

இந்தியா, ஹரியானா ஜிந்த்-சோனிபட் இடையே 10 பெட்டிகள் கொண்ட உலகின் மிக நீளமான ஹைட்ரஜன் ரயிலை இயக்கி பசுமை ரயில் துறையில் புதிய சாதனை படைத்துள்ளது. அதிக அழுத்த ஹைட்ரஜன் சேமிப்பு, தானியங்கி பாதுகாப்பு அமைப்பு, ஓட்டுனர் பாதுகாப்பு, அவசர கால மாற்று இயக்கம் போன்ற அம்சங்களுடன், 2,400 kW திறன், 250 கி.மீ பயண திறன், குறைந்த கட்டணத்தில் சுற்றுச்சூழல் நட்பு சேவையை வழங்குகிறது.
பசுமை ரயில் திட்டத்தின் முக்கிய அம்சமான ஹைட்ரஜன் ரயில் சேவையை ஊக்குவிக்கும் உலக நாடுகளான ஜெர்மனி, ஜப்பான், சீனா மற்றும் அமெரிக்காவின் வரிசையில் தற்போது இந்தியா இணைந்துள்ளது. ஹரியானாவின் ஜிந்த் - சோனிபட் இடையே முதல் ஹைட்ரஜன் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.
பல்வேறு வளர்ந்த நாடுகள் இரண்டு முதல் மூன்று பெட்டிகள் உடைய ஹைட்ரஜன் ரயிலை மட்டும் இயக்கி வரும் நிலையில் 10 பெட்டிகள் அடங்கிய உலகின் மிக நீளமான பிராட் - கேஜ் ரயிலை இயக்கி இந்தியா சாதனை படைத்துள்ளது.
அந்த வகையில் ஹைட்ரஜன் ரயில் இயங்கும் விதம் குறித்தும்,பயன்கள், அதன் சிறப்பு அம்சங்கள் குறித்தும் இப்பதிவில் காண்போம்.
ஹைட்ரஜன் ரயில் இயங்கும் விதம்
ஹைட்ரஜன் வாயு மிகவும் ஆபத்தானது. அதனால் ரயிலில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பாதுகாப்புடன் கூடிய பெட்டியில் அதிக அழுத்தம் கொண்ட ஹைட்ரஜன் நிரப்பப்படுகிறது. காற்றுடன் ஹைட்ரஜன் வேதி வினை புரியும்போது மின்சாரம் உற்பத்தியாகி ஹைட்ரஜன் ரயில் இயங்குகிறது.
ஹைட்ரஜன் ரயிலின் பயன்கள்
ஹைட்ரஜன் ரயிலால் சுற்றுச்சூழலுக்கு எந்த கேடும் ஏற்படாது. ஹைட்ரஜன் ரயில், டீசல் இன்ஜின்களைப் போல கார்பன் மற்றும் கரும்புகையை வெளியிடுவதில்லை. இதற்கு பதிலாக ஹைட்ரஜன் வேதி வினையால் நீராவி மட்டுமே துணை பொருளாக வரும்.
ஹைட்ரஜன் ரயிலின் சிறப்பம்சங்கள்
இந்திய ஹைட்ரஜன் ரயில்கள் உலகின் மிக நீண்ட ரயில்களாக இருக்கும். ஹைட்ரஜன் ரயிலில் ஆபத்தான நேரத்தில் அதாவது அசாதாரணமான செயல்பாடு ஏதேனும் கண்டறியப்பட்டால் தானியங்கி முறையில் செயல்படும் பாதுகாப்பு அமைப்பு ஹைட்ரஜன் விநியோகத்தை தானாகவே நிறுத்தும் வகையில் முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரயில் ஓட்டுனரின் அறை அவரது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரயிலை பாதுகாப்பான இடத்திற்கு அவசர காலங்களில் கொண்டு செல்லும் சிறப்பு வசதியும் ஹைட்ரஜன் ரயிலில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஜிங்க் நகரில் ரயில் ஓட்டத்தை தாண்டி மிகப்பெரிய அதாவது ஒரே நேரத்தில் 3000 கிலோ ஹைட்ரஜனை சேமிக்கும் நிலையம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக ஹைட்ரஜன் ரயிலில் பயண தூரத்தை பொறுத்து கட்டணம் 5 ரூபாயில் தொடங்கி அதிகபட்சமாக 25 ரூபாய் வரை நிர்ணயிக்கப் பட்டுள்ளது முக்கிய அம்சமாக பார்க்கப் படுகிறது.
இந்தியாவில் ஹரியானாவின் ஜிந்த் - சோனிபட் இடையே இயக்கப்படும் 10 பெட்டிகள் கொண்ட ஹைட்ரஜன் ரயிலில் 2600 பயணியர் பயணிக்கலாம். இரண்டு அல்லது மூன்று பெட்டிகள் மட்டும் உலகளவில் இயக்கப்படும் வேளையில் இந்தியா உலக அரங்கில் ஒரு படி முன்னேறி பத்து பெட்டிகள் கொண்ட ஹைட்ரஜன் ரயில் சேவையை துவக்கியுள்ளது.
வணிக ரீதியாக ஹைட்ரஜன் ரயில் 75 கிமீ வேகத்திலும், அதிகபட்சமாக 110 கிமீ வேகத்திலும் இயங்கும் திறன் கொண்டது. ஹைட்ரஜன் எரிபொருள் செல் மூலம் இயங்கும் இந்த ரயில் 2,400 kW திறன் கொண்டது. ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 250 கி.மீ தூரம் வரை பயணிக்கலாம்.
இயற்கையின் நண்பனான ஹைட்ரஜன் ரயில்
ரயில் போக்குவரத்தில் நிலக்கரி , டீசல் பயன் படுத்தியதால் அதிகளவு கார்பன் உமிழப்பட்டு வந்தது. அதற்கு மாற்றாக தூய்மையான மற்றும் நிலையான ரயில் போக்குவரத்தை நோக்கி இந்தியா முன்னேறி உள்ளது. மேலும் இந்தியாவின் தலைமையை வலுப்படுத்துவதுடன் 'தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம்' மற்றும் நாட்டின் நீண்ட கால நிகர பூஜ்ஜிய உமிழ்வு' இலக்கை அடைவதற்கு ஹைட்ரஜன் ரயில் பங்களிக்கிறது.
ஜிந்த் - சோனி பட் ஹைட்ரஜன் ரயில் சேவை அனுபவத்தை பயன்படுத்தி கல்கா - சிம்லா உட்பட பல்வேறு பாரம்பரிய ரயில் பாதைகளிலும் ரயில்வே நிர்வாகம் ஹைட்ரஜன் ரயிலை அறிமுகம் செய்வது குறித்து பரிசீலித்து வருவது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதிலும் காலநிலை மாறுபாடு ஏற்பட்டு வரும் இவ்வேளையில் ஹைட்ரஜன் ரயிலின் 'ஜீரோ கார்பன் உமிழ்வு' என்ற செய்தி சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு மிகவும் நற்செய்தியாக இருக்கும்.
இந்தத் தகவலைப் படிப்பதன் மூலம், இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஹைட்ரஜன் ரயில் தொழில்நுட்பம், அதன் சுற்றுசூழல் நன்மைகள் மற்றும் மலிவான பயணக் கட்டணங்கள் பற்றிய முழுமையான புரிதலைப் பெற்று, எதிர்காலப் பசுமைப் பயணங்களுக்கு உங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளலாம்.