சிம் கார்டை கழற்றி வீசினாலும் மாட்டிக்கொள்வார்கள்! உங்கள் போனை போலீஸ் ட்ராக் செய்வது இப்படித்தான்!

Smartphone theft
Smartphone theft
Published on

நம்ம பாக்கெட்டில் இருக்கும் ஸ்மார்ட்போன், இப்போது வெறும் போன் மட்டும் கிடையாது. அது நம்ம மணி பர்ஸ், போட்டோ ஆல்பம், ஆபீஸ் ஃபைல் என எல்லாமே அதுதான். பஸ்ஸிலோ அல்லது கூட்டத்திலோ போனைத் தவறவிட்டுவிட்டு, பாக்கெட்டைத் தடவிப் பார்க்கும்போது போன் இல்லை என்றால், அடிவயிற்றில் நெருப்பைக் கொட்டினது போல இருக்கும்.

 "போச்சுடா... அவ்ளோதான்" என்று நாம் சோர்ந்து போய்விடுவோம். ஆனால், நாம் நம்பிக்கையை விட்டாலும், காவல்துறையினர் விடுவதில்லை. எத்தனையோ லட்சம் போன்கள் இருக்கும் இந்த ஊரில், சரியாகத் திருடப்பட்ட உங்கள் போனை மட்டும் அவர்கள் எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள்? 

போனின் IMEI Number!

நம்ம ஒவ்வொருத்தருக்கும் எப்படி கைரேகை அல்லது ஆதார் எண் தனித்துவமாக இருக்கோ, அதேபோல உலகத்துல இருக்கிற ஒவ்வொரு போனுக்கும் ஒரு தனி அடையாளம் இருக்கு. அதுதான் IMEI நம்பர். திருடன் போனைத் திருடின உடனே செய்ற முதல் வேலை, உள்ளே இருக்கும் சிம் கார்டை கழற்றி வீசுவதுதான். 

"சிம்மைத் தூக்கிப் போட்டாச்சு, இனி நம்மளக் கண்டுபிடிக்க முடியாது"னு அவன் தப்புக் கணக்கு போடுவான். ஆனால், அவன் வேறொரு சிம் கார்டை உள்ளே போட்டு போனை ஆன் செய்யும் அந்த நொடி, இந்த IMEI நம்பர் விழித்துக்கொள்ளும். அந்தப் புதிய சிம் கார்டு எந்த நெட்வொர்க் கம்பெனியைச் சேர்ந்ததோ, அந்தத் தகவல் உடனே பதிவாகிவிடும். இதை வைத்து போலீஸ் சுலபமாக நெருங்கிவிடுவார்கள்.

டவர் லொகேஷன்!

அடுத்ததாக, செல்போன் டவர்கள். ஒரு மொபைல் போன் இயங்க வேண்டும் என்றால், அது அருகில் இருக்கும் டவரோடு தொடர்பில் இருந்துகொண்டே இருக்க வேண்டும். "நான் இங்கேதான் இருக்கேன்" என்று ஒவ்வொரு நொடியும் போன் சிக்னல் அனுப்பிக்கொண்டே இருக்கும். 

திருடன் போனை ஆன் செய்து வைத்திருக்கும்போது, அந்த போன் எந்த டவர் வரம்பிற்குள் இருக்கிறது என்பதை போலீசாரால் துல்லியமாகக் கணிக்க முடியும். இதை 'டிரையாங்குலேஷன்' (Triangulation) என்று சொல்வார்கள். அதாவது மூன்று டவர் சிக்னல்களை வைத்து, அந்த நபர் நிற்கும் இடத்தை வட்டமிட்டு வளைத்து விடுவார்கள்.

இதையும் படியுங்கள்:
இன்றைய சினிமா சவால்: டாப் நடிகர்களே பயப்படும் ஒரு எதிரி!
Smartphone theft

கூகுள் மற்றும் GPS!

இன்றைய ஸ்மார்ட்போன்களில் ஜிபிஎஸ் (GPS) வசதி எப்போதும் இருக்கிறது. ஒருவேளை திருடன் போனை ஃபார்மட் செய்யாமல், இன்டர்நெட்டை ஆன் செய்தால், கூகுள் நமக்கு மிகப்பெரிய உதவியைச் செய்யும். நாம் முன்பே லாகின் செய்து வைத்திருக்கும் ஜிமெயில் ஐடி மூலமாக, 'Find My Device' வசதியை வைத்து போன் இருக்கும் இடத்தை மேப்பில் துல்லியமாகப் பார்த்துவிடலாம். 

சில சமயம் திருடன் ஆர்வக்கோளாறில் ஏதாவது சோஷியல் மீடியா ஆப்களை ஓபன் செய்தாலோ அல்லது யாருக்காவது மெசேஜ் அனுப்பினாலோ, அந்த டேட்டாவை வைத்தும் போலீஸ் அவர்களை மடக்கிப் பிடிப்பார்கள்.

இதையும் படியுங்கள்:
வியக்க வைக்கும் ஆன்மிகத் தொழில்நுட்பம்! நமது நாட்டில், ஒரே நேர்கோட்டில் 8 சிவாலயங்கள்!
Smartphone theft

தொழில்நுட்பம் வளர வளர, திருடர்களைப் பிடிப்பதும் எளிதாகி வருகிறது. ஆனால், இதில் நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். போன் வாங்கியவுடனே அதன் IMEI நம்பரை ஒரு டைரியில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். 

போன் தொலைந்தால், தாமதிக்காமல் உடனே போலீசில் புகார் அளியுங்கள். அவர்கள் கையில் இருக்கும் சைபர் தொழில்நுட்பம் மூலம், உங்கள் போன் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், அதை மீட்டுக் கொண்டுவர முடியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com