தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா இன்று சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து தொண்டர்கள் மத்தியில் பேச உள்ளார் தலைவர் விஜய்.
நடப்பாண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை முதன்முறையாக சந்திக்க இருக்கும் தவெக-விற்கு, மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. இதனால் குறிப்பிடத் தகுந்த அளவில் தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய மாற்றத்தை இக்கட்சி ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை தொண்டர்களுக்கு தலைவர் விஜய் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இன்று காலை 11 மணிக்கு தொடங்கும் மூன்றாம் ஆண்டு கட்சி தொடக்க விழாவிற்கு முன்னதாக விஜய் எழுதிய இந்த கடிதம், தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
சட்டமன்ற தேர்தலை வலுவான கூட்டணியுடன் சந்திக்க விஜய் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் மற்றும் ஜனநாயகன் பட ரிலீஸ் தள்ளிப்போனது ஆகியவை விஜய்க்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் அரசியலில் முழு வீச்சாக செயல்பட்டு வரும் விஜய்,
தனது அடுத்த பிரச்சாரக் கூட்டத்தை வேலூரில் நடத்த திட்டமிட்டுள்ளார். பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் வேலூரில் பிரச்சாரக் கூட்டத்தில் மக்கள் முன்னிலையில் பேச உள்ளதாக கடந்த வார இறுதியில் தகவல்கள் வெளியாகின. அடுத்ததாக சேலத்தில் பிப்ரவரி மாத இறுதியில் பிரச்சாரக் கூட்டத்தை தவெக மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று தொண்டர்களுக்கு விஜய் எழுதிய கடிதத்தில், “2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் களம் இதுவரை இல்லாத புதிய சூழலை சந்திக்க உள்ளது. களத்தை நமதாக்கி, அரசியல் வெற்றியின் மூலம் அதிகார அரசியல் அங்கீகாரத்தை நோக்கி செல்வோம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக வெற்றிக் கழகம் இயல்பானதாகவும், இயல்பைத் தாண்டியும் நிறைவு செய்திருக்கிறது. ஆட்சி பீடத்தை கைக்கொள்ளும் ஜனநாயக இலக்கை உறுதியாக வெல்வோம்.
சலனங்களைப் புறந்தள்ளி, சமநிலை தவறாத, அளக்கவியலாத ஆழ்கடல் தவெக. சாமானிய மக்களுக்கான அதிகார அரசியலின் வெற்றிப் போர் முரசும் தவெக தான். தேர்ந்த தெளிவுடனும், திறன் மிக்க நுட்பத்துடனும் தேர்தல் அரசியல் வெற்றியின் வாயிலாக அதிகார அரசியல் அங்கீகாரம் நோக்கிச் செல்வோம்” என தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் விஜய்.
தமிழக வெற்றிக் கழகம் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்து இருக்கிறது. இந்நிலையில் தவெக-வின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
அதேநேரம் இன்று கரூர் வழக்கும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. சிபிஐ தங்கள் தரப்பு அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆகையால் இன்று தவெக-விற்கு முக்கிய நாளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.