மகா கும்பமேளாவின் பிரம்மாண்ட ஏற்பாட்டில் சங்கம பகுதிக்கும் அகாடா பகுதிக்கும் இடையில் அற்புதமான இணைப்பாக இருக்கின்றன பீப்பாய் பாலங்கள்.
40 சதுர கிலோமீட்டர் பரப்பை 25 பிரிவுகளாக பிரிக்கும் பீப்பாய் பாலங்கள் ஒருங்கிணைந்த பகுதியாக செயல்படுகின்றன. பீப்பாய் பாலங்களுக்கு குறைந்த பராமரிப்பும் 24 மணி நேர கண்காணிப்பும் அவசியம் .
தற்காலிக பாலங்களாக செயல்படும் பீப்பாய் பாலங்கள் நீர்மட்டத்தில் மிதக்கும் பெரிய இரும்பு உருளைகளால் (பான்டூன்) ஆனவை. பேச்சு வழக்கில் பீப்பாய் பாலங்கள் என்று அழைக்கப்படும் இவை பொதுமக்களுக்கு மட்டுமல்ல,13 அகாடாக்களின் பிரம்மாண்ட முகாம்களுக்குள் நுழைவதற்கும், அமிர்த ஸ்நானம், ராஜ ஸ்நானத்தின் போது தேர்கள், யானை-குதிரைகள் மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்வதற்கும் வழிவகுக்கின்றன.
மகா கும்பமேளாவிற்காக 30 பீப்பாய் பாலங்கள் கட்டுவதற்கு 2,213 பான்டூன்கள் (பெரிய இரும்பு உருளைகள்) பயன்படுத்தப்பட்டன; ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் 14 -14 மணி நேரம் வேலை செய்து பாலத்தை கட்டி முடித்துள்ளனர் .
கங்கை நதியில் 30 பீப்பாய் பாலங்கள் கட்டுவது மகா கும்பமேளாவில் இதுவரை செய்யப்படாத மிகப்பெரிய பணியாகும். வலுவான இரும்புத் தகடுகளால் செய்யப்பட்ட உருளைகளை கிரேன்கள் உதவியுடன் நதியில் இறக்குகிறார்கள். பின்னர் அவற்றின் மீது கர்டர்களை வைத்து நட்டுகள் மற்றும் போல்ட்களால் இணைக்கிறார்கள். பின்னர் ஹைட்ராலிக் இயந்திரங்கள் மூலம் பான்டூன்களை சரியான இடத்தில் பொருத்துகிறார்கள். அதன் பிறகு மரப்பலகைகள், மணல் மற்றும் இரும்பு ஆங்கிள்களால் பாலத்திற்கு மேலும் உறுதித்தன்மை அளிக்கப்படுகிறது. இறுதியாக, பாலத்தின் மேற்பரப்பில் செக்கர்டு தகடுகள் பொருத்தப்படுகின்றன. இதனால் பக்தர்கள் மற்றும் வாகனங்கள் செல்வதற்கு மேற்பரப்பு வலுவாக இருக்கும்.
ஒரு பான்டூனின் எடை சுமார் 5 டன், ஆனாலும் அது தண்ணீரில் மிதக்கிறது. இதன் ரகசியம் ஆர்க்கிமிடிஸ் தத்துவத்தில் உள்ளது. "ஒரு பொருள் தண்ணீரில் மூழ்கும்போது, அது இடப்பெயர்ச்சி செய்த தண்ணீரின் எடைக்கு சமமான எதிர்விசையை எதிர்கொள்கிறது." இந்தத் தத்துவம்தான் கனமான பான்டூன்கள் தண்ணீரில் மிதக்க உதவுகிறது. பாலங்களின் வடிவமைப்பு 5 டன் வரை எடையைத் தாங்கும் வகையில் செய்யப்பட்டுள்ளது. இந்த வரம்பை விட அதிகமான எடை ஏற்றப்பட்டால், பாலம் சேதமடையலாம் அல்லது மூழ்கும் அபாயம் உள்ளது. எனவே பாலங்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம்.
பீப்பாய் பாலங்களின் தொழில்நுட்பம் 2,500 ஆண்டுகள் பழமையானது. கி.மு. 480-ல் பெர்சிய மன்னர் செர்க்சஸ், கிரேக்கத்தின் மீது படையெடுத்தபோது முதன்முதலில் இதைப் பயன்படுத்தினார். சீனாவிலும் ஜோவ் வம்சத்தின் (கி.மு. 11-ம் நூற்றாண்டு) காலத்தில் இதுபோன்ற பாலங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்தியாவில் முதல் பீப்பாய் பாலம் அக்டோபர் 1874-ல் ஹவுரா மற்றும் கொல்கத்தா இடையே ஹூக்ளி நதியில் கட்டப்பட்டது. இதை பிரிட்டிஷ்பொறியாளர் சர் பிராட்ஃபோர்ட் லெஸ்லி வடிவமைத்தார். இந்தப் பாலம் மர பான்டூன்களால் ஆனது. ஆனால் ஒரு புயலால் சேதமடைந்தது. இறுதியாக 1943-ல் அது அகற்றப்பட்டு புகழ்பெற்ற ஹவுரா பாலம் கட்டப்பட்டது.
மகா கும்பமேளா 2025-க்குப் பிறகு இந்தப் பாலங்கள் பிரிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் வைக்கப்படும்.