

வெனிசுலாவில் அடுத்தடுத்து நிகழ்ந்த சக்திவாய்ந்த இரண்டு நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 164 ஆக அதிகரித்துள்ளதாகவும், 970-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், 30,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக அஞ்சப்படுவதாகவும் அந்நாட்டின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.
தென் அமெரிக்க கண்டத்தின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு அழகான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க நாடு வெனிசுலா. இந்நிலையில் இங்கு, வரலாற்றில் இல்லாத அளவிற்கு அடுத்தடுத்து 2 சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு அந்நாட்டையே உலுக்கி போட்டுள்ளது.
வெனிசுலாவில் இந்திய நேரப்படி நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 என இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகின. முதல் நிலநடுக்கம் தலைநகர் காரகஸில் இருந்து மேற்கே சுமார் 168 கி.மீ. தொலைவில் உள்ள மோரோன் என்ற பகுதியை மையமாகக் கொண்டு 22 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது.
முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட ஒரு நிமிடம் கழித்து இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.5 ரிக்டர் அளவுகோள் கொண்ட இந்த நிலநடுக்கம், மோரோனுக்கு தென் மேற்கே 16 கி.மீ. தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. 1900-க்குப் பிறகு வெனிசுலாவைத் தாக்கிய மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது குறிப்பிடப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தால் கராகஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் கடுமையாக ஆட்டம் கண்டன. எங்கும் மரண ஓலமாக கேட்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள், தங்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் என அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இடிந்து விழுந்த கட்டிடங்களில் மீட்புப் படையினர் தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.
எனினும், இந்த நிலநடுக்கம் காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தனது கணிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு பூமி அதிர்வதற்கு சில நொடிகளுக்கு முன்பாகவே, அங்குள்ள பல லட்சம் ஆன்ட்ராய்டு (Android) பயனர்களுக்கு கூகுள் எச்சரிக்கை மெசேஜ் அனுப்பியது. இது பலரது உயிரைக் காப்பாற்ற உதவியதாக கூறப்படுகிறது.
கூகுள் நிறுவனம் ஆன்ட்ராய்டு போன்களில் உள்ள 'Accelerometer' கருவியை மினி நிலநடுக்க மானிகளாக (mini seismometers) பயன்படுத்துகிறது. நிலநடுக்கத்தின் போது முதலில் ஏற்படும் அதிவேக அலைகளை (P-waves) கண்டறிந்து, அதன் தீவிரத்தை கணக்கிட்டு, நிலநடுக்கம் பூமியின் மேற்பரப்பை அடைவதற்கு சில வினாடிகளுக்கு முன்பே (சில நொடிகள் அல்லது நிமிடங்கள்)பயனர்களுக்கு எச்சரிக்கை மெசேஜ் மற்றும் சத்தமான அலாரத்தை கூகுள் எழுப்புகிறது.
கூகுள் நிறுவனம் இந்த நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணிக்கவில்லை. மாறாக, அது நிலநடுக்கத்தின் ஆரம்பகட்ட அறிகுறிகளைக் கண்டறிந்து, மிகக் கடுமையான அதிர்வுகள் மக்களை வந்தடைவதற்கு முன்பாகவே பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ளவர்களை விரைவாக எச்சரித்தது.
அதாவது, நிலநடுக்கத்தின் போது உருவாகும் முதல் அதிர்வலைகளை (P-waves) அருகில் உள்ள ஆண்ட்ராய்டு போன்களில் இருக்கும் சென்சார்கள் கண்டறிகின்றன. இவை கடும் சேதத்தை ஏற்படுத்தும் 'S-அலைகளை' (S-waves) விட வேகமாக பயணிக்கக்கூடியவை. அதனடிப்படையில் இவை உடனடியாக கூகுளின் மையத்திற்குத் தகவல் அனுப்புகின்றன.
வெளியான அறிக்கைகளின்படி, கூகுளின் 'ஆண்ட்ராய்டு நிலநடுக்க எச்சரிக்கை அமைப்பு' (Android Earthquake Alerts System) ஆரம்ப அதிர்வுகளைக் கண்டறிந்து, அதன் மூலம் மிகவும் அழிவுகரமான நடுக்கம் பயனர்களைச் சென்றடைவதற்கு முன்பே அருகிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை செய்திகளை அனுப்பியது. பூமியின் மிகச்சிறிய அசைவுகளையும் கண்டறியக்கூடிய அதிர்வு சென்சார்கள் (Motion sensors) பொருத்தப்பட்ட பில்லியன் கணக்கான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை அடிப்படையாகக் கொண்டே இந்த தொழில்நுட்பம் செயல்படுகிறது.
இதுகுறித்து HR Anexi நிறுவனத்தின் BOTS.Ai பிரிவின் இயக்குநரான நிகார் அரோரா கூறுகையில், ‘பலர் நினைப்பது போல, கூகுள் நிலநடுக்கம் ஏற்படப்போவதை முன்கூட்டியே கணிக்கவில்லை; மாறாக, அதன் மிக ஆரம்பகட்ட அறிகுறிகளைக் கண்டறிந்து, கடுமையான நிலநடுக்கம் தொடங்குவதற்கு முன்பே எச்சரிக்கையை அனுப்பியது’ என்று விளக்கினார்.
கடந்த பல ஆண்டுகளாகவே உலகெங்கிலும் இயற்கை பேரிடர்கள் அடிக்கடி நிகழ்ந்து அதிக பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வரும் நிலையில், பாதுகாப்பான மற்றும் மீளெழுத்துத் திறன் கொண்ட சமூகங்களை உருவாக்கப் பொது நிறுவனங்களுக்கும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பு இன்றியமையாததாக இருக்கும் என்று வல்லுநர்கள் நம்புகின்றனர்.
வெனிசுலாவில் நடந்த நிலநடுக்கத்தின் போது மொபைல் போன்கள் மிகக் குறுகிய கால எச்சரிக்கையை மட்டுமே வழங்கியிருக்கலாம். ஆனால் அந்த சில வினாடி எச்சரிக்கையானது, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், திறந்தவெளிக்கு ஓடவும் பெரிதும் உதவியதாக பல பயனர்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்தனர்.