

காவல்துறை தற்போது சிம் ஸ்வாப் (SIM Swap) எனப்படும் ஒரு நுணுக்கமான சைபர் மோசடி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சிம் ஸ்வாப் மோசடி (SIM Swap) என்பது ஒரு கணக்கு அபகரிப்பு மோசடியாகும். மிகவும் எளிமையாகச் சொன்னால், ஒரு நபரின் தனிப்பட்ட விவரங்களைத் திருடி, அவரது சிம் கார்டைப் போலவே மற்றொரு போலி சிம் கார்டை உருவாக்கி, அதன் மூலம் வங்கிப் பரிமாற்றங்கள் மற்றும் அழைப்புகளை அவர்கள் முழுமையாகக் கட்டுப்படுத்துகின்றனர்.
டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறைகள் வந்த பிறகு ஒருவரது வங்கிக்கணக்குகள், பணப்பரிவர்த்தனைகள் என அனைத்தும், அவரது சிம் கார்டை அடிப்படையாக கொண்டதாக மாறிவிட்டது. டிஜிட்டல் மோசடியில் பல்வேறு டிரிக்குகளை பயன்படுத்தும் மோசடிக்காரர்கள் தற்போது அவர்கள் புதிதாக கண்டுபிடித்திருப்பது தான் சிம்கார்டு மாற்று மோசடி. அதாவது சிம்கார்டு மாற்று மோசடி, சிம் ஸ்வாப்பிங் அல்லது சிம் ஹைஜாக்கிங் என்று அழைக்கப்படுகிறது.
இந்த முறையில் ஒரு சிம் கார்டு எண்ணை கொடுத்து அந்த சிம் கார்டு தொலைந்து விட்டது அல்லது சோதமடைந்து விட்டது என்று கூறி புதிய சிம் கார்டை மோசடிக்காரர்கள் வாங்கி விடுகின்றனர். உங்கள் சேவை நிறுவனத்தின் மூலம் மோசடிக்காரர்கள் புதிய சிம் கார்டை பெற்றவுடன், உங்கள் கையில் உள்ள சிம் கார்டு செயலிழந்துவிடும்.
பின்னர் அந்த சிம் கார்டை மோடிக்காரர்கள் ஆக்டிவேட் செய்ததும் உங்கள் சிம் கார்டு எண்ணில் உள்ள அனைத்து தகவல்கள் மற்றும் ஓடிபியும் நேரடியாக அந்த மோசடிக்காரர்களின் கைக்கு சென்றுவிடுகிறது. பிறகென்ன யாருக்கும் போன் செய்து ஒடிபி கேட்க வேண்டிய அவசியமில்லை. இந்த ஓடிபி அணுகலை கொண்டு மோசடிக்காரர்கள் வங்கி கணக்குகள், மின்னஞ்சல் மற்றும் சமூக ஊடக சுயவிவரங்களில் ஊடுருவி, உங்கள் வங்கி கடவுச்சொற்களை மாற்றி, சில நிமிடங்களிலேயே கணக்கில் உள்ள பணத்தைத் திருடுகின்றனர்.
ஒருவேளை உங்களது செல்போன் திடீரென சேவையை இழந்து விட்டாலோ, மெசேஜ் அனுப்பவோ, அழைப்புகளை மேற்கொள்ளவோ முடியவில்லை என்றால் உங்களது செல்போன் சிம் ஸ்வாப் செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை எச்சரிக்கிறது.
இதுபோல் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக செல்போன் சேவை வழங்கும் நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு புதிய சிம் கார்டை முடக்குமாறு கோரிக்கை வைக்கலாம்.
இந்தியாவில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(TRAI) புதிய சிம் வழங்கப்பட்ட பிறகு சிம் போர்டிங் செய்வதற்கு 7 நாள் கட்டுப்பாடு உள்ளிட்ட இதுபோன்ற மோசடிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளது. இருப்பினும் சிம் ஸ்வாப் மோசடி வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
சிம் ஸ்வாப் மோசடியில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ள....
பல கணக்குகளுக்கு ஒரே பாஸ்வேர்டு(Password) பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
தேவையற்ற லிங்குகளை கிளிக் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
அறிமுகமில்லாத அழைப்பாளர் அல்லது தனிப்பட்ட விவரங்களையோ, ஓடிபி அல்லது பின் (PIN) எண்களையோ யாருடனும் பகிரக்கூடாது.
அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் ஏதேனும் நடக்கிறா என வங்கி அறிக்கைகளையும், கணக்கு நடவடிக்கைகளையும் அடிக்கடி கவனமாக பாருங்கள்.
சமூக ஊடகங்கள் மற்றும் பிற தளங்களில் முக்கியமான தரவுகளை பகிர்வதை கட்டுப்படுத்துங்கள்.
காரணமின்றி மொபைல் சிக்னல் துண்டிக்கப்பட்டால் உடனடியாக உங்கள் மொபைல் சேவை நிறுவனத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
ஏதேனும் முறைகேடுகள் கண்டறிந்தால் உங்கள் சேவை நிறுவனத்தையும், வங்கிகையும் தொடர்பு கொண்டு இது குறித்து புகார் செய்யுங்கள். தாமதமின்றி வங்கிக்கும் தகவல் தெரிவிப்பதன் மூலம் பண இழப்பைத் தடுக்க முடியும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஒருவேளை நீங்கள் இது போன்ற மோசடிக்கு ஆளானால், உடனடியாக தேசிய சைபர் குற்றப்பிரிவு உதவி எண்ணான 1930-ஐ அழைக்க வேண்டும் அல்லது அதிகாரப்பூர்வ சைபர் குற்ற இணையதளத்தில் புகார் அளிக்க வேண்டும்.