

கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி முதல் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடுமையான போர் நடந்து வருகிறது. இருபுறமும் தாக்குதல்கள் பலமாக இருப்பதால், இந்தப் போர் இன்னும் முடிவடையாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் நேற்று ஈரானில் உள்ள எண்ணெய் ஆலை மீது, இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இதனையடுத்து இன்று காலை கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலை மீது, ஈரான் பலமான தாக்குதலை நடத்தியுள்ளது. பல்வேறு ஏவுகணைகளைக் கொண்டு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலை பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. தீயை அணைக்கும் பணியில் கத்தார் அரசு ஈடுபட்டு வருகிறது.
இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. இருப்பினும் கத்தாரில் உள்ள ஈரான் வெளியுறவு அதிகாரிகளை உடனடியாக வெளியேறும்படி கத்தார் அரசு உத்தரவிட்டுள்ளது
ஈரானின் தாக்குதல் குறித்து சவுதி இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் கூறுகையில், “எங்களின் பொறுமை எல்லையற்றது அல்ல. ஈரான் மீதிருந்த கடைசி நம்பிக்கையும் சிதைந்து விட்டது. ஈரானின் மிரட்டல் முயற்சியை கண்டு நாங்கள் அச்சப்படவில்லை.
சவுதி அரேபியாவின் எண்ணெய் வளங்கள் மீதும், சவுதி மற்றும் ஐக்கிய அரபு அமீரக பொதுமக்கள் மீதும் சர்வதேச சட்டங்களை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் தாக்குதலுக்கு இராணுவ ரீதியாக பதிலடி கொடுக்கும் உரிமை சவுதி அரேபியாவுக்கு உண்டு” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் மீது கடுமையான தாக்குதலை நடத்தி வரும் அமெரிக்கா, விரைவில் ஈரானில் உள்ள கார்க் தீவின் மீதும் பலமான தாக்குதலை நடத்த உள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள அமெரிக்கா, விரைவில் ஈரானில் எஞ்சியுள்ள இலக்குகளை முடிக்கப் போவதாக டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஹார்மூஸ் ஜலசந்தியை பாதுகாக்க போர்க் கப்பல்களை அனுப்பாத நட்பு நாடுகளுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார் அதிபர் டிரம்ப்.
நேற்றைய இஸ்ரேல் தாக்குதல் மற்றும் இன்றைய ஈரானின் தாக்குதலால் இன்று கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் விலை 108 டாலரை எட்டியுள்ளது.
ஈரானின் 90% கச்சா எண்ணெய் ஏற்றுமதி கார்க் தீவில் தான் நடைபெறுகிறது. இந்நிலையில் கார்க் தீவின் மீது அமெரிக்கா தாக்குதலை நடத்தினால், கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 150 டாலரை எட்டக் கூடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.