

செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI, இன்று தொழில்நுட்ப உலகத்தை மட்டுமல்லாமல் மருத்துவத் துறையையும் வேகமாக மாற்றி வருகிறது. நோய்களைக் கண்டறிதல், மருத்துவத் தரவுகளை ஆய்வு செய்தல், புதிய மருந்துகளை உருவாக்குதல் என பல்வேறு பணிகளில் AI பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், Anthropic நிறுவனத்தின் CEO டாரியோ அமோடெய் வெளியிட்டுள்ள ஒரு கருத்து உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது. அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் AI-ன் உதவியுடன் மனிதர்களைப் பாதிக்கும் பெரும்பாலான நோய்களுக்கு சிகிச்சை அல்லது தீர்வு காணும் அளவுக்கு மருத்துவ அறிவியல் முன்னேறக்கூடும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
AI மூலம் மருத்துவத்துறையில் ஏற்படப்போகும் மாற்றம் குறித்து டாரியோ அமோடெய் மிகுந்த நம்பிக்கையுடன் பேசியுள்ளார். அவரது பார்வையில், மனிதர்கள் பல தசாப்தங்களில் மேற்கொள்ளவேண்டிய உயிரியல் ஆராய்ச்சிகளை AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் மிகக் குறுகிய காலத்தில் மேற்கொள்ள முடியும். குறிப்பாக புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான நோய்களுக்கு புதிய சிகிச்சை முறைகளை கண்டறிவதில் AI மிகப்பெரிய உதவியாக இருக்கலாம்.
அவரது இந்தக் கருத்து திடீரென உருவானதல்ல. 2024ஆம் ஆண்டு அவர் எழுதிய ‘Machines of Loving Grace’ என்ற கட்டுரையிலும், AI மூலம் உயிரியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியின் வேகம் பல மடங்கு அதிகரிக்கக்கூடும் என்று அவர் விளக்கியிருந்தார். ஒரு நூற்றாண்டில் நடைபெறக்கூடிய உயிரியல் முன்னேற்றத்தை ஒரு தசாப்தத்திற்குள் கொண்டு வரக்கூடிய வாய்ப்பு AI-க்கு இருப்பதாக அவர் அப்போது குறிப்பிட்டிருந்தார்.
இதற்குப் பின்னால் முக்கியமான காரணம், மனிதர்களால் நேரடியாக ஆய்வு செய்ய முடியாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் மருத்துவத் தரவுகளை AI விரைவாக ஆராய முடிவதுதான். நோய்களின் தன்மையைப் புரிந்து கொள்வது, புதிய மருந்துகளுக்கான மூலக்கூறுகளைத் தேடுவது, சிகிச்சைக்கான சாத்தியமான வழிகளை ஒப்பிடுவது போன்ற பணிகளில் AI ஆராய்ச்சியாளர் களுக்கு உதவுகிறது. இதனால் பல ஆண்டுகள் எடுத்துக்கொள்ளக்கூடிய ஆரம்பகட்ட ஆராய்ச்சிகள் வேகமடைய வாய்ப்பு உள்ளது.
ஆனால் இங்கு ஒரு முக்கியமான உண்மையையும் கவனிக்க வேண்டும். “AI அடுத்த 10 ஆண்டுகளில் அனைத்து நோய்களையும் குணப்படுத்திவிடும்” என்று அறிவியல் உலகம் உறுதி செய்யவில்லை.
அமோடெய் தாமே, தற்போதைய AI இன்னும் அவர் முன்பு கற்பனை செய்த அளவுக்கு வேகமாக மருத்துவ முன்னேற்றத்தை ஏற்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.சிறந்த மருத்துவத் தரவுகள், ஆராய்ச்சி கட்டமைப்பு, மனித விஞ்ஞானிகளின் பங்களிப்பு மற்றும் ஒழுங்குமுறை அனுமதிகள் போன்றவை அவசியம்.
மேலும், ஒரு புதிய மருந்தைக் கண்டுபிடிப்பது மட்டுமே போதாது. அது ஆய்வகப் பரிசோதனைகள், மருத்துவப் பரிசோதனைகள், பாதுகாப்பு மதிப்பீடுகள் மற்றும் அரசு அனுமதிகள் என பல கட்டங்களை கடக்க வேண்டும். எனவே AI வேகத்தை அதிகரித்தாலும், மனித மருத்துவர்களையும் விஞ்ஞானிகளையும் முழுமையாக மாற்றிவிடும் என்று கூற முடியாது.
மருத்துவத்தில் AI தரும் புதிய வாய்ப்புகள்;
மருத்துவ துறையில் AI ன் பயன்பாடு நோய்களைக் கண்டறிவதோடு நின்றுவிடப் போவதில்லை.. ஒருவரின் மரபணுத் தகவல்கள்,மருத்துவ வரலாறு, பரிசோதனை முடிவுகள் மற்றும் உடல்நிலை மாற்றங்கள் போன்ற பல்வேறு தகவல்களை ஒருங்கிணைத்து குறிப்பிட்ட நோய்க்கான ஆபத்தை கணிக்க AI உதவக்கூடும்.
இதனால் நோய் தீவிரமடைவதற்கு முன்பே சிகிச்சையைத் தொடங்கும் வாய்ப்பு உருவாகலாம் .. குறிப்பாக புற்றுநோய் போன்ற நோய்களில் ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல் மிகவும் முக்கியமானது.. மருத்துவப் படங்களை மிக நுணுக்கமாக ஆய்வு செய்வதன் மூலம் மனித கண்களுக்கு எளிதில் தெரியாத சில மாற்றங்களைக் கூட AI கண்டறிய உதவலாம்.
இதுபோன்ற தொழில்நுட்பங்கள் மருத்துவர்களின் முடிவெடுப்புக்கு துணையாக இருக்கலாம்..அதே போல புதிய மருந்துகளை உருவாக்குவதிலும் AI முக்கிய பங்கு வகிக்கிறது.. ஆயிரக்கணக்கான வேதிப் பொருட்களை ஆய்வு செய்து எந்த மூலக்கூறுகள் ஒரு குறிப்பிட்ட நோய்க்கு எதிராக செயல்படக் கூடும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் விரைவாகக் கண்டறிய AIஉதவுகிறது.
இதனால் மருந்து ஆராய்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் செலவிடப்படும் நேரமும் உழைப்பும் குறையக் கூடும்.. எனினும் AI வழங்கும் தகவல்கள் மருத்துவர்களால் கவனமாக சரிபார்க்கப் படவேண்டும். மனித உயிர் தொடர்பான முடிவுகளில் தொழில்நுட்பத்தின் வேகத்தை விட துல்லியமும் பாதுகாப்பும் முக்கிமானவை. எனவே எதிர் கால மருத்துவத்தில் AI ஒரு மருத்துவருக்கு மாற்றாக அல்லாமல் அவருக்கு வலிமையான துணையாக இருப்பதே நம்பகமான பாதையாக இருக்கும்.
AI மருத்துவத் துறைக்கு ஒரு மிகப்பெரிய நம்பிக்கையை வழங்கியுள்ளது. அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் பல நோய்களுக்கான புதிய சிகிச்சைகள் உருவாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிச்சயம் உற்சாகம் அளிக்கிறது. ஆனால் அது ஒரு எதிர்காலக் கணிப்பு என்பதை மறந்துவிடக் கூடாது. AI-யின் வேகம், மனித அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மருத்துவ நிபுணர்களின் அனுபவம் ஆகியவை ஒன்றிணைந்தால்தான் இந்தக் கனவு நனவாகும். ஒருநாள் “குணப்படுத்த முடியாத நோய்” என்ற வார்த்தையே அரிதாகிவிட்டால், அதில் AI-ன் பங்கு நிச்சயம் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும்.
AI மருத்துவத் துறைக்கு வேகத்தையும் துல்லியத்தையும் வழங்கும் புதிய சக்தியாக மாறி வருகிறது. எனினும் மனித மருத்துவர்களின் அனுபவத்தையும் அக்கறையையும் AI ஒருபோதும் முழுமையாக மாற்ற முடியாது.. மனித அறிவும், செயற்கை நுண்ணறிவும் இணைந்தால் எதிர் கால மருத்துவம் இன்னும் பாதுகாப்பானதாகவும் சிறப்பானதாகவும் அமையும்!