

இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிய வழிகாட்டுதலின் படி, தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி கடந்த நவம்பர் 4 ஆம் தேதி முதல் வாக்காளர் படிவங்கள் விநியோகிக்கப்பட்டன. டிசம்பர் 14ஆம் தேதியுடன் வாக்காளர் படிவங்கள் சமர்ப்பிக்கும் கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்.
இதன்படி இநதியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மட்டும் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இந்தப் பட்டியலில் தகுதியுள்ள வாக்காளர்கள் எவரேனும் நீக்கப்பட்டிருந்தால், அவர்கள் ஜனவரி 18ஆம் தேதி வரை மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.
மேலும் வாக்காளர் திருத்தப் பணிகளின் போது கிட்டத்தட்ட 10 லட்சம் வாக்காளர்கள், S.I.R. படிவங்களை சரியாக பூர்த்தி செய்யவில்லை எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2005 ஆம் ஆண்டு S.I.R. படிவங்களில், வாக்காளரின் பெயரோ அல்லது வாக்காளரின் உறவினர் பெயரோ இடம் பெற்றிருந்தால், அது குறித்த விபரங்களை தற்போதைய S.I.R. படிவங்களில் பூர்த்தி செய்ய வேண்டும். ஆனால் இந்த விவரங்களை கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் சரிவர பூர்த்தி செய்யாததால், அவர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் S.I.R. படிவத்தை சரியாக பூர்த்தி செய்யாத வாக்காளர்களுக்கு, அதற்கான காரணத்தைக் கேட்டு நோட்டீஸ் அனுப்பும் பணியை தமிழக தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதன்படி மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் இருந்து, தபால் மூலமாக வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். தேர்தல் ஆணையத்திடமிருந்து வரும் நோட்டீஸ்க்கு வாக்காளர்கள் பதிலளிக்கும் வகையில், நிரந்தர குடியிருப்பு சான்றிதழ் மற்றும் இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட 13 ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.
ஒருவேளை தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸ்க்கு பதிலளிக்கவில்லை என்றால் அந்த வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் நிரந்தர குடியிருப்பு சான்றிதழ் வேண்டி விண்ணப்பிக்கும் வாக்காளர்களுக்கு உதவும் வகையில், சான்றிதழை விரைந்து வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன்படி நிரந்தர குடியிருப்பு சான்றிதழ் மற்றும் S.I.R. படிவங்களுக்குத் தேவையான சான்றிதழ்களுக்கு பொதுமக்கள் விண்ணப்பித்தால், அந்த சான்றிதழை விரைந்து வழங்குவதோடு, அதற்கான கட்டணத்திற்கும் விலக்கு அளிக்கும் வகையில் தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட தகுதியுள்ள வாக்காளர்கள் மற்றும் 18 வயது பூர்த்தி அடைந்த வாக்காளர்கள் படிவம் 6-ஐ நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் முன்மொழியப்பட்ட சேர்க்கைக்கு ஆட்சேபனை தெரிவிக்கவும் மற்றும் பெயரை நீக்கவும் படிவம்-7 மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் வாக்காளர் அட்டை திருத்தங்களை மேற்கொள்ள படிவம்-8 மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்நிலையில் வாக்காளர்களுக்கு உதவும் வகையில் வருகின்ற டிசம்பர் 27 (சனிக்கிழமை), டிசம்பர் 28 (ஞாயிற்றுக்கிழமை), ஜனவரி 3 (சனிக்கிழமை) மற்றும் ஜனவரி 4 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 4 நாட்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்டநாயக் தெரிவித்துள்ளார்.