
இன்றைய சூழலில் வங்கியில் கணக்கு வைத்திருப்பது மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் எந்த ஒரு பணபரிவர்த்தனையும் வங்கிகள் மூலமே நடைபெறுகிறது. அதேபோல் மத்திய-மாநில அரசுகளின் நலதிட்டங்களுக்கு வழங்கும் பெரும்பாலான நிதி உதவிகள் பயனாளிகளுக்கு நேரடியாக அவர்களது வங்கி கணக்குகளின் மூலமாக தான் தற்போது செலுத்தப்பட்டு வருகிறது.
வங்கிகளில் எந்தவொரு வைப்பு தொகையும் இல்லாமல், ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்கை தொடங்குவதற்காக இந்திய அரசாங்கம் தொடங்கிய உன்னத திட்டமே பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா திட்டமாகும்.
அந்த வகையில் இந்தியாவில் ஏழை, எளியவர் ஏழைகள் பலர் வங்கி கணக்கு இல்லலாமல் இருந்த நிலையில் அனைவருக்கும் வங்கி கணக்கு என்பதை அடிப்படையாக கொண்டு கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ‘ஜன்தன்' திட்டத்தைத் கொண்டு வந்தார்.
இந்த திட்டத்தின் மூலம் எந்தவொரு வைப்பு தொகையும் இல்லாமல், ஜீரோ பேலன்ஸில் வங்கி கணக்கை பராமரிக்க முடியும். இதன்மூலம், நாட்டில் உள்ள கோடிக்கணக்கான இந்தியர்கள் முறையான நிதி அமைப்புக்குள் கொண்டுவரப்பட்டனர். ‘ஜன்தன்' திட்டத்தின் கீழ் இதுவரை 56 கோடியே 16 லட்சம் பேர் வங்கி கணக்கு தொடங்கியுள்ள நிலையில் இவர்களுடைய வங்கி கணக்கில் ரூ.2 லட்சத்து 67 ஆயிரத்து 755 கோடி பணம் இருப்பு உள்ளது.
அதேவேளையில் இந்த கீழ் தொடங்கப்பட்ட 56.04 கோடி வங்கிக் கணக்குகளில் 23% கணக்குகள், எந்த பரிவர்த்தனையும் இல்லாமல் செயலற்ற நிலையில் இருப்பதாகவும், அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 2.75 கோடி, பீகாரில் 1.39 கோடி என நாடு முழுவதும் 13.04 கோடி வங்கிக் கணக்குகள் செயல்பாட்டில் இல்லை எனவும் மக்களவையில் ஒன்றிய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தப் பரிவர்த்தனையும் மேற்கொள்ளப்படாத சேமிப்புக் கணக்குகள் செயல்படாதவையாகக் கருதப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டி நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கே.ஒய்.சி. என்ற வாடிக்கையாளர்களின் அடையாளத்தையும், முகவரியையும் வங்கிகள் சரிபார்க்கப் பயன்படுத்தும் செயல்முறையை (அப்டேட்) சேர்க்காத ‘ஜன்தன்' வங்கி கணக்குகள் வரும் செப்டம்பர் மாதம் 30-ந்தேதிக்கு பிறகு செயல்படாது என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி அனைவரையும் அதிர்ச்சியடைச்செய்தது.
இதனால் ‘ஜன்தன்' வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் வங்கிகள் கேட்கும் அடையாளம் மற்றும் முகவரி ஆவணங்களுடன் கே.ஒய்.சி. செயல்முறையில் கூடுதல் விவரங்களை இணைப்பதற்காக வங்கிகளுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் செயல்படாத ‘ஜன்தன்' வங்கி கணக்குகள் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு மூடப்படும் என்ற தகவலில் உண்மை இல்லை என்று மத்திய நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், செயல்படாத ஜன் தன் கணக்குகளை மூட எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும் கே.ஒய்.சி. விவரங்களை வாடிக்கையாளர்கள் சேர்க்க வேண்டும் என்பது கட்டாயம்தான் என்றாலும் அதேநேரத்தில் கே.ஒய்.சி. தகவல் சேர்க்கப்படவில்லை என்றாலும் வங்கி கணக்கு செயல்படும் என்றும் தவறாக தகவல்களை நம்பவேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
செயலற்ற கணக்குகளைக் கண்காணித்து, கணக்கு வைத்திருப்பவர்களைத் தொடர்புகொண்டு அவற்றைச் செயல்படுத்த வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.