

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், தவெக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைய இருப்பது உறுதியாகியுள்ளது. 108 இடங்களில் தவெக வெற்றி பெற்றிருந்தாலும் கூட விஜய் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்ய இருப்பதால், பலம் 107 ஆக குறைந்து விடும்.
இந்நிலையில் ஆட்சி அமைக்க தவெக-விற்கு தற்போது கூடுதலாக 11 இடங்கள் தேவை என்ற சூழலில் நேரடியாக அதிமுக-வை கூட்டணிக்கு அழைப்பதைக் காட்டிலும், திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளை கூட்டணிக்கு அழைக்க தவெக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இருப்பினும் இன்று பனையூரில் விஜய் தலைமையில் நடக்க உள்ள ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவுகள் உறுதி செய்யப்படும் எனத் தெரிகிறது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ் ஆதரவு கிடைக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
தவெக-வின் ஆட்சியில் பங்கு என்ற கொள்கையை ஆதரித்து வரும் காங்கிரஸ், தற்போது 5 எம்எல்ஏக்களை கொண்டுள்ளது. தவெக-விற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக இன்று காங்கிரஸ் மேலிடம் 5 எம்எல்ஏ-க்களுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளது.
பெரும்பாலான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தவெக-வுக்கு ஆதரவு அளிக்கவே விரும்புகிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் தவெக-விற்கு நேரடியாக ஆதரவு வழங்குமா என்பதும் கேள்விக்குறியாகவே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஆட்சியில் பங்கு என்ற அதிகாரத்தை தவெக காங்கிரசுக்கு வழங்கும் பட்சத்தில், ஆதரவளிப்பதில் எந்தவித ஆட்சேபனையும் இருக்காது என்றே தெரிகிறது. மயிலாடுதுறை, மேலூர், குளச்சல், விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
ஒருவேளை தவெக-வுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தாலும், மேலும் 6 எம்எல்ஏ-க்கள் தவெக-விற்கு தேவைப்படுவர். திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற கூட்டணி கட்சிகளில் காங்கிரஸை அடுத்து அதிகபட்சமாக பாமக 4 இடங்களை கைப்பற்றியுள்ளது. மேலும் ஏற்கனவே பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் விஜய் இடையே சுமுகமான உறவு நீடிப்பதால், பாமகவின் ஆதரவும் கிடைக்க வாய்ப்புள்ளது.
இதுதவிர ஆட்சி அமைக்க ஆதரவே கோரி விஜய் அழைத்தால், அதுகுறித்து கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்துள்ளன.
ஆட்சியில் பங்கு என்ற தவெக-வின் கொள்கைக்கு ஆதரவு அளித்து காங்கிரஸ் மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் தவெக-வுக்கு ஆதரவு அளிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக இன்று காலை பொறுப்பு ஆளுநருக்கு இரண்டு வாரங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தவெக-விற்கு கூட்டணி கட்சிகள் நிச்சயமாக தங்களது ஆதரவை அளிக்கும் என்றே தெரிகிறது. வெகு விரைவில தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றமும், கூட்டணி ஆட்சியும் அரங்கேறப் போவது மட்டும் உறுதி.