

சட்டமன்ற தேர்தலை முதன்முறையாக சந்திக்கும் தவெக தலைவர் விஜய், தமிழ்நாட்டின் முக்கிய தொகுதிகளில் பரப்புரை செய்து வருகிறார். அதிக கூட்ட நெரிசல் காரணமாக அவ்வப்போது விஜய்யின் பரப்புரை ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும் பரப்புரையைத் தீவிரப்படுத்தி வரும் விஜய், இன்று மாலை சென்னையில் பிரச்சாரம் செய்கிறார்.
இந்நிலையில் விஜய்யின் பிரச்சாரம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்கால், திருப்பூரில் பிரச்சாரத்தை முடித்துள்ள விஜய், முன்னணி தலைவர்கள் போட்டியிடும் தொகுதியில் பரப்புரை செய்யவில்லை.
விஜய்யின் பரப்புரை குறித்து இன்று சீமான் கூறுகையில், “திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் போட்டி என்று விஜய் சொல்கிறார். முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதிக்கோ அல்லது உதயநிதி போட்டியிடும் சேப்பாக்கம் தொகுதிக்கோ விஜய் பரப்பரையை மேற்கொள்ள செல்லவில்லை.
கொள்கை எதிரி என சொல்லும் பாஜக வேட்பாளர்கள் தொகுதிக்கு கூட விஜய் செல்லவில்லை. நேரடியாக என்னுடைய தொகுதியில் பரப்புரை செய்துள்ளார். அப்படி என்றால் யாருக்கு போட்டியாக விஜய் பரப்புரை செய்கிறார் என்பது தெளிவாகப் புரிகிறது” என சீமான் விமர்சித்துள்ளார்.