

தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் தலலமையிலான தவெக ஆட்சி அமைந்த பிறகு, முதன்முறையாக இன்று முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியுள்ளது. முன்னாள் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு வீடு உள்பட 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை இன்று அதிரடி சோதனையயில் ஈடுபட்டனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு கரூரில் சாலை போடாமலேயே போடப்பட்டதாக சுமார் 3.23 கோடி ரூபாய் ஊழல் செய்யப்பட்டுள்ளதாக எ.வ.வேலு உட்பட 11 பொறியாளர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.
அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் அளித்த 4 பக்க புகாரின் பேரில், இந்த சோதனையில் லஞ்ச ஒழிப்புத்துறை ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆட்சியில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலு கரூரில் நெடுஞ்சாலை பணிகளை மேற்கொள்ள, சங்கரானந்த் இன்ஃபோ என்ற நிறுவனத்திற்கு டெண்டரை வழங்கியிருந்தார். சுமார் ரூ.7 கோடிக்கு விடப்பட்ட இந்த டெண்டரில் முன்பணமாக ரூ.3.23 கோடி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இந்நிறுவனம் சாலை போடாமலேயே போட்டதாக கணக்கில் காட்டி இருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் பொறியாளர்கள் 11 பேரும் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதன்படி ஆழ்வார்பேட்டை மற்றும் திருவண்ணாமலையில் உள்ள எ.வ.வேலு வீடுகள் உட்பட அவருக்கு சொந்தமான கல்வி நிலையங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினர்.
அதோடு டெண்டர் எடுத்த சங்கராந்தா இன்ஃபோ நிறுவனம் மற்றும் பொறியாளர்களின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. கூட்டுச்சதி, போலி ஆவணங்கள் தயாரித்தல் மற்றும் பொதுமக்கள் பணத்தை கையாடல் செய்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் ஊழல் தடுப்புச் சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி அமைச்சர் எ.வ.வேலு, பொறியாளர்கள் கண்ணன், பூபாலன் சிங், பெரியசாமி, சத்தியபாமா, நிதிலன், ரஃபிக் முகமது, தீபிகா, கார்த்திக் மற்றும் சத்தியா ஆகியோர் மீது வழக்குப் பதிவாகியுள்ளது.
இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு டெண்டர் எடுத்த நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை பாயும். போடாத சாலையை போட்டதாக கணக்கு காட்டியதில் பணம் கைமாறி இருப்பதால், போடாத அந்த சாலை இனி போடப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கரூர் மட்டுமின்றி திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலும் சாலை அமைக்கும் பணிகளில் முறைகேடு நடந்திருப்பதாக ஜெயராமன் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இது தவிர முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பதவி காலத்தில் கட்டப்பட்ட மேம்பாலங்கள் மற்றும் சாலைகள் தரமாக உள்ளதா என ஆய்வு செய்யவும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
இந்த முடிவுகள் வந்த பிறகே லஞ்ச ஒழிப்புத் துறையின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று காலையில் முன்னாள் அமைச்சரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை என சோதனை ஈடுபட்டதற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதன்படி ஆளுங்கட்சியின் அராஜகத்திற்கு திமுக என்றும் அடிபணியாது என அவர் தெரிவித்துள்ளார்.