

தொழில்நுட்ப உலகம் நாளுக்கு நாள் நம் கற்பனை களுக்கும் அப்பாற்பட்ட பல விந்தைகளை நிகழ்த்தி வருகிறது. அந்த வகையில், சொகுசு கார்களில் இருக்கும் ஹெட்லைட்டுகளையே ஒரு மினி தியேட்டர் ப்ரொஜெக்டராக மாற்றும் அதிரடி தொழில்நுட்பம் தற்போது வாகன உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹுவாவே (Huawei) அறிமுகப்படுத்தியுள்ள இந்த "எக்ஸ்பிக்ஸல்" (XPixel) தொழில்நுட்பம், எதிர்காலக் கார்கள் வெறும் பயணத்திற்கானவை மட்டுமல்ல, அவை நகரும் பொழுதுபோக்கு மையங்கள் என்பதையும் நிரூபித்துள்ளது.
ஹெட்லைட் தியேட்டர்: இது எப்படிச் சாத்தியம்?
வழக்கமான கார்களில் இருக்கும் விளக்குகள் இருளைப் போக்குவதற்கும், பாதையை வெளிச்சமாக்குவதற்கும் மட்டுமே பயன்படுகின்றன. ஆனால், இந்த நவீன சீனக் கார்களில் மில்லியன் பிக்சல்கள் (Million Pixels) கொண்ட அதிநவீன எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
காரை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு, அதன் "ஓபன்-ஏர் சினிமா" (Open-air cinema) வசதியை ஆன் செய்யும்போது, இந்த ஹெட்லைட்டுகள் ஒரு பிரம்மாண்டமான சினிமா ப்ரொஜெக்டராக மாறிவிடுகின்றன. காரின் முன்னால் இருக்கும் சுவரிலோ அல்லது பெரிய திரையிலோ சுமார் 100 முதல் 120 இன்ச் அளவுள்ள முழு வண்ணக் காட்சிகளை (Full-color) இதனால் துல்லியமாக ஒளிபரப்ப முடியும். இதன் மூலம் மொபைல் அல்லது காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழியாகப் படங்கள், விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றைக் கண்டு ரசிக்க முடியும்; தரையிலேயே வீடியோ கேம்களையும் விளையாட முடியும்.
அதிநவீன வண்ணக் கலவையான RGB (Red, Green, Blue) தொழில்நுட்பம் தான் இந்த அதிசயத்திற்குப் பின்னால் உள்ள ரகசியமாகும். சிவப்பு, பச்சை, நீலம் ஆகிய மூன்று முதன்மை வண்ணங்களை வெவ்வேறு அளவுகளில் துல்லியமாகக் கலப்பதன் மூலம், இந்த ஹெட்லைட்டு களால் கோடிக்கணக்கான வண்ணங்களை உமிழ முடிகிறது. இதனால்தான் தியேட்டரில் பார்ப்பது போன்றே மிகத் துல்லியமான கலர் சினிமாக்களைச் சாலையில் பார்க்க முடிகிறது.
பொழுதுபோக்கு மட்டுமின்றி, இரவு நேரத்தில் சாலையில் குறியீடுகளைப் பிரதிபலிப்பது, பாதசாரிகளுக்கான வழியைக் காட்டுவது எனப் பாதுகாப்பு ரீதியாகவும் இது பயன்படுகிறது.
இந்தத் தொழில்நுட்பம் இந்தியாவில் இப்போது வர வாய்ப்பில்லை ஏன்?
இந்தக் கவர்ச்சிகரமான மற்றும் வியப்பூட்டும் தொழில்நுட்பம் இந்திய வாகனச் சந்தைக்கு இப்போது உடனடியாக வர வாய்ப்பில்லை என்பதே தற்போதைய யதார்த்த நிலை. அதற்கான முக்கியக் காரணங்கள் இதோ:
வடிவமைப்பு மற்றும் பிரீமியம் சந்தை:இந்த எக்ஸ்பிக்ஸல் மற்றும் முழுமையான RGB ஹெட்லைட் தொழில்நுட்பம் தற்போது சீனா மற்றும் சில சர்வதேச சந்தைகளில் மட்டுமே விற்பனையாகும் மிகவும் விலையுயர்ந்த அதிநவீன மின்சாரக் கார்களில் (AITO M9, Stelato S9 போன்றவை) மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவை இன்னும் இந்தியச் சந்தைக்குள் கால் பதிக்கவில்லை.
சாலையோரம் நிறுத்திவிட்டு, சுவர்களில் படம் பார்க்கும் அளவிற்கான உள்கட்டமைப்பும், அமைதியான திறந்தவெளிச் சூழலும் (Open-air drive-in spaces) தற்போதைக்கு மிகவும் குறைவு.
இந்தியாவில் பிஎம்டபிள்யூ, ஆடி போன்ற சில சொகுசு கார்களில் சாலையில் குறியீடுகளைக்காட்டும் "டிஜிட்டல் லைட்" வசதிகள் ஓரளவிற்கு இருந்தாலும், முழுமையான வண்ண சினிமாக்களைப் பார்க்கும் அளவிற்கான RGB தொழில்நுட்பம் கொண்ட கார்களை இறக்குமதி செய்ய வேண்டுமெனில், அதன் விலை கோடிகளைத்தாண்டும்.
நடுத்தர மற்றும் பட்ஜெட் கார் சந்தையைக் கொண்ட இந்தியாவில் இதற்கான வரவேற்பு தற்போதைக்குக் குறைவுதான்.
டி வி கள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் கார்களின் உள்புற விளக்குகளில் (Ambient lighting) RGB தொழில்நுட்பத்தை நாம் இந்தியாவில் சாதாரணமாகப் பயன்படுத்தி வந்தாலும், அதை காரின் முகப்பு விளக்குகளில் கொண்டுவந்து தியேட்டராக மாற்றும் தொழில்நுட்பம் இந்தியச் சாலைகளுக்கு வர இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
எனினும், ஆட்டோமொபைல் துறையின் இந்த அபரிமிதமான வளர்ச்சி, எதிர்காலப் பயணங்கள் எவ்வளவு சுவாரசியமாக இருக்கப்போகின்றன என்பதற்கு ஒரு சிறந்த சான்றாகும்!