மெரினாவில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட விமானப்படை சாகச காட்சியின்போது வெயில் தாங்காமல் ஐவர் உயிரிழந்தனர். இதனையடுத்து தவெக தலைவர் விஜய் தமிழக அரசிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்.
விமானப்படை சாகச நிகழ்ச்சியில் சுமார் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். இதில் ஐந்து பேர் வெயில் காரணமாக பலியாகினர். மேலும் குழந்தைகள் உட்பட ஏறதாழ 60 பேர் கூட்டத்தில் தொலைந்துவிட்டனர். இதனையடுத்து அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு குடும்பத்தாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இவையனைத்திற்கும் காரணம் தமிழக அரசு செய்த ஏற்பாடுகள்தான் என்று எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த உயிரிழப்புகள் வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்றும், இந்த விஷயம் அரசியல் செய்ய வேண்டிய விஷயமே இல்லை என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விட்டிருந்தார்.
இப்படியான சூழ்நிலையில் தற்போது இதுகுறித்து நடிகர் மற்றும் தவெக கட்சியின் தலைவரான விஜய் பேசியிருக்கிறார். நடந்து முடிந்த விஷயத்தை இனி சொல்லி எந்த ப்ரோஜனமும் இல்லை என்பதுபோல, குற்றம் சொல்லி ஒன்றும் ஆகிவிடாது என்பதுபோல இவரின் பதிவு அமைந்திருக்கிறது. இது அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்ல இளைஞர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அதாவது விஜய் கூறியதாவது, “சென்னையில் இந்திய விமானப் படை சார்பில், மெரினா கடற்கரையில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வு, வேதனையளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நிகழ்ச்சியின் போது, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை மீது அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள், தங்கள் வேதனையை வெளிப்படுத்திய செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன. இப்படி மக்கள் அதிக அளவில் கூடுகிற இடங்களில் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைக்கான வசதிகளையும் பாதுகாப்பையும் திறம்படச் செயல்படுத்துவதில், இனி வரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.“ என்று பதிவிட்டுள்ளார்.
விஜய் இந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்யாமல், இனி கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தியது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.