Patta provided by TN Govt
Free Patta

இலவச வீட்டுமனை பட்டா பெற என்ன செய்ய வேண்டும்? தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு..!

Published on

தமிழ்நாட்டில் புறம்போக்கு இடங்களில் வசித்து வரும் ஏழை மற்றும் எளிய மக்களின் இருப்பிடத்தை உறுதி செய்யும் வகையில் கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழக அரசு ‘இலவச வீட்டுமனை பட்டா’ திட்டத்தை கொண்டு வந்தது. நிலமற்ற ஏழைகளுக்கு வீட்டுமனையை வழங்குவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். வீட்டுமனை பட்டா என்பது அந்நிலத்தில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும் உரிமை ஆகும்.

பட்டா கிடைத்த பிறகு தங்கள் பொருளாதாரத்தை முன்னேற்றிக் கொள்ளவும், வீடு கட்டவும் வங்கிகளில் கடன் வாங்க முடியும். இதுவரை இந்தத் திட்டத்தின் கீழ் கிராமம் மற்றும் நகரப் பகுதிகள் உட்பட கிட்டத்தட்ட 4.37 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். ‘அனைவருக்கும் வீடு’ என்ற முக்கிய இலக்கை நோக்கி இந்தத் திட்டம் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தகுதிகள்:

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு அல்லது நத்தம் நிலங்களில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது வசித்திருக்க வேண்டும். அப்போது தான் தமிழக அரசின் இலவச வீட்டுமனை பட்டா திட்டத்தின் கீழ் பட்டா பெற விண்ணப்பிக்க முடியும்.

நிலத்தின் அளவு:

கிராமப்புறங்களில் 2 முதல் 2.5 சென்ட் நிலம் வரையிலும், நகர்ப்புறங்களில் 1.25 முதல் 1.5 சென்ட் நிலம் வரையிலும் அரசு சார்பில் பட்டா வழங்கப்படும். ஒரு சில நேரங்களில் மட்டும் 3 சென்ட் வரையிலும் பட்டா வழங்கப்படுகிறது.

நிபந்தனைகள்:

பொதுமக்கள் ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக வசித்து வந்தாலும் நீர் நிலைகள், குளங்கள், குட்டைகள், கால்வாய்கள் மற்றும் கோயில் நிலங்களில் வசிப்போருக்கு அவர்கள் வசிக்கும் அதே பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்கப்படாது. இருப்பினும் அவர்களை கைவிடாமல் இருக்க, தமிழக அரசு வேறொரு இடத்தில் வீட்டுமனை பட்டாவை வழங்கும்.

பல ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் இலவச வீட்டுமனை பட்டா திட்டத்தின் அடுத்த கட்டமாக, சென்னை உள்பட பல மாநகராட்சிகளில் ‘பெல்ட் ஏரியா’ எனப்படும் பகுதிகளில் வாழும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவிப்பு ஒனஅறை வெளியிட்டது. இந்த அறிவிப்பு நகர்ப்புறங்களில் வசிக்கும் எண்ணற்ற ஏழை மற்றும் எளிய மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
வீட்டுக் கடன் வாங்குவோருக்கு முக்கிய அப்டேட்..! இப்படி கடன் வாங்குவது தான் பெஸ்ட்!
Patta provided by TN Govt

விண்ணப்பிக்கும் முறை:

வட்டாட்சியர் அலுவலகம் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இலவச வீட்டுமனை பட்டா பெற விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க விரும்பும் இடம் தமிழக அரசின் புறம்போக்கு இடமாக இருக்கிறதா என்பது மிகவும் முக்கியம்.

வட்டாட்சியர் மற்றும் நில அளவர் உள்பட வருவாய் ஆய்வாளர் குழுவினர் நேரில் வந்து, நீங்கள் வசிக்கும் இடத்தை ஆய்வு செய்த பின்னரே வீட்டுமனை பட்டா வழங்கப்படும்.

தேவைப்படும் ஆவணங்கள்:

1. பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

2. வீடு இல்லாததை உறுதி செய்யும் ஆவணம்

3. ரேஷன் கார்டு

4. ஆதார் கார்டு

5. சாதிச் சான்றிதழ்

6. வருமானச் சான்றிதழ்

7. பட்டா பெற விரும்பும் இடத்தில் 10 ஆண்டுகள் வசித்ததற்கான ஆதாரம்.

இதையும் படியுங்கள்:
சொந்த வீட்டுக் கனவை நனவாக்க கடன் வாங்கப் போறீங்களா?
Patta provided by TN Govt
logo
Kalki Online
kalkionline.com