

மேற்காசியாவில் நிலவி வரும் போர் காரணமாக, கடந்த இரண்டு மாதங்களாக இந்தியாவில் வணிக சிலிண்டருக்கான தட்டுப்பாடு நிலவியது. இதன் காரணமாக சில ஹோட்டல்கள் மூடப்பட்ட நிலையில், சில ஓட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை ஏற்றப்பட்டது. இந்நிலையில் பொதுமக்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சி செய்தியாக இன்று வரலாறு காணாத அளவில் சிலிண்டரின் விலை உயர்வைக் கண்டுள்ளது.
வீட்டு சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படாத நிலையில், வணிக சிலிண்டரின் விலை இன்று ஒரே நாளில் ரூ.993 உயர்ந்துள்ளது. ஏற்கனவே சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவகங்களில் உணவு பொருட்களின் விலை ஏறியது.
இந்நிலையில் தற்போது சிலிண்டர் விலையும் ஏறியதால், உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரக்கூடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது.
ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி சிலிண்டரின் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைக்கின்றன அவ்வகையில் இன்று மே ஒன்றாம் தேதி வணிக சிலிண்டரின் விலை ரூ.993 உயர்ந்துள்ளது. இதன்படி 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் ரூ.2,246.50 இலிருந்து ரூ.3,237 ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே கடந்த மார்ச் 1-ம் தேதி சிலிண்டரின் விலை உயர்ந்தது. இதனையடுத்து ஒரு வாரத்திலேயே மார்ச் 7-ம் தேதியும் சிலிண்டரில் விலை உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் ஏப்ரல் 1-ம் தேதி சிலிண்டர் விலை மேலும் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் இன்று மே 1-ம் தேதி வரலாறு காணாத அளவில் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டிருப்பது, வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வீட்டு உபயோக சிலிண்டரின் விலை மாற்றமின்றி ரூ.928.50 ஆகவே தொடர்கிறது.
குறுகிய காலப் பயன்பாட்டிற்கு தேவைப்படும் ஐந்து கிலோ சிலிண்டரின் விலையும் இன்று அதிரடியாக ரூபாய் 261 உயர்ந்துள்ளது. இதனால், வெளி மாநில தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை தலைநகர் டெல்லியில் ரூ.3,071-க்கும், கொல்கத்தாவில் ரூ.3,202-ககும் விற்பனையாகிறது. டெல்லி மற்றும் கொல்கத்தாவுடன் ஒப்பிட்டால், தற்போது சென்னையில் தான் வணிக சிலிண்டரின் விலை அதிகமாக இருக்கிறது.
ஏற்கனவே வணிக சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், இந்த விலை உயர்வு, உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக உணவகங்களில் சாப்பிடும் பொதுமக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
மேலும் மேற்காசியாவில் நிலவி வரும் போர் முடிவுக்கு வராத சூழலில், போர் தொடர்ந்தால் அடுத்தடுத்த மாதங்களில் வணிக சிலிண்டரின் விலையுடன், வீட்டு சிலிண்டரின் விலையும் உயரக்கூடும்.