முதல்வரை தடுக்கும் திமுக.. அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு குற்றச்சாட்டு.!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: முதல்வர் விஜய் பயணத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறதா திமுக?
Nirmal kumar about Karur case
Nirmal kumar press meetImage credit: ANI
Updated on

தமிழக முதல்வரும், தவெக தலைவருமான ஜோசப் விஜய் கடந்த ஆண்டு கரூரில் நடத்திய மக்கள் சந்திப்புக் கூட்டத்தில், கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர். தற்போது வரை சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் இந்த வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என திமுக மனுத்தாக்கல் செய்தது. இதனையடுத்து இன்று உச்சநீதிமன்றத்தில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் முதல்வர் விஜய்யை கரூருக்கு செல்ல விடாமல் திமுக தடுப்பதாக அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அதோடு தேவையின்றி அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டாம் என முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜூலை 2வது வாரத்தில் முதல்வர் விஜய், கரூர் செல்லவிருப்பதாக ஏற்கனவே திட்டமிடப்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், நிதியுதவி வழங்கவும் முதல்வர் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இதன்படி இந்த வாரத்தில் முதல்வர் விஜய் கரூருக்கு செல்வதாக இருந்தது. ஆனால் அதற்குள் கரூர் வழக்கு இன்று அவசர வழக்காக விசாரிக்கப்பட உள்ளது. இதன்மூலம் முதல்வர் விஜய்யின் கரூர் பயணம் தள்ளிப் போக வாய்ப்புள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மக்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக ஒரு கடையின் மேற்கூரை சரிந்து விழுந்ததினாலும், கட்டுக்கடங்காத கூட்டத்தினாலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சுமார் 120 பேர் வரை படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்த விசாரணையை சிபிஐ மேற்கொண்டு வரும் நிலையில், தமிழக முதல்வர் விஜய், தவெக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் உள்பட அனைவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

சட்டமன்ற தேர்தல் காரணமாக இந்த வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் ஜூன் மாதத்தில் விசாரணையைத் தொடங்கியது சிபிஐ. கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த பிறகு, தவெக தலைவர் விஜய் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திக்காமல் இருந்தது விவாதத்தை ஏற்படுத்தியது.

அப்போதைய ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் இதனை வன்மையாக கண்டித்தனர். இந்நிலையில் கிட்டத்தட்ட 9 மாதங்களுக்குப் பிறகு கரூருக்கு முதல்வர் விஜய் செல்லத் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் இப்போதும் முதல்வர் கரூருக்கு செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது.

Minister Nirmalkumar
Minister Nirmalkumarimage credit-polimernews.com
இதையும் படியுங்கள்:
செம சான்ஸ்.. 2 நாளில் ரூ.2,400 சரிவு..! தங்கத்தின் விலையில் தலைகீழ் மாற்றம்.!
Nirmal kumar about Karur case

இதுகுறித்து அமைச்சர் நிர்மல் குமார் கூறுகையில், “முதல்வர் விஜய்யை கரூருக்கு செல்ல விடாமல் திமுக தடுத்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவியைக் கூட அளிக்க விடாமல் திமுக தடுக்கிறது.

விஜய் முதல்வராக இருக்கும்போதே இவ்வளவு செய்கிறார்கள் என்றால், இதற்கு முன்பு எவ்வளவு செய்திருப்பார்கள். முதல்வர் கரூர் செல்ல திட்டமிட்டு இருப்பது தெரிய வந்ததும், உடனே நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து தடுக்கப் பார்க்கிறார்கள்.

கரூர் சம்பவம் நடைபெற்றதில் இருந்து இன்று வரை முதல்வரின் வீடு மற்றும் அலுவலகத்தை திமுக தொடர்ந்து கண்காணித்து வருகிறது” என அமைச்சர் நிர்மல் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
​வெள்ளித்திரையில் முதல்வர்: அடுத்த 15 நாட்களில் நடக்கப்போகும் பிரம்மாண்டம்!
Nirmal kumar about Karur case
logo
Kalki Online
kalkionline.com