டியா வீசினார். முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து சதத்தை பூர்த்தி செய்தார் ஜேக்கப் பெத்தல்.
கடைசி வரை போராடிய இங்கிலாந்து அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 246 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. மார்ச் 8 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா.