

உலக நாடுகள் பல தங்களை தற்காத்துக் கொள்வதற்கு அல்லது எதிரி நாடுகளை அச்சுறுத்துவதற்கு அணு ஆயுதங்களை வைத்துக் கொள்கின்றன. இந்த அணு ஆயுதங்கள் பெரிய அளவிலான ஆற்றலை வெளியிடுகின்றன. அதனால் அழிவை ஏற்படுத்து கின்றன. அணுகுண்டு என்பது மிகவும் ஆபத்தானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அது எங்கு வீசப்பட்டாலும் மனித உயிர்கள் இருந்ததற்கான தடயமே இல்லாது போய்விடும். மரம் செடிகள் கூட வளர முடியாது. இத்தகைய பேரழிவை ஏற்படுத்தும் அணு ஆயுதங் களுக்கும் காலாவதி தேதி உண்டு என்றால் நம்ப முடிகிறதா?
அணு ஆயுதங்களுக்கும் (Nuclear Weapon) ஒரு குறிப்பிட்ட ஆயுட்காலம் அல்லது காலாவதி தேதி போன்ற செயல் திறன் இழப்பு காலம் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளைப் போலவே, அணு ஆயுதங்களில் உள்ள பாகங்களும் காலப்போக்கில் வீரியம் இழந்து அல்லது பழுதடைந்து காலாவதியாகின்றன.
சிறிய ஆயுதங்கள் முதல் பெரிய மற்றும் மிகவும் ஆபத்தான ஆயுதங்கள் வரை ஆயுட்காலம் கொண்டவையே. அணுகுண்டுகள் கூட காலப்போக்கில் காலாவதி ஆகின்றன.
பொதுவாக அணு ஆயுதங்களின் செயல் ஆயுட்காலம் (Shelf life) அதன் பராமரிப்பைப் பொறுத்து 30 முதல் 50 ஆண்டுகள் வரை இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் அதிலுள்ள கதிரியக்கப் பொருட்கள் மில்லியன் கணக்கான ஆண்டுகள் நீடிக்கும்.
அணு ஆயுதங்கள் ஏன் காலாவதி ஆகின்றன? அவற்றின் ஆயுட்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணிகள்:
கதிரியக்கப் பொருள் (Radioactive Materials):
அணு ஆயுதங்களில் பயன்படுத்தப்படும் புளூட்டோனியம் (Plutonium), யுரேனியம் (Uranium) போன்ற கதிரியக்கத் தனிமங்கள் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக் கணக்கான ஆண்டுகள் சிதையாமல் நிலைத்து நிற்கும். அணுகுண்டின் மையப் பகுதியில் இருக்கும் புளூட்டோனியம்-239 மற்றும் யுரேனியம்-235 ஆகியவை மிக நீண்ட ஆயுளைக் கொண்டவை. உதாரணத்திற்கு புளூட்டோனியம் சிதைவடைய சுமார் 24,100 ஆண்டுகள் ஆகும். இருப்பினும் பல தசாப்தங்களாக கதிரியக்கம் வெளியாவதால் அதைச் சுற்றியுள்ள பாகங்கள் சேதம் அடையலாம்.
ட்ரிடியம் (Tritium):
அணு ஆயுதங்களின் வீரியத்தை அதிகரிக்க பயன்படும் ட்ரிடியத்தின் அரை ஆயுட்காலம் (Half-Life) வெறும் 12.3 ஆண்டுகள் மட்டுமே. இதனால் 10- 15 ஆண்டுகளில் இதன் அளவு குறைந்து, ஹீலியம்-3 வாயுவாக மாறிவிடும். எனவே குறிப்பிட்ட கால இடைவெளியில் ட்ரிடியத்தை மீண்டும் நிரப்ப வேண்டும்.
குறிப்பாக ஹைட்ரஜன் குண்டுகளில் பயன்படுத்தப்படும் ட்ரிட்டியத்தின் ஆயுட்காலம் மிகக் குறைவு. இதன் அரை ஆயுட்காலம் சுமார் 12.3 ஆண்டுகள் மட்டுமே. இதனால் அணுகுண்டுகளின் வீரியம் குறைந்துகொண்டே போகும்.
உதிரி பாகங்கள் பழுதாகுதல்:
குண்டுகளில் உள்ள இரசாயன வெடி மருந்துகள், மின்னணு சாதனங்கள் மற்றும் பேட்டரிகள் காலப் போக்கில் தங்கள் தன்மையை இழக்கின்றன. அணு ஆயுதங்களுக்குள் இருக்கும் எலக்ட்ரானிக் சர்க்யூட்டுகள், ஒயர்கள், வெடிபொருளைத் தூண்டும் டிட்டனேட்டர்கள் மற்றும் பிளாஸ்டிக் பாகங்கள் போன்றவை கதிரியக்கத்தின் வெப்பம் மற்றும் வீரியம் காரணமாக காலப்போக்கில் மக்கிப்போகும் அல்லது பழுதடைந்து விடும். இதனால் இவை பல ஆண்டுகள் சேமிப்பில் இருக்கும் போது செயலிழக்க வாய்ப்பு உள்ளது.
செயல்திறன் குறைவு:
சரியான பராமரிப்பு இல்லாவிட்டால், அணுக்கரு பிளவு (Nuclear Fission) அல்லது இணைவு (Nuclear Fusion) சரியாக நடைபெறாமல் போகலாம். எனவே அணு ஆயுதங்கள் எப்போதும் பயன்பாட்டுக்கு தயாராக இருக்க வேண்டுமானால், சில ஆண்டுகளுக்கு ஒரு முறை வல்லுனர்கள் அவற்றை சரிபார்த்து, வாயுக்களை நிரப்பி, உதிரிபாகங்களை புதுப்பிக்க வேண்டும்.
எப்படி பராமரிக்கப்படுகின்றன தெரியுமா?
அமெரிக்கா போன்ற நாடுகள் NNSA (National Nuclear Security Administration) போன்ற அமைப்புகள் மூலம் ஆயுள் நீட்டிப்பு திட்டங்களை (Life Extension Program) செயல்படுத்தி, பழைய ஆயுதங்களை அவ்வப்போது புதுப்பிக்கின்றன. அணு ஆயுதங்கள் காலாவதி ஆகி விடக்கூடாது என்பதற்காக அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் தங்களின் அணு ஆயுதக் கிடங்குகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.
காலாவதியாகும் நிலையிலுள்ள பாகங்களை மாற்றுவது, ட்ரிட்டியம் போன்ற வாயுக்களை மீண்டும் நிரப்புவது மற்றும் எலக்ட்ரானிக் அமைப்புகளை புதுப்பிப்பது போன்ற ஆய்வு நீட்டிப்புப் பணிகளை ஆண்டுதோறும் மேற்கொள்கின்றன.
அணு ஆயுதங்களை வைத்துள்ள நாடுகள் தங்களின் அணு ஆயுதங்கள் எப்போதும் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய "ஆயுட்கால நீட்டிப்பு திட்டங்களை" செயல்படுத்துகின்றன. இதன் மூலம் பழைய பாகங்கள் மற்றும் எரிபொருட்கள் மாற்றப்பட்டு, அணு ஆயுதங்களின் ஆயுள் மேலும் பல தசாப்தங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.
முறையாக பராமரித்து புதுப்பிக்காவிட்டால் எந்த ஒரு அணு ஆயுதமும் காலப்போக்கில் செயலற்ற ஒரு குப்பையாக மாறிவிடும். எனவே, ஆயுதங்கள் பாதுகாப்பாகவும் நம்பகத் தன்மையுடனும் இருப்பதை உறுதி செய்ய ஆண்டுதோறும் சோதனைகள் செய்யப்படுகின்றன.
காலாவதி தேதி எப்படி தீர்மானிக்கப்படுகிறது?
காலாவதி தேதியை தீர்மானிப்பது ஆயுதத்தின் வகை, அதன் வடிவமைப்பு மற்றும் அதை தயாரிப்பதில் எந்த வகையான பொருள் பயன்படுத்தப்பட்டது என்பதைக் குறித்து அமைகிறது. இது தவிர தொழில்நுட்ப மற்றும் நடைமுறை காரணிகளும் ஒரு சிறப்பு காரணியாக அமைகிறது. ஒரு ஆயுதத்தில் பயன்படுத்தப்படும் உலோகம், பிளாஸ்டிக் மற்றும் வெடிபொருள் வகையும் அந்த ஆயுதத்தின் இயக்க நேரத்தை பாதிக்கிறது.
எஃகு மற்றும் டைட்டானியம் போன்ற உயர்தர உலோகங்களால் செய்யப்பட்ட ஆயுதங்கள் மற்ற பொருட்களை விட நீண்ட காலம் நீடிக்கும் தன்மை கொண்டது. அத்தகைய ஆயுதங்களின் காலாவதி தேதி நீண்டது. அதே சமயம் ஒரு ஆயுதத்தை அதிகமாகப் பயன்படுத்தினால் அது விரைவில் காலாவதி ஆகிவிடும். கூடுதலாக அதிக வெப்பநிலை, ஈரப்பதம் அல்லது கடுமையான வானிலை போன்ற சில சூழல்களில் ஆயுதம் சேமிக்கப்பட்டால் அதன் ஆயுட்காலம் மேலும் குறைந்து விடுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
இந்த பதிவின் மூலம் அணு ஆயுதங்கள் பற்றிய தேவையற்ற அச்சங்களில் இருந்து விடுபட்டு, சர்வதேச பாதுகாப்பு மற்றும் அணுக்கரு அறிவியலின் நுணுக்கங்களை தெளிவாக புரிந்து கொள்வீர்கள்.