

தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை வென்றது. இருப்பினும் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற சூழலில் கூட்டணி கட்சிகளின் ஆதரவை நாடியுள்ளது தவெக. இதன்படி காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது ஆதரவை தமிழக வெற்றிக் கழகத்திற்கு கொடுத்துள்ளனர். இதன்படி தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் பலம் 116 ஆக உயர்ந்துள்ளது.
ஆட்சி அமைக்க இன்னும் 2 எம்எல்ஏக்கள் தேவை என்ற சூழலில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியில் இருந்து ஆதரவளிப்பதாக நேற்று தெரிவித்திருந்தார். இருப்பினும் எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை தமிழக வெற்றிக் கழகத்திடம் இன்னும் சமர்ப்பிக்காத சூழலில், அது குறித்த முடிவை இன்று அறிவிப்பதாக தெரிவித்தார்.
இதன் காரணமாக சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தின் முன்பு, ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.
இதற்கு முன்னதாக எங்களை யார் ஓரங்கட்ட நினைத்தாலும், நாங்களே மையம் என்பதை என விசிக எம்எல்ஏ வன்னியரசு தெரிவித்திருந்தார். இந்நிலையில் திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என விசிக உயர்மட்ட கூட்டத்தில் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதே விசிக-வின் நீண்டகால கோட்பாடு என அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் ஆளுநர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதில் விசிக உறுதியாக உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். ஏற்கனவே அமமுக வைத்த குற்றச்சாட்டால் சட்ட சிக்கலை எதிர்கொள்ள வேண்டிய சூழலில், தவெக இருக்கிறது. இந்நிலையில் விசக-வின் ஆதரவு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரம் அரசியல் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. விசிக அலுவலகத்திற்கு விஜய் வரவுள்ளதாக கூறப்பட்டு வந்த சூழலில், தலைமை அலுவலகத்தில் சற்று முன் புதிய SOFA வந்திறங்கியுள்ளது.
தவெக ஆட்சி அமைய விசிக ஆதரவு அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸும் வலியுறுத்தி இருக்கிறார். இந்நிலையில் தனது முடிவை மாலை 4 மணிக்கு அறிவிப்பேன் என திருமாவளவன் தெரிவித்தார்.
இடதுசாரி கட்சிகளின் முடிவைப் பொறுத்தே விசிக-வின் முடிவு அமையும் என திருமாவளவன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்தியன் கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக-விற்கு ஆதரவு அளித்துள்ள நிலையில், விசிக-வும் தற்போது தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். இனி தமிழ்நாட்டில் விஜய் ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது.
ஏற்கனவே 3 முறை ஆளுநரை சந்தித்த விஜய், தற்போது பெரும்பான்மை எம்எல்ஏ-க்கள் கிடைத்திருப்பதால் இன்று மீண்டும் ஆளுநரை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இன்று இரவு 7 மணிக்கு ஆளுநர் கேரளாவிற்கு புறப்பட்டு செல்ல இருப்பதால் அதற்குள் அவரை விஜய் சந்திப்பது சாத்தியமா என்று கேள்வியும் எழுந்துள்ளது. கேரளாவில் சட்டமன்ற அரசு அமைந்த பிறகே அவர் தமிழகம் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.