

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிப்பு, தேர்தல் பிரசாரம் என கடந்த ஒரு மாதமாக சூடிபிடித்திருந்த தேர்தல் களம் நேற்று முன்தினத்துடன் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
இந்த தேர்தலில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், தவெக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் தனித்தனியாகவும் போட்டியிடுகின்றன. அந்த வகையில் இந்த சட்டமன்ற தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது.
முதல்முறையாக தேர்தல் களத்தில் நுழைந்துள்ள விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் (TVK) வருகை மற்றும் திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு இடையிலான கடுமையான போட்டி, தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி அரசியல் களத்தில் விஜய் என்ற புதிய வரவலால் மக்களிடையே வாக்களிக்கும் ஆர்வமும் அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய, தேர்தல் ஆணையம் பல்வேறு புதிய வசதிகளையும், கட்டுப்பாடுகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு இன்று (ஏப்ரல் 23-ம்தேதி) ஓரே கட்டமாக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சட்டமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களுக்கான முடிவுகள் மே 4 அன்று அறிவிக்கப்பட உள்ளன.
சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் இன்று(ஏப்ரல் 23-ம்தேதி) வாக்குப்பதிவு காலை 7 மணி தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க, முன்கூட்டியே சென்று வாக்களிப்பது சிறந்தது. வரிசையில் நிற்கும் போது முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான 975 இடங்களில் 4,085 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 28 லட்சத்து 93 ஆயிரத்து 505 வாக்களர்கள் உள்ளனர். 19 ஆயிரத்து 604 வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் அனைத்து வாக்காளர்களும் வாக்களிப்பதற்கு முன்னர், வாக்குச்சாவடியில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை காண்பித்து வாக்கு அளிக்கலாம்.
வாக்காளர்கள் அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்.
அபோல் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட பூத் சிலிப்பை மட்டும் காண்பித்து வாக்களிக்க முடியாது என்று சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாநகராட்சி கமிஷனருமான குமரகுருபரன் தெளிவுபடுத்தி உள்ளார்.
வாக்காளர் அடையாள அட்டையோ, பூத் ஸ்லிப்போ கையில் இருந்தாலும், அந்த வாக்குச்சாவடிக்கான வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை முன்கூட்டியே ஆன்லைனில் சரிபார்த்து கொள்வது மிக மிக அவசியம் என்றும் கூறியுள்ளார்.
பூத் ஸ்லிப்பிற்கு, வாக்காளர் தகவல் சீட்டு என்று பெயர். இது தேர்தல் ஆணையத்தால் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் தகவல் சீட்டு ஆகும். வாக்குச்சாவடியில் வாக்காளர்களின் விவரங்களை எளிதாக கண்டறிய இந்த பூத் ஸ்லிப் ஆனது உதவுகிறது.