

பூமியில் உயிர்கள் வாழ்வதற்கான மிக முக்கியமான ஒன்று தண்ணீர். பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் பூமிக்கு தண்ணீர் எங்கிருந்து வந்தது என ஆராய்ந்து வருகின்றனர்.
பொதுவாக, பூமி உருவான பிறகு விண்கற்கள் மற்றும் கோமெட்கள் பூமியில் மோதியதால் தண்ணீர் உருவாகி இருக்கும். அதாவது, தண்ணீர் விண்வெளியில் இருந்து பூமிக்கு வந்ததாக பல விஞ்ஞானிகள் நம்பினர்.
ஆனால், சமீபத்தில் வெளியான புதிய ஆய்வு இந்த எண்ணத்தை சற்று மாற்றி அமைத்துள்ளது. கோள்களே அவற்றில் உள்ள எரிமலை மாக்மாவிலிருந்து தண்ணீரை உருவாக்கும் திறன் கொண்டிருக்கிறது எனக் கூறுகிறது.
மாக்மா என்றால் என்ன?
மாக்மா என்பது பூமியின் அடிப்பகுதியில் உள்ள உருகிய கற்கள் மற்றும் கனிமங்கள் கலந்த சூடான திரவம் ஆகும். எரிமலை வெடிக்கும் போது இந்த மாக்மா மேலே வந்து லாவாவாக வெளிப்படும்.
இந்த மாக்மாவில் பல்வேறு இரசாயன கூறுகள் இருக்கும். அதில் முக்கியமானவை ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன். இந்த இரண்டு கூறுகளும் இணைந்தால் தான் தண்ணீர் உருவாகிறது.
புதிய ஆய்வு என்ன சொல்கிறது?
புதிய விஞ்ஞான ஆய்வுகளின்படி, ஒரு கோள் உருவாகும் ஆரம்ப காலத்தில் அதன் உள்ளே மிகுந்த வெப்பம் இருக்கும். அந்த வெப்பத்தால் உள்ளே இருக்கும் கற்கள் உருகி மாக்மா கடல் போன்ற நிலையை உருவாக்கும்.
இந்த மாக்மா கடலில் இரசாயன மாற்றங்கள் நடக்கும்போது, ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து நீராவி உருவாகலாம்.
பின்னர் அந்த நீராவி கோளின் மேற்பரப்பிற்கு எழுந்து, வெப்பம் குறையும்போது மழையாக விழுந்து கடல்கள் உருவாகி இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் விளக்குகின்றனர்.
இந்த கண்டுபிடிப்பு மூலம், ஒரு கோளில் தண்ணீர் உருவாக விண்கற்கள் அல்லது கோமெட்கள் அவசியமில்லை. அந்த கோளின் உள்ளே இருக்கும் மாக்மா மற்றும் இரசாயன கூறுகளும் தண்ணீரை உருவாக்கும் திறன் கொண்டவை என்று தெரியவந்துள்ளது.
மேலும், விண்வெளியில் உள்ள பல கோள்கள் பற்றி நாம் அறிந்திருக்கிறோம். அவற்றில் சில கோள்கள் பூமியைப் போல கற்களால் உருவானவை. அவற்றின் உள்ளே மாக்மா போன்ற சூடான அமைப்புகள் இருக்கலாம். அப்படியானால், அந்த கோள்களிலும் தண்ணீர் உருவாகியிருக்க வாய்ப்பு இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதன் மூலம் பிரபஞ்சத்தில் மற்ற கிரகங்களில் உயிர்கள் இருக்கும் வாய்ப்பு இருக்கலாம் என கருதப்படுகிறது.
பூமியில் தண்ணீர் எப்படி வந்தது? என்ற கேள்விக்கு விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக பதில் தேடி வருகின்றனர். சமீபத்திய இந்த ஆய்வு, கோள்களின் உள்ளே இருக்கும் மாக்மாவிலிருந்தும் தண்ணீர் உருவாகி இருக்கு முடியும் என்பதை காட்டுகிறது.
அதோடு, இந்த கண்டுபிடிப்பு, கோள்களின் உருவாக்கம், பூமியின் வரலாறு மற்றும் பிரபஞ்சத்தில் உயிர்கள் இருக்க வாய்ப்பு போன்ற பல முக்கியமான விஞ்ஞான கேள்விகளுக்கு புதிய வெளிச்சத்தை அளிக்கிறது.