

மொபைல் போன்களின் வளர்ச்சி வெறும் கருவி மாற்றம் அல்ல, மனிதனின் அன்றாட வாழ்வை மறுவமைத்த புரட்சி. ஆரம்பத்தில் அழைப்புக்கு மட்டும் இருந்த பெரிய, கனமான போன்கள், இன்று தொடுதிரை, அதிவேக இணையம், செயலிகள், கேமரா, வங்கி, சமூக வலைத்தளங்கள், ஆன்லைன் சேவைகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் ஸ்மார்ட்போன்களாகிவிட்டன. AI இணைந்து குரல் வழி உதவி, மொழிபெயர்ப்பு, சுருக்கம், பாதுகாப்பு என தனிப்பட்ட உதவியாளராக மாறுகிறது.
ஒரு காலத்தில் தொலைபேசி என்பது வீட்டின் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருக்கும் கருவி. அதில் பேசுவதற்கு கம்பி இணைப்பு அவசியம். இன்று? உலகமே நம் கைக்குள் அடங்கிவிட்டது! ஒரு சிறிய ஸ்மார்ட்போன் மூலம் தொலைதூரத்தில் இருக்கும் உறவினர்களுடன் பேசுவதில் தொடங்கி, பணம் அனுப்புவது, படம் எடுப்பது, செய்திகளைத் தெரிந்துகொள்வது, திரைப்படம் பார்ப்பது என அன்றாட வாழ்க்கையின் பெரும்பாலான தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடிகிறது.
இந்தப் பயணம் சாதாரண தொழில்நுட்ப வளர்ச்சி அல்ல; மனித வாழ்க்கை முறையையே மாற்றிய ஒரு மாபெரும் புரட்சி.
செங்கல் போல் இருந்த மொபைல்!
மொபைல் போன் அறிமுகமான காலத்தை நினைத்துப் பார்த்தால் இன்று நமக்கே ஆச்சரியமாக இருக்கும். ஆரம்பகால மொபைல் போன்கள் இன்றைய போன்களுடன் ஒப்பிடும்போது மிகவும் பெரியதாகவும் கனமாகவும் இருந்தன.
சில மாடல்கள் கிட்டத்தட்ட ஒரு சிறிய செங்கல் போலவே தோற்றமளித்தன. அழைப்புகளை மேற்கொள்வது மட்டுமே அவற்றின் முக்கியப் பயன்பாடாக இருந்தது.
பின்னர் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்தது. போன்களின் அளவு குறைந்தது; எடை குறைந்தது. குறுஞ்செய்தி அனுப்பும் வசதி, கேமரா, இசை, இணைய வசதி என ஒவ்வொரு புதிய தலைமுறையிலும் புதுப்புது அம்சங்கள் இணைந்தன.
மொபைலில் இருந்து ஸ்மார்ட்போன்!
ஸ்மார்ட்போன்களின் வருகை இந்தப் பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தொடுதிரை, அதிவேக இணையம், செயலிகள், GPS, உயர்தர கேமரா என ஒரு சிறிய கருவிக்குள் பல சாதனங்களின் பணிகள் ஒன்றிணைந்தன.
இன்று ஸ்மார்ட்போன் வெறும் தகவல் தொடர்புக் கருவியாக இல்லை. அது நமது கேமரா, வங்கி, அலுவலகம், பொழுதுபோக்கு மையம், வழிகாட்டி எனப் பல வேடங்களில் செயல்படுகிறது.
அடுத்த புரட்சி – AI Smartphone!
இப்போது செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம் ஸ்மார்ட்போன்களின் அடுத்த கட்டமாக மாறியுள்ளது. நாம் எழுதும் தகவலைச் சுருக்குவது, புகைப்படங்களை மேம்படுத்துவது, குரலைப் புரிந்துகொள்வது, மொழிபெயர்ப்பது, தேவையான தகவல்களை விரைவாகத் தேடித் தருவது என AI பல பணிகளை எளிதாக்குகிறது.
நாம் என்ன கேட்கிறோம் என்பதை மட்டுமல்லாமல், நமது தேவையைப் புரிந்துகொண்டு உதவும் கருவியாக ஸ்மார்ட்போன் மாறிக்கொண்டிருக்கிறது.
மொபைல் போன்களின் வளர்ச்சியில் இணையத்தின் வருகை மற்றோரு முக்கியமான மைல்கல்லாக அமைந்தது.. முன்பு கணினி மூலமாக மட்டுமே இணையத்தை பயன்படுத்தியவர்கள் ஸ்மார்ட் போன்களின் வளர்ச்சிக்குப் பிறகு எங்கே சென்றாலும் இணையத்தை உடன் எடுத்துச் செல்ல தொடங்கினர். சமூக வலைத்தளங்கள், மின்னஞ்சல், வீடியோ அழைப்புகள், ஆன்லைன் வங்கி சேவைகள் எனப் பல வசதிகள் மொபைல் போனில் கிடைக்கத் தொடங்கின.
கேமராவும் தனி மாற்றத்தை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் வெறும் சில ஆயிரம் பிக்சல்கள் கொண்ட கேமராக்களாக இருந்தவை இன்று உயர் தர புகைப்படங்களையும், வீடியோக்களையும் எடுக்கும் அளவுக்கு வளர்ந்து வருகின்றன. இரவு நேரப் புகைப்படம் முதல் நிலப் பரப்பு காட்சிகள் வரை பலவற்றைத் தெளிவாக பதிவு செய்ய முடிகிறது.
அதே போல் செயலிகள் நமது அன்றாட வாழ்க்கையை மாற்றிவிட்டன. உணவு ஆர்டர் செய்வது, பயணத்தை திட்டமிடுவது , டிக்கெட் முன்பதிவு செய்வது, பொருட்களை வாங்குவது, உடற்பயிற்சியைக் கண்காணிப்பது என பல பல வேலைகள் சில தொடுதல்களில் முடிந்து விடுகின்றன.
AI இணைந்த பிறகு ஸ்மார்ட் போன்களின் திறன் மேலும் விரிவடைந்தது. புகைப்படத்தில் தேவையற்ற பொருளை நீக்குவது, குறிப்புகளை சுருக்குவது, மொழிகளை உடனடியாக மொழிபெயர்ப்பது , குரல் மூலம் தகவல்களை தேடுவது போன்ற பணிகளை AI எளிதாக்குகிறது. குறிப்பாக வயதானவர்களுக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் சிரமம் உள்ளவர்களுக்கும் குரல் அடிப்படையில் ஆன AI வசதிகள் பயனுள்ளதாக அமைகின்றன.
இவ்வாறு பார்த்தால் மொபைல் போனின் வளர்ச்சி என்பது அதன் அளவு குறைந்த கதை மட்டுமே அல்ல. மனிதனின் தேவைகளைப் புரிந்துகொண்டு அவற்றை எளிதாக நிறைவேற்றும் ஒரு தனிப்பட்ட டிஜிட்டல் உதவியாளராக அது மாறிவிட்டது.
இன்றைய AI smartphone களின் சிறப்பு பயனரின் தேவைக்கு ஏற்ப தனிப்பயனாக உதவுவதிலும் இருக்கிறது. உதாரணமாக நாம் அடிக்கடி பயன்படுத்தும் செயலிகள், புகைப்படம் எடுக்கும் விதம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு சில செயல்பாடுகளை விரைவுபடுத்த AI உதவுகிறது.
மாணவர்களுக்கு படிப்பில் உதவுவது , அலுவலகப் பணிகளை எளிதாக்குவது பயணத் திட்டங்களை உருவாக்குவது , புதிய மொழியைக் கற்றுக் கொள்ள உதவுவது என இதன் பயன்பாடுகள் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது.
அடுத்த தலைமுறை ஸ்மார்ட் போன்களில் AI இன்னும் ஆழமாக இணையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இணைய இணைப்பு இல்லாமலேயே சில AI பணிகளைச் செய்யும் திறன், அதிக பாதுகாப்பு, மேம்பட்ட குரல் உதவி, நிகழ் நேர மொழிபெயர்ப்பு போன்ற வசதிகள் அதிகரிக்கலாம்.
இதனால் ஒரு சாதனம் நமக்காக பல வேலைகளைச் செய்யும் தனிப்பட்ட உதவியாளராக மாறக்கூடும். ஆனால் தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும் அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது முக்கியம். நேரத்தை மிச்சப்படுத்தவும் அறிவைப் பெறவும் வாழ்க்கையை எளிதாக்கவும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தினால் அது நமக்கு வரப்பிரசாதம்..அதற்கு அடிமையாகாமல் தொழில்நுட்பத்தை நம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே உண்மையான முன்னேற்றம்.
செங்கல் அளவில் தொடங்கிய மொபைல் போன் பயணம், உள்ளங்கையில் அடங்கும் ஸ்மார்ட்போனாக மாறி, இன்று செயற்கை நுண்ணறிவுடன் சிந்தித்து உதவும் AI Smartphone வரை வந்துள்ளது. தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே இருக்கிறது. எதிர்காலத்தில் நமது கையில் இருக்கும் இந்தச் சிறிய கருவி இன்னும் எத்தனை ஆச்சரியங்களை நமக்குத் தரப்போகிறது என்பதை நினைத்தாலே வியப்பாக இருக்கிறது. ஒரு காலத்தில் கையில் இருந்தது தொலைபேசி.. இன்று அந்த கைக்குள் அடங்கி இருப்பது முழு உலகம் !!!