

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடக்க உள்ள சூழலில், தமிழக வெற்றிக் கழகம் தீவிரமான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது. விஜய்க்கு பல தரப்பில் இருந்தும் தடைகள் வந்தாலும், அவரது அரசியல் வேகம் மட்டும் குறையவில்லை. இந்நிலையில் இன்று, சட்டமன்றத் தேர்தல் வேட்பாளருக்கான நேர்காணலை தவெக தலைவர் விஜய் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் திமுகவுக்கு சவால் அளிக்கக் கூடிய ஒரே தலைவர் விஜய் தான் என அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
நாஞ்சில் சம்பத் கூறுகையில், “நேற்று திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில் எதிர்பார்த்த அளவில் கூட்டம் கூடவில்லை. மேலும் மாநாட்டில் முதல்வர் மட்டுமே 40 நிமிடங்கள் வரை பேசினார். அதோடு மாநாடும் விரைவிலேயே முடிந்து விட்டது. திமுகவுக்கு சவால் விடும் ஒரே தலைவர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மட்டும் தான்.
தமிழகத்தின் அரசியல் சூழ்நிலை மாறிக் கொண்டிருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தை பொதுமக்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர். கடந்த 1967-ல் தமிழ்நாட்டில் காங்கிரஸ் இடம் இருந்து ஆட்சியை கைப்பற்றினார் பேரறிஞர் அண்ணா. அதேபோல் 1977-ல் திமுகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றினார் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். அவ்வகையில் திமுகவிடம் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஆட்சியை நிச்சயம் கைப்பற்றுவார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான விஜய் மீதான சிபிஐ வழக்கு மற்றும் ஜனநாயகன் பட தணிக்கை விவகாரம் ஆகிய பிரச்சினைகளை சமாளித்து விஜய் மீண்டு வருவார். பிரச்சினைகளை எதிர்கொள்வது எங்களுக்கு வழக்கமானது தான்” என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்
தற்போது விஜய் தீவிரமான அரசியலிலும், வேட்பாளர் நேர்காணலிலும் ஈடுபட்டு வருவதால், இன்று ஆஜராவதில் இருந்து 15 நாட்கள் கால அவகாசம் கேட்டு சிபிஐ-க்கு கடிதம் அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சிபிஐ விசாரணையை சென்னையில் அல்லது தமிழகத்தின் வேறு ஏதேனும் ஒரு இடத்தில் நடத்த வேண்டும் என்றும் தவெக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த வேண்டுகோளை சிபிஐ ஏற்றுக் கொண்டதா அல்லது இல்லையா என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக செந்தில் பாலாஜி தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ சம்மன் அனுப்பியது குறித்து, முன்னுக்கு பின் முரணாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. வருகின்ற மார்ச் 17 அன்று நேரில் வந்து விளக்கமளிக்குமாறு சி.பி.ஐ அனுப்பிய சம்மனின் அடிப்படையில், அவர்களது கேள்விகளுக்கு நேரில் சென்று உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.