

தமிழகத்தில் அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ள சூழலில், திமுக மற்றும் தவெக கூட்டணி கட்சிகள் இடையே வாக்குவாதம் முற்றி வருகிறது. இதற்கு முன்னதாக அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்தது.
திமுக கூட்டணியில் தேமுதிக-வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது விசிகவுக்கு பிடிக்கவில்லை. ஏனெனில் நீண்ட காலமாக திமுக கூட்டணியில் இருந்த விசிகவுக்கு 4 தொகுதிகளே ஒதுக்கப்பட்டன. இதில் விசிக 2 இடங்களிலும், தேமுதிக 1 இடத்திலும் வென்றது. மேலும் தேமுதிகவுக்கு ஒரு எம்பி சீட்டும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் தேர்தல் முடிவுக்குப் பிறகு திமுக கூட்டணியில் இருந்து பிரிந்து தவெக கூட்டணியில் இணைந்தது காங்கிரஸ், ஐயூஎம்எல், மதிமுக மற்றும் விசிக. தமிழக அரசியலில் தவெக வரவுக்குப் பிறகு நடந்த மிகப்பெரிய மாற்றங்களில் இதுவும் ஒன்று.
சமீபத்தில் திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறியதற்கு மு.க.ஸ்டாலின் தான் காரணம் என திருமாவளவன் தெரிவித்திருந்தார். மேலும் கூட்டணியில் புதிதாக இணைந்த கட்சிகளுக்கு திமுக அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் ஒரு அமைச்சர் பதவிக்காக திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவீர்களா என விசிகவினரை விமர்சித்தார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். மேலும் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் திமுகவிற்காக நான் பிரச்சாரம் செய்வேன் எனவும், எங்கள் ஆதரவு என்றும் திமுகவிற்கே என்றும் அவர் கூறினார்.
தவெக அரசில் விசிக, ஐயூஎம்எல் மற்றும் காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளைச் சேர்ந்த 4 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விசிக குறித்த பிரேமலதா விஜயகாந்தின் பேச்சுக்கு விசிக எம்எல்ஏ-வும், அமைச்சருமான வன்னி அரசு பதிலடி கொடுத்துள்ளார்.
அமைச்சர் வன்னி அரசு கூறுகையில், “ஒரு எம்பி பதவிக்காக திமுகவுடன் கூட்டணி வைத்தது தேமுதிக. பாஜகவுடன் கடந்த காலங்களில் செயல்பட்டவர்கள், யாருடன் கூட்டணி என கடைசி வரை பேரம் பேசியவர்கள் தேமுதிக பெருமக்கள். அவர்கள் எங்களைப் பார்த்து குறை சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.
நீண்ட காலமாக கூட்டணியில் இருந்த எங்களுக்கு குறைவான சீட்டுகளை கொடுத்து விட்டு, புதிதாக வந்த தேமுதிகவிற்கு அதிக சீட்டுகளை கொடுத்த திமுக தலைமையை தான் எங்கள் தலைவர் திருமாவளவன் விமர்சித்தார். இது தேமுதிகவை சிறுமைப்படுத்தவோ அல்லது தேமுதிக மீதான விமர்சனமோ அல்ல. இது புரியாமல் எங்களை சாடுவது அவரின் அறியாமையைக் காட்டுகிறது” எனத் தெரிவித்தார்.