

இன்றைய இளம் தலைமுறை இளைஞர்கள், மதுவிற்கு அடிமையாகி தங்கள் வாழ்க்கையை இழப்பது அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க தமிழக அரசு போதை தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதோடு, மது வாங்குவதற்கான வயதை 21 ஆக உயர்த்தியுள்ளது. இந்நிலையில் இளைஞர்கள் மது குடிப்பதைத் தடுக்க நாகை மாவட்டத்தில் உள்ள ஒரு மீனவ கிராமம் வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்துள்ளது.
இதன்படி திருமணம் ஆகாத இளைஞர்கள் மது குடித்தால் அபராதம் விதிக்கப்படும் என ஊர்ப் பஞ்சாயத்து சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஊர் மக்களுக்கு தெரிவிக்கும் விதமாக பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதோடு ஒலிப்பெருக்கியிலும் மது குடித்தால் அபராதம் விதிக்கப்படும் என விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.
இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கையை நல்வழிப்படுத்தும் விதமாக ஊர்ப் பஞ்சாயத்து சார்பில் எடுக்கப்பட்ட இந்த சீரிய முயற்சிக்கு, சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
தமிழ்நாட்டில் தவெக அரசு பதவியேற்ற சில தினங்களில் பேருந்து நிலையங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் கோயில்களுக்கு அருகில் உள்ள 717 மதுக்கடைகள் மூடப்பட்டன. போதை மற்றும் மதுவை ஒழிப்போம் என தமிழக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சூழலில், சமீபத்தில் ஆன்லைன் மூலமாக மது விற்பனை செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது அரசு. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் பாலு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.
இந்நிலையில் அரசு உத்தரவுகள் ஒருபுறம் இருக்க, எங்கள் ஊர் இளைஞர்களை காப்பாற்ற வேண்டியது எங்கள் கடமை என நாகை மாவட்டத்தைச் சேர்ந்த விழுந்தமாவடி கிராம மக்கள் மதுவை ஒழிக்க களத்தில் இறங்கியுள்ளனர்.
நாகை மாவட்டத்தில் உள்ள விழுந்தமாவடி மீனவ கிராமத்தில் இளைஞர்கள் மது குடிப்பதைத் தடுக்க அபராதம் விதிக்கலாம் எனவும், யாருக்கும் தெரியாமல் மது குடிப்பவர் குறித்து தகவல் கொடுப்பவருக்கு ஊக்கத்தெகை வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. இதனை உடனடியாக ஊரில் அமல்படுத்தும் வகையில் பேனர் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.
இந்த பேனரில், “நமது கிராமத்தின் பொது அமைதி, இளைஞர்களின் நலன் மற்றும் பொது சுகாதாரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, திருமணம் ஆகாத இளைஞர்கள் 02-08-2026 முதல் மது அருந்த முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் திருமணம் ஆகாதவர்கள் மது குடிப்பது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால் ரூ.5,000 அபராதம் வசூலிக்கப்படும்.
அதோடு திருமணம் ஆனவர்கள் மது குடித்து விட்டு வீட்டிலோ அல்லது பொது இடத்திலோ பிரச்சினை செய்து, ஊர் பஞ்சாயத்திற்கு வரும் பட்சத்தில் ரூ.5,000 அபராதம் வசூலிக்கப்படும். மது அருந்துவோர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.2,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இந்த நல்ல முயற்சிக்கு ஊர்ப் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இன்றைய சரியான முடிவு நாளைய சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும். மதுவைத் தவிர்ப்போம். நம் எதிர்கால வாழ்க்கையையும், நம் சமூகத்தையும் பாதுகாப்போம்” என அச்சிடப்பட்டுள்ளது.
மதுவுக்கு அடிமையாகி இளைஞர்கள் வாழ்க்கையில் தடம் மாறுவதைத் தடுக்க விழுந்தமாவடி கிராம மக்கள் எடுத்துள்ள முயற்சி பாராட்டத்தக்கது. அதோடு இதில் கிடைக்கும் அபராத பணத்தை ஊரின் முன்னேற்றேத்திற்கு பயன்படுத்தலாம். அபராதம் விதிக்கப்படும் என்பதால், இளைஞர்கள் மது குடிப்பதை நிறுத்த அதிக வாய்ப்புள்ளது. மேலும் இதுபோன்ற சிறப்பான முடிவை எடுத்து, அதனை அமல்படுத்தும் ஊர்ப் பெரியோர்கள் நல்ல எதிர்கால சிந்தனை கொண்டவர்கள் என சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகின்றன.
மதுவை ஒழிக்க வேண்டும் என போராடுவதைக் காட்டிலும், அந்தந்த கிராம மக்கள் இம்மாதிரியான திட்டங்களை செயல்படுத்தினால், மது குடிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.