

குழந்தைகள் மற்றும் டீன்-ஏஜ் வயதினரின் மனநலப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களை (சமூக வலைத்தளம்) பயன்படுத்துவதற்கான தினசரி கால அளவை நிர்ணயிக்க மெட்டா (Meta) நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது. இதற்காக மெட்டா நிறுவனம், தினசரி 2 மணி நேர வரம்பை (Daily 2-hour time limit) நிர்ணயித்துள்ளது. 18 வயதுக்குட்பட்டோர் 2 மணி நேரத்திற்குப் பிறகு செயலிகளைப் பயன்படுத்த முடியாது. மேலும், நள்ளிரவு முதல் காலை 6 மணி வரை பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களின் அடிமைத்தனத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக அமெரிக்காவின் 29 மாநிலங்கள் தொடர்ந்த வழக்கில், சுமார் 18 பில்லியன் டாலர் (சுமார் ஒரு லட்சத்து 71 ஆயிரம் கோடி ரூபாய்) இழப்பீடு வழங்க மெட்டா சம்மதித்துள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சமரச உடன்பாட்டின் ஒரு பகுதியாகவே இத்தகைய கடுமையான கட்டுப்பாடுகளை மெட்டா கொண்டு வந்துள்ளது.
அதனை தொடர்ந்து குழந்தைகள் மற்றும் சிறார்கள், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளப் பக்கங்களைப் பயன்படுத்த புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வர அமெரிக்க நீதிமன்றத்தில் மெட்டா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
சிறார்கள் அதிக நேரம் சமூக வலைத்தளப் பக்கங்களில் நேரத்தை செலவிடுவதால் ஏற்படும் மிகப்பெரிய அச்சுறுத்தல்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகள் மற்றும் பதின்மவயதினரை ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் அதிக நேரம் செலவிட ஊக்குவிக்கும் அம்சங்களுடன் மெட்டா வடிவமைத்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இதனால் குழந்தைகள் மற்றும் சிறார்களின் மனநலன், உடல்நலன் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மெட்டா நிறுவனம், சமூக வலைத்தளங்களை பெற்றோரின் கட்டுப்பாட்டுடன் பிள்ளைகள் பார்க்கும்வகையில் வடிவமைக்கவும், மிகப்பெரிய நேரக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தவும் உள்ளது.
புதிய நேரக் கட்டுப்பாடுகள் :
* பதினெட்டு வயதுக்குக் குறைவானவர்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய இரண்டையும் சேர்த்து ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 2 மணி நேரம் மட்டுமே பயன்படுத்த முடியும். (ஒரு செயலிக்கு 2 மணி நேரம் அல்ல).
* குறிப்பாக நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை (Nighttime Blocks) இவ்விரண்டு சமூக வலைத்தளங்களையும் சிறுவர்கள் பயன்படுத்த முடியாதபடி முழுமையாக முடக்கப்படும்.
இந்தத் தீர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மெட்டா நிறுவனம், எந்தவொரு தவறு அல்லது சட்டரீதியான பொறுப்பையும் ஒப்புக்கொள்ளவில்லை.
* பள்ளி இயங்கும் நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 8:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை மொபைலுக்கு வரும் புஷ் நோட்டிபிகேஷன்கள் (Push Notifications) முற்றிலும் முடக்கப்படும்.
* 13 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் தவறான பிறந்த தேதியை குறிப்பிட்டு கணக்கு தொடங்குவதை தடுக்க செயற்கை நுண்ணறிவு மூலம் வயது சரிபார்க்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
* செயலியைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது 15-வது நிமிடம், 60-வது நிமிடம் மற்றும் 90-வது நிமிடங்களில் ஸ்க்ரோலிங் செய்வதைத் தடுக்கும் வகையில் கட்டாய விழிப்பூட்டல் இடைவேளைகள் (Productive Pauses) தோன்றும்.
அதாவது குழந்தைகள், சிறார்கள் தொடர்ந்து சமூக வலைத்தளத்தைப் பார்க்கும்போது இடைவேளை எடுக்கும்படி தகவல்கள் அவ்வப்போது வரும் என்றும் மெட்டா நிறுவனம் கூறியுள்ளது.
* இந்த 2 மணி நேரக் கட்டுப்பாட்டை நீக்கவோ அல்லது மாற்றவோ வேண்டுமெனில் பெற்றோரின் டிஜிட்டல் அனுமதி (Parental Consent) கட்டாயமாகும்.
* சிறுவர்களின் மனநலனைப் பாதிக்கும் வகையிலான, முக அமைப்பை மாற்றும் செயற்கை அழகு ஃபில்டர்கள் (Cosmetic Procedure Filters) இயல்பாகவே தடை செய்யப்படும்.
* மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் மனப்பான்மையைக் குறைக்க, பதிவுகளுக்கான லைக்ஸ் (Likes) மற்றும் ரியாக்ஷன்கள் சிறுவர்களின் கணக்குகளில் மறைக்கப்படும்.
* தற்கொலை, சுயக்காயம், மற்றும் மனச்சோர்வைத் தூண்டும் உள்ளடக்கங்கள் (Content) சிறுவர்களுக்குக் காட்டப்படாது.
* இந்த புதிய விதிகள் தற்போதைக்கு அமெரிக்காவில் உள்ள சிறுவர்களுக்கு முதற்கட்டமாகச் செயல்படுத்தப்பட உள்ளன.
விரைவில் TikTok, YouTube போன்ற பிற நிறுவனங்களும் இதைப் போன்ற கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வாய்ப்புள்ளது.