

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் (SIR) நடைபெற்றன. போலி வாக்காளர்களை நீக்கி, தகுதி வாய்ந்த வாக்காளர்கள் மட்டும் வாக்களிக்க வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கம். இதன்படி தமிழ்நாட்டில் நடந்த எஸ்ஐஆர் பணிகளின் மூலம் சுமார் 73.37 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் தற்போது 5.73 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணபிக்க தேர்தல் ஆணையம் வழிவகை செய்துள்ளது. இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க விண்ணப்பிப்பவர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வாக்காளர் பட்டியலை சீரமைக்கும் பணியில் தேர்தல் ஆணையம் இறங்கியது. இதன்படி எஸ்ஐஆர் பணிகள் முடிவடைந்து, மாநில மற்றும் மாவட்ட வாரியாக இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது.
தேர்தல் ஆணையம் சார்பில் அவ்வப்போது வாக்காளர் அட்டை திருத்த முகாம் நடைபெறுவது வழக்கம். இந்த முகாமில் புதிய விண்ணப்பங்கள் மற்றும் திருத்தங்கள் செய்யப்படும். மேலும் புதிதாக வாக்காளர் பட்டியலில் இணைய விண்ணப்பிக்கும் நபர்கள் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
சமீபத்தில் தமிழ்நாடு, அசாம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் நடைபெற்ற நிலையில், புதிய விண்ணப்பதாரர்கள் பெற்றோரின் SIR விவரங்களை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், “வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கும் புதிய விண்ணப்பதாரர்கள், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது படிவம் 6 உடன், பெற்றோரின் முந்தைய SIR விவரங்களை கட்டாயமாக குறிப்பிட வேண்டும்.
தேர்தல் ஆணைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் படிவம் 6-ஐ பூர்த்தி செய்யும் போது, SIR தகவல்களைப் பூர்த்தி செய்வதற்கான ‘பிரகடனப் படிவம்’ சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் படிவத்தை பூர்த்தி செய்யாமல் இனி உங்கள் விண்ணப்பத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல முடியாது.
வாக்காளர்களின் தரவுகளை சீர்ப்படுத்தவும், சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் இந்தப் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. ஒருவேளை பெற்றோரின் SIR விவரங்கள் இல்லையெனில், மாற்று விருப்பத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்க முடியும். இருப்பினும், அடுத்தகட்ட சரிபார்ப்பு வழிமுறைகள் குறித்து கூடுதல் தகவல்கள் தேவைப்படலாம்” என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேவையான SIR விவரங்கள்:
* முந்தைய SIR பட்டியலில் இருந்தால் பெற்றோரின் பெயரைக் குறிப்பிட வேண்டும்.
* பெற்றோரின் சட்டமன்ற தொகுதி எண்
* வாக்குச்சாவடி எண்
* வரிசை எண்
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கும் போது தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பின்படி, விண்ணப்பத்தை கவனமாக பூர்த்தி செய்யவும்.
ஜூலை 2026 நிலவரப்படி, தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையிலும், வாக்காளர் பட்டியலில் தொடர்ச்சியாக பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்கவுள்ள சூழலில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.