

தாம்பரம் மாநகர காவல் துறையில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக ‘தாம்பரம் வாட்ஸ்காப்’ (Tambaram What's Cop) என்ற புதிய AI வாட்ஸ் அப் சாட்பாட் (WhatsApp Chatbot) சேவையை தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்.
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தமிழகத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களுக்கு மிகக் கடுமையான தண்டனைகள் பெற்றுத்தர சட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் சேவை பொதுமக்களுக்க. எளிதாகவும், விரைவாகவும் கிக்கம் வகையிலும், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் தமிழக காவல் துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் காவல் சேவைகளை விரைவாக வழங்கவும், அவசரகால உதவிகள் உடனடியாக அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காகவும் தாம்பரம் மாநகர காவல் துறை ‘தாம்பரம் வாட்ஸ்அப் காப்’ (Tambaram What'sCop) என்ற புதிய சேவையை தொடங்கி உள்ளது. இந்த சேவை செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்ப துணையுடன், ‘வாட்ஸ்அப் சாட்பாட்’ மூலம் வழங்கப்படுகிறது.
இதற்காக 9344 222 100 என்ற பிரத்யேக எண் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சேவை பெண்கள் பாதுகாப்பு, நேரலை இருப்பிடம் பகிர்வு, பூட்டிய வீடுகள் கண்காணிப்பு மற்றும் ரகசியப் புகார்கள் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பொதுமக்கள் எளிதாகப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாமர மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் இந்த சேவை கிடைக்கும்.
93442 22100 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு ‘Hi’ என்ற குறுஞ்செய்தி அனுப்பியோ அல்லது காவல்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ QR குறியீட்டை ஸ்கேன் செய்தோ பொதுமக்கள் பல்வேறு காவல் சேவைகளைப் பெறலாம்.
தாம்பரம் காவல்துறை ‘வாட்ஸ்காப்’ உள்ள முக்கிய அம்சங்கள் மற்றும் சேவைகள்:
நேரலை இருப்பிடம் (Live Location): ஆபத்து அல்லது அவசரக் காலங்களில் பொதுமக்கள் அல்லது தனியாக வசிக்கும் முதியவர்கள் மற்றும் பெண்கள் தங்களின் இருப்பிடத்தை நேரடியாகக் காவல்துறையுடன் பகிர்ந்துகொள்ளலாம்.
ரகசியப் புகார்கள்: போதைப்பொருள் கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள, போதைப்பொருள், சமூக விரோத செயல்கள் புழக்கம் மற்றும் சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்கள் குறித்து உங்களுக்கு தெரிந்த விஷயங்களை காவல் துறைக்கு உங்களது பெயர் வெளியில் தெரியாமல் ரகசியமாகப் புகாரளிக்க இந்த சேவையை பயன்படுத்தலாம்.
பெண்கள் பாதுகாப்பு (‘Track My Journey’): தனியாகப் பயணம் செய்யும் பெண்கள் தங்களது பயண விவரங்களை பதிவு செய்தால், பயணத்தின் போது பாதை மாறினாலோ அல்லது ஆபத்து ஏற்பட்டாலோ காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும்.
பூட்டிய வீடுகள் கண்காணிப்பு: வெளியூர் செல்லும் போது பொதுமக்கள் பூட்டியிருக்கும் தங்கள் வீட்டின் விவரங்களை இந்த வாட்ஸ்அப் சேவையில் பதிவிட்டால், நீங்கள் வெளியூர் பயணம் முடிந்து திரும்பும் வரை இரவு ரோந்துப் படையினர் (இரவு 10 முதல் காலை 6 மணி வரை) சிறப்பு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.
இதர சேவைகள்: போக்குவரத்து நெரிசல் மற்றும் விதிமீறல்களைப் புகைப்படங்களுடன் புகாரளித்தல், திருடப்பட்ட மொபைல்களை முடக்கும் சி.இ.ஐ.ஆர் (CEIR) வசதி, சைபர் குற்றப் புகார்கள் பதிவு மற்றும் அருகிலுள்ள காவல் நிலையங்களைக் கண்டறியும் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த சேவையில் இடம் பெற்றுள்ளன.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், அவசரக்காலப் பதிலளிப்பை விரைவுபடுத்தவும் இந்த ஏ.ஐ வாட்ஸ்அப் சேவையைப் பொதுமக்கள், பெண்கள் மற்றும் தனியாக இருக்கும் முதியவர்கள் பெருமளவில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தாம்பரம் மாநகரக் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.