

இந்தியாவில் உள்ள வாட்ஸ்அப் பயனர்களுக்கு ஒரு நற்செய்தியாக, மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த பிரபலமான உடனடிச் செய்திப் பரிமாற்றத் தளம், ஒரு புதிய கட்டணச் செலுத்தும் அம்சத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்களின் அன்றாட வீட்டுக் கட்டணங்களை (பில் பேமெண்ட்) வாட்ஸ்அப் செயலி மூலமாகவே நேரடியாகச் செலுத்த முடியும்.
உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தள செயலியாக இருப்பது வாட்ஸ் அப். மெட்டா (Meta) நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப் (WhatsApp), உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான ஒரு தகவல் தொடர்பு செயலியாகும். இதன்மூலம் ஆடியோ (Audio) மற்றும் வீடியோ (Video) மூலமாக உலகளவில் உள்ளவர்களுடன் எளிதாகப் பேச முடியும்.
சந்தையில் போட்டியை சமாளிக்கவும், பயனர்களை கவரவும் புதுப்புது அப்டேட்களை வாட்ஸ் அப் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், வாட்ஸ்அப் (WhatsApp) செயலி இந்தியாவில் மின்சாரம், தண்ணீர், காஸ் மற்றும் கிரெடிட் கார்டு போன்ற மாதாந்திரக் கட்டணங்களை நேரடியாகச் செலுத்தும் பில் பேமெண்ட்ஸ் (Bill Payments) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் பாரத் கனெக்ட் (Bharat Connect - முன்னர் BBPS) வலையமைப்பின் மூலம் இந்த புதிய வசதி செயல்படுகிறது.
மின்சாரம், கேஸ் சிலிண்டர் கட்டணம், தண்ணீர், பாஸ்டேக் (FASTag), இன்சூரன்ஸ், காப்பீடு தவணை, கிரெடிட் கார்டு மற்றும் கடன் தவணை உள்ளிட்ட 30 பிரிவுகளின் கீழ் 22,700-க்கும் மேற்பட்ட சேவை நிறுவனங்களுக்கு பயனர்கள் நேரடியாகக் கட்டணம் செலுத்த முடியும். பயனர்களின் அன்றாட வேலைகளை ஒரே இடத்தில் எளிமையாக்கும் நோக்கில் இந்த அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது.
வரவிருக்கும் கட்டணங்களை (Upcoming Bills) தானாகவே கண்டறிந்து காட்டும்.
ஒரே பில்லரின் கீழ் வீடு, அலுவலகம் போன்ற பல்வேறு கணக்குகளை நிர்வகிக்கலாம்.
பயனர்கள் யூபிஐ (UPI), டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலம் தங்களின் கட்டணங்களைச் செலுத்தலாம். இந்த அம்சம் தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஐஓஎஸ் (iOS) பயனர்களுக்குப் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.
வாட்ஸ்அப்பில் கட்டணம் செலுத்துவது எப்படி?
வாட்ஸ்அப் செயலியைத் திறந்து முகப்புத் திரையின் மேல் பகுதியில் உள்ள ரூபாய்க்கான (₹) குறியீட்டைத் கிளிக் செய்ய வேண்டும்.
அதில் பில் கட்டணப் பிரிவைத் தேர்ந்தெடுத்து, உங்களுக்கான சேவை நிறுவனத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
உங்கள் கணக்கு விவரங்களை உள்ளிட்ட பிறகு, செலுத்த வேண்டிய தொகையை சரிபார்த்து யுபிஐ, டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலம் உடனடியாகக் கட்டணத்தை செலுத்தலாம்.
பயனர்கள் முன்பு செலுத்திய கட்டண விவரங்கள் 'Payments Home' பிரிவில் சேமிக்கப்படும்.
அதில் எந்தவகையான பில்லை கட்ட வேண்டும் என்பதை தேர்வு செய்து பிறகு வங்கிக் கணக்கு தகவல்களை இணைத்துவிட்டால், அந்தந்த சேவைகளுக்கு கட்டணம் செலுத்த முடியும்.
அத்துடன் இதற்காக தனியாக கடவுச் சொல்லையும் நிர்ணயித்துக்கொள்ளலாம். இதனால், கட்டணம் செலுத்தும் முறை பாதுகாப்பானதாக இருக்கும்.
ஒரே சேவை நிறுவனத்தில் வீடு மற்றும் அலுவலகத்திற்குப் வெவ்வேறு கணக்குகள் இருந்தால், அவற்றை ஒரே இடத்தில் சேமித்து நிர்வகிக்கும் வசதியும் இதில் உள்ளது.
இதேபோன்று ஒரு வாட்ஸ்ஆப் கணக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளையும் இணைத்து கட்டணங்களை செலுத்தலாம் என வாட்ஸ்ஆப் தெரிவித்துள்ளது.
உதாரணமாக, தனது வீடு மற்றும் அலுவலகத்திற்கான மின்சார இணைப்புகளை நிர்வகிக்கும் ஒருவர், ஒவ்வொரு முறையும் தனித்தனியாகத் தேடுவதற்குப் பதிலாக, இரண்டு கணக்குகளையும் ஒரே சேவை வழங்குநரின் கீழ் வைத்திருக்கலாம்.
மேலும், இந்தச் செயலி அதிகம் பயன்படுத்தப்படும் சில கட்டண வகைகளைத் தானாகவே முன்னிலைப்படுத்தும், அதே சமயம் பயனர்கள் 'அனைத்தையும் காண்க' என்பதைத் தேர்ந்தெடுத்து விரிவான வகைப் பட்டியலையும் பார்க்கலாம்.
இதுகுறித்து மெட்டா நிறுவனத்தின் இந்திய மேலாண்மை இயக்குநர் அருண் சீனிவாஸ் கூறியதாவது, ‘லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு மிகவும் எளிமையான தகவல் தொடர்பு செயலியாக வாட்ஸ்ஆப் உள்ளது.
வாட்ஸ்அப்பில் ஒரு செய்தியை அனுப்புவது போல, பில் செலுத்துவதையும் சிரமமில்லாததாக மாற்ற விரும்பினோம். தற்போது சில அத்தியாவசிய சேவைகளுக்காக பிற செயலிகளுக்குச் செல்லாமல், வாட்ஸ்ஆப்பில் இருந்தவாறே அவற்றை முடிக்க முடியும்.
செயலியில் இருந்து வெளியேறாமலேயே அரசு சேவைகளுக்கான கட்டணம், மெட்ரோ ரெயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட பல சேவைகளுக்கான கட்டணத்தை வாட்ஸ் ஆப்பில் இருந்தே செலுத்த முடியும்.
மேலும், நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதியைக் கொண்டுவர விரும்புவதாகவும்’ அவர் குறிப்பிட்டார்.