

இன்றைய காலகட்டத்தில் காலையில் எழுந்ததும் ஒரு மெயில் டைப் செய்வது முதல், விதவிதமான படங்களை உருவாக்குவது வரை எல்லாவற்றுக்கும் நாம் AI டூல்களைத் தான் அதிக அளவில் நம்பியிருக்கிறோம். மிகவும் சுலபமாக நமது வேலைகளை முடித்துக் கொடுக்கும் இந்த தொழில்நுட்பத்திற்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய சுற்றுச்சூழல் ஆபத்து மறைந்திருக்கிறது.
நாம் கூகுளிலோ, மற்ற ஏஐ தளங்களிலோ கொடுக்கும் ஒவ்வொரு கமாண்டுக்கும் பல லிட்டர் தண்ணீர் செலவாகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
குளிர்விக்கும் சிஸ்டம்!
நமது வீட்டில் உள்ள சாதாரண லேப்டாப்பில் தொடர்ந்து இரண்டு மணி நேரம் வேலை செய்தாலே அது சூடாகிவிடும். அப்படியென்றால் உலகத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் கட்டளைகளை ஏற்றுச் செயல்படும் ஏஐ சர்வர்கள் எவ்வளவு சூடாகும் என்பதைச் சற்று கற்பனை செய்து பாருங்கள். இப்படி எந்நேரமும் நெருப்பைக் கக்குவது போல வேலை செய்யும் அந்த ராட்சச பிராசஸர்கள் உருகிவிடாமல் இருக்க, அவற்றை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும்.
இதற்காகவே பிரத்யேகமான 'கூலிங் டவர்கள்' அமைக்கப்பட்டு, சூடான இயந்திரங்களின் மேற்பரப்பில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. கூகுள் நிறுவனத்தின் 2024 சுற்றுச்சூழல் அறிக்கை சமீபத்தில் ஒரு பகீர் தகவலை வெளியிட்டது. அதாவது, 2023 ஆம் ஆண்டில் மட்டும் அந்த நிறுவனத்தின் டேட்டா சென்டர்களைக் குளிர்விக்க சுமார் 610 கோடி கேலன் நன்னீர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய வருடத்தைவிட பதினேழு சதவீதம் அதிகம் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நன்னீர் எதற்கு?
கம்ப்யூட்டரை குளிர்விக்க எதற்கு நல்ல தண்ணீரை வீணாக்க வேண்டும், சாக்கடை நீர் அல்லது மறுசுழற்சி செய்யப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்தலாமே என்று பலரும் நினைக்கலாம். ஆனால், அங்கேதான் ஒரு பெரிய சிக்கல் இருக்கிறது. மறுசுழற்சி செய்யப்பட்ட தண்ணீரில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாது உப்புகள் அதிகமாக இருக்கும். இந்த நீரைப் பயன்படுத்தினால், பல கோடி ரூபாய் மதிப்புள்ள வெப்பப் பரிமாற்றி இயந்திரங்களில் உப்புப் படிந்து அவை சீக்கிரமாகவே பழுதாகிவிடும்.
அதனால்தான் நிறுவனங்கள் எந்தவித சமரசமும் இன்றி, மனிதர்கள் குடிப்பதற்குப் பயன்படுத்தும் சுத்தமான நன்னீரையே இந்த வேலைக்கும் பயன்படுத்துகின்றன. இதில் கொடுமை என்னவென்றால், இயந்திரங்களை குளிர்விக்க ஊற்றப்படும் தண்ணீரில் 80 சதவீதம் அப்படியே ஆவியாகி காற்றில் கலந்துவிடுகிறது. அந்த நீரை மீண்டும் நீர் சுழற்சிக்குள் கொண்டுவரவே முடியாது.
தண்ணீர் பஞ்சம்!
இந்த ஏஐ வளர்ச்சி இப்படியே போனால் எதிர்காலம் என்னவாகும் என்ற அச்சம் இப்போது பரவலாக எழுந்துள்ளது. புகழ்பெற்ற நிதி நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2028 ஆம் ஆண்டிற்குள் இந்த ஏஐ டேட்டா சென்டர்களின் தண்ணீர் தேவை பதினோரு மடங்கு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஒரு சராசரி டேட்டா சென்டர் என்பது, சுமார் ஐம்பதாயிரம் மக்கள் தங்களது தினசரி தேவைக்குப் பயன்படுத்தும் தண்ணீரை அசுர வேகத்தில் குடித்துவிடுகிறது. ஏற்கனவே உலகின் பல பகுதிகளில் மக்கள் குடிக்கக் கூட தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படும் நிலையில், இது மேலும் மிகப்பெரிய தண்ணீர் பஞ்சத்தை உருவாக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.