

தற்போதைய காலகட்டத்தில், நாம் எதற்கெடுத்தாலும் ChatGPT-ஐப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம். சாதாரண விஷயத்திற்கான பதிலைத் தெரிந்துகொள்ளக்கூட ChatGPT-ஐத் திறந்துவிடுகிறோம். இந்த AI நம் வாழ்வில் பிரிக்க முடியாத ஓர் அங்கமாக மாறிக்கொண்டு வருகிறது. அதிலும் 'Gen Z' தலைமுறையினர், தங்கள் 50 சதவீத வேலைகளுக்கு ChatGPT-ஐயே நம்பியிருக்கிறார்கள். தற்போது உலகம் முழுவதும் 24 மணி நேரத்திற்குள் 2.4 பில்லியன் 'Prompts' ChatGPT-யில் கேட்கப்படுகின்றன.
மக்கள் ChatGPT-ஐ தெரபி, டேட்டிங், ஃபேஷன் போன்றவற்றைத் தெரிந்துகொள்ளப் பயன் படுத்துகிறார்கள். சிலர், "நான் அழகாக இருக்கிறேனா?" என்பது போன்ற உரையாடல்களுக்கும் இதைப் பயன்படுத்துகிறார்கள். இது போன்ற AI-யால் நமக்கு அதிக பலன் கிடைத்தாலும், இதனால் சில பாதிப்புகளும் இருக்கின்றன. நாம் ChatGPT-யிடம் தப்பித்தவறிக்கூடச் சொல்லக்கூடாத 5 விஷயங்களைப்(AI shocking truth) பற்றி இந்தப் பதிவில் காண்போம்:
1. ChatGPT-யிடம் உங்களைப் பற்றிய சென்சிட்டிவான விஷயங்களைச் சொல்லாதீர்கள். உங்களுடைய கடவுச்சொல், வங்கி விவரங்கள், அலுவலக ஆவணங்கள் போன்றவற்றை அதில் பதிவிடுவது சிக்கலை ஏற்படுத்தும். இதுபோன்ற முக்கியமான விஷயங்களை ரகசியமாக வைத்திருப்பதே நல்லது.
2. உங்களுடைய மருத்துவ வரலாறு மற்றும் தெரபி போன்ற தனிப்பட்ட உடல்நல விஷயங்களைச் சொல்லாதீர்கள். அதைப் பற்றிய எந்த அறிவுரைகளையும் நம்பி முயற்சித்துப் பார்க்க வேண்டாம். ChatGPT கொடுக்கும் பதில்கள் சில நேரங்களில் தவறாகக்கூட இருக்கலாம்; அதை முழுமையாக நம்புவது ஆபத்தில் முடியும். ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சினைகளுக்குத் தகுந்த மருத்துவரை அணுகுவதே சிறந்தது.
3. எப்படி ஹேக் செய்வது, எப்படி வெடிகுண்டு தயாரிப்பது போன்ற சட்டவிரோதமான (Illegal) கேள்விகளை ChatGPT-யிடம் கேட்பதைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் ஆர்வத்தினால் இது போன்ற கேள்விகளைக் கேட்டாலும், AI நிறுவனங்கள் இத்தகைய தேடல்களைக் கண்காணித்துக்கொண்டிருக்கும். இதனால் நீங்கள் தேவையற்ற சட்டப் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது.
4. AI சொல்வது அனைத்தும் முழுமையான உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அதனிடம் 'Conspiracy theories' பற்றி கேட்கும்போது அது தவறான அல்லது ஆதாரமற்ற பதில்களை வழங்கலாம். எனவே, எதையும் கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்ப்பது நல்லது.
5. நம் வாழ்க்கையில் நாம் எடுக்க வேண்டிய முக்கியமான முடிவுகளை AI-யிடம் கேட்காதீர்கள். "நான் வேலையை விட்டுவிடவா?", "நான் பிரேக்கப் செய்துகொள்ளலாமா?" போன்ற கேள்விகளுக்கு AI பதில் அளித்தாலும், அதற்கு உங்களுடைய வாழ்க்கை முறை, அனுபவம் மற்றும் உணர்வுகள் பற்றித் தெரியாது.
நம்முடைய எதிர்கால வளர்ச்சியில் AI-க்கு பெரும்பங்கு இருக்கிறது என்பது உண்மையே. இருப்பினும், அதனை நம் தேவைக்கு ஏற்றவாறு சரியான அளவில் பயன் படுத்திக்கொள்வது அவசியம். நாம் AI-யிடம் எதைப் பகிர்கிறோம் என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.