

ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 3 கப்பல்கள் மீது ஈரான் திடீரென தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து ‘ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்துவிட்டது. ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது வீணானது’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். இதனால் வளைகுடா நாடுகளில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த மாதம் 17-ம் தேதி போர் நிறுத்தம் தொடர்பான அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த அமைதி ஒப்பந்தத்தில் இரு தரப்பு போர் நிறுத்தம், கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்துக்கு ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு, ஈரான் மீதான தடைகள் நீக்கம் உட்பட 14 அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.
இதையடுத்து, ஹார்முஸ் ஜலசந்தி கப்பல் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது. எனினும், ஈரான் கடலோர பகுதியில் உள்ள வழித்தடத்தில்தான் செல்ல வேண்டும், ஓமன் கடற்கரையை ஒட்டி ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து சென்றால் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தது.
இந்நிலையில், ஈரான் எச்சரிக்கையை மீறி 3 எண்ணெய் கப்பல்கள் ஓமன் கடற்கரையை ஒட்டி ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த நிலையில் அவற்றின் மீது ஈரான் ராணுவத்தினர் திடீரென தாக்குதல் நடத்தினர்.
அதற்கு பதிலடியாக ஈரானின் 80 இடங்களில் அமெரிக்கா ஜூலை 7-ம்தேதி குண்டு வீசி தாக்குதல் நடத்திய நிலையில் அந்த தாக்குதல்களுக்குப் பதிலடியாக, பஹ்ரைன் மற்றும் குவைத் முழுவதும் உள்ள அமெரிக்க இராணுவ இலக்குகள் மீது இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரான்மீது மீண்டும் எண்ணெய் விற்பனைக்கு தடை விதித்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளதால் வளைகுடா நாடுகளில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈரானின் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச்சடங்கு நடந்து வரும் வேளையில், இந்த மோதல் வெடித்து மீண்டும் உலகப் பொருளாதாரத்தையே உலுக்கியுள்ளது.
இதனிடையே ஈரானுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் சுமார் 5 சதவீதம் உயர்ந்து, ஒரு பேரல் 78.09 டாலராக அதிகரித்தது. அதுமட்டுமின்றி இந்த இருநாடுகளுக்கிடையே மீண்டும் போர் மூளும் என்ற அச்சத்தால் இந்தியச் சந்தைகள் மட்டுமல்லாது, உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்தன.
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் பல இந்தியக் கப்பல்கள் சிக்கியுள்ளன. இப்பகுதியில் தொடர்ந்து நீடிக்கும் பதற்றம் இந்தியாவின் சர்வதேச வர்த்தகத்தைப் பாதிக்கிறது.
ஈரான் மீது அமெரிக்கா நடத்தியுள்ள தாக்குதல்களில் ஈரானின் சபஹார் (Chabahar)துறைமுகம் குறிவைக்கப்பட்டுள்ளது. சபஹார் மீதான தாக்குதல் என்பது இந்தியாவை நேரடியாகப் பாதிக்கக்கூடியது. ஏனென்றால் இந்த சபஹார் துறைமுகத்தில் பல ஆயிரம் கோடியை இந்தியா முதலீடு செய்திருந்தது.
இப்போது இந்தியா அந்த துறைமுகத்தில் நேரடியாக முதலீடு செய்வதில்லை என்றாலும், இந்த தாக்குதல் இந்தியாவின் எதிர்கால திட்டங்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
குறிப்பாக, பாகிஸ்தானைத் தவிர்த்து, ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பாதையை இது நேரடியாகப் பாதிக்கிறது. இதை விட முக்கியமாக இந்தியா - ஈரான் - ரஷ்யா நாடுகளை இணைக்கும் சர்வதேச போக்குவரத்து வழித்தடத்தின் முக்கிய மையமாகவும் சபஹார் துறைமுகம் கருதப்பட்டது. இது இந்தியாவின் பிராந்திய பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களுக்கு ஒரு பெரும் பின்னடைவாகும்.
மத்திய ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தானுடன் வர்த்தகம் செய்ய இந்தியா சபஹார் துறைமுகத்தை பெரிதும் நம்பியுள்ளது. மேலும் தெற்காசியா மற்றும் யூரேசியா இடையே சரக்கு போக்குவரத்திற்கான செலவைக் குறைக்கவும், பயண நேரத்தைக் குறைக்கவும் இந்த வழித்தடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சபஹார் துறைமுகத்தை மேம்படுத்தும் பணியில் இந்தியா இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறது.
இத்துறைமுகத்தின் போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கோபுரம், சரக்கு முனையங்கள் மற்றும் கிடங்குகள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலால், இந்தியா மேற்கொண்ட முதலீடுகள் கேள்விக்குறியாகியுள்ளன. சபஹார் திட்டம் என்பது பிராந்தியத்தில் சீனாவின் 'பெல்ட் அண்ட் ரோட்' திட்டத்திற்கு மாற்றாக இந்தியா உருவாக்கிய ஒரு மூலோபாயத் திட்டமாகும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்த நிலையில், இந்தியா தனது 120 மில்லியன் டாலர் முதலீட்டை பாதுகாக்கும் வகையில் சபஹார் துறைமுகத்தில் தனது பங்குகளை தற்காலிகமாக உள்ளூர் ஈரான் நிறுவனத்திடம் ஒப்படைத்ததாக தகவல்கள் வெளியாகின.
எதிர்காலத்தில் நிலைமை சீரடையும் போது மீண்டும் இதில் நுழையலாம் என்ற அடிப்படையில், தற்காலிகமாக மட்டுமே இந்தியா இதனை ஒப்படைத்திருந்தது. தற்போது அமெரிக்கா அந்தத் துறைமுகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ள சூழலில், இந்தியா நேரடியாக அதனை நிர்வகிக்காததால் இந்தத் தாக்குதலால் இந்தியாவிற்கு உடனடியாக பெரிய அளவில் பாதிப்பில்லை என்றாலும் இந்தத் தாக்குதல் இந்தியாவின் நீண்ட கால திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக அமையும் என்றே நிபுணர்கள் கருதுகின்றனர்.
தற்போது தான் உலக நாடுகள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், மீண்டும் ஆரம்பித்துள்ள போர் பதற்றத்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுமோ என்ற அச்சம் உலக அரங்கில் எழுந்துள்ளது.