பெட்ரோல், டீசல் எல்லாம் ஓரம்போ... உலகையே அதிர வைத்த புதிய லேசர் டெக்னாலஜி!

Solar panels
Solar panels
Published on

கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோல் விலைகள் நாளுக்கு நாள் கிடுகிடுவென உயர்ந்துகொண்டே செல்வதை நாம் பார்த்து வருகிறோம். மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் தொடர் பிரச்னைகளால் உலகமே மாற்று எரிசக்தியை நோக்கி மிக வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் சோலார் துறை அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. 

இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாகாணத்தில் ஒரு மிகப்பெரிய அறிவியல் அற்புதம் நடந்துள்ளது. வானத்தில் பறக்கும் ஒரு விமானத்தில் இருந்து நேரடியாக பூமிக்கு லேசர் மூலம் மின்சாரத்தை அனுப்பி விஞ்ஞானிகள் ஒரு மாபெரும் சாதனையை செய்துள்ளனர். 

சுற்றுச்சூழலைக் காக்கும் சோலார் புரட்சி!

நிலக்கரி மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் பயன்பாட்டை நாம் முழுமையாக குறைத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஒரு காலத்தில் ஒரு டெராவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய பல ஆண்டுகள் எடுத்துக்கொண்ட சோலார் துறை, கடந்த இரண்டு வருடங்களில் அந்த உற்பத்தியை அப்படியே இரண்டு மடங்காக உயர்த்தி அசத்தியுள்ளது.

புதிய வகை சிலிக்கான் சோலார் பேனல்கள் பழைய மாடல்களை விட 60% அதிக அளவிலான மின்சாரத்தை எந்த ஒரு இழப்பும் இல்லாமல் மிக எளிதாக உற்பத்தி செய்கின்றன. அதுமட்டுமில்லாமல், இந்த தூய்மையான எரிசக்தி துறை உலகம் முழுவதும் படிம எரிபொருட்களை விட ஐந்து மடங்கு அதிகமான வேலைவாய்ப்புகளை அள்ளிக் கொடுத்துள்ளது. இந்தத் துறையை நம்பி பல கோடி குடும்பங்கள் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றன.

வானத்தில் இருந்து பாயும் கரண்ட்!

ஓவர்வியூ எனர்ஜி (Overview Energy) என்ற ஒரு புதிய ஸ்டார்ட்அப் நிறுவனம் தான் இந்த பிரம்மாண்டமான சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. அவர்கள் ஒரு செஸ்னா ரக விமானத்தில் பிரத்யேகமான லேசர் கருவிகளை பொருத்தி வானில் பறக்கவிட்டார்கள்.

அந்த விமானம் சுமார் 16000 அடி உயரத்தில் பறந்தபடியே, பூமியில் உள்ள சாதாரண சோலார் பேனல்களுக்கு லேசர் மூலமாக மின்சாரத்தை நேரடியாக அனுப்பி ஒரு மாபெரும் உலக சாதனை படைத்துள்ளது. நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு பொருளில் இருந்து இப்படி மனிதர்களின் கண்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாத கதிர்கள் மூலமாக கரண்டை அனுப்புவது உலக வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை.

இதையும் படியுங்கள்:
விண்வெளியில் சத்தம் கேட்காது என்பது உண்மையா?
Solar panels

விண்வெளியில் இருந்து வரப்போகும் மின்சாரம்!

இந்த சோதனை வெற்றியடைந்ததை தொடர்ந்து, அடுத்த கட்டமாக குறைந்த புவி சுற்றுப்பாதையில் இருந்தே நேரடியாக பூமிக்கு மின்சாரத்தை அனுப்பும் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. பூமியை விட விண்வெளியில் சூரிய ஒளி பல மடங்கு வலிமையாகவும் எந்த தடையுமின்றியும் கிடைக்கும். இதற்கு முன்பு கால்டெக் பல்கலைக்கழகம் மைக்ரோவேவ் அலைகள் மூலம் ஆற்றலை கடத்தும் சோதனையை செய்தது. 

ஆனால் இந்த புதிய ஆப்டிகல் லேசர் தொழில்நுட்பம் அதைவிட மிக சிறப்பானதாக கருதப்படுகிறது. இதை இன்னும் மேம்படுத்தி அதிக அடர்த்தி கொண்ட கதிர்களாக மாற்றினால், 2030-ம் ஆண்டுக்குள் மெகாவாட் அளவிலும், அதன்பிறகு கிகாவாட் அளவிலும் மின்சாரத்தை நாம் நேரடியாகப் பெறமுடியும்.

இதுவரை நாம் பூமிக்கு அடியில் இருக்கும் எரிபொருளை தேடித்தான் பல நூறு ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருந்தோம். ஆனால் நமது எதிர்காலமும் அதற்கான தீர்வும் வானத்திற்கு மேலே விண்வெளியில் தான் ஒளிந்திருக்கிறது என்பதை இந்த புதிய கண்டுபிடிப்பு நமக்கு மிகத்தெளிவாக உணர்த்துகிறது.

இதையும் படியுங்கள்:
உடைந்தால் தானாகவே ஒட்டிக்கொள்ளும் உயிருள்ள கட்டடங்கள். ஆச்சரியப்படுத்தும் புதிய தொழில்நுட்பம்!
Solar panels

இந்த தொழில்நுட்பம் மட்டும் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்துவிட்டால், உலகத்தின் தலையெழுத்தே முற்றிலுமாக மாறிவிடும். மனித குலத்தின் வளர்ச்சிக்கு இந்த விண்வெளி சோலார் திட்டம் ஒரு மிகப்பெரிய வரமாக அமையப் போகிறது என்பது மட்டும் உறுதி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com