

செயற்கை நுண்ணறிவு மற்றும் செமி கண்டக்டர் துறையில் அதிரடி தாவலுடன் சாம்சங் தென் கொரிய பொருளாதாரத்தை புதிய உச்சத்துக்கு இட்டுச் செல்லத் தயாராகிறது. 2025ல் 47.5 டிரில்லியனாக இருந்த வருவாய் 2026ல் 110 டிரில்லியனாக உயரும் என நிறுவனம் அறிவித்துள்ளது. சிப் உற்பத்தி, ரொபாட், மருத்துவம், ஆடோமோடிவ், குளிர்சாதன தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் உலக முன்னணியை நோக்கி சாம்சங் பாய்கிறது.
தென் கொரியாவின் பொருளாதாரத்தையே புதிய உச்சகட்டத்திற்கு எடுத்துச்செல்ல சாம்சங் நிறுவனம் தயார்! செமி கண்டக்டர்களை தயாரிக்கும் இந்த நிறுவனம் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் துறையில் மிகப்பெரும் தாவலைச் செய்யப்போகிறது.
அமெரிக்காவில் உள்ள சிலிகான் வேலியில் தென் கொரியாவின் அதிபர் லே ஜே மியுங் சமீபத்தில் பேசுகையில், “தென் கொரியாவிற்கு இது ஒரு புதிய வாய்ப்பு” என்று பெருமிதத்துடன் கூறினார்.
சியோலில் அமைந்துள்ள தலைமையகத்திலிருந்து சாம்சங் நிறுவனம் 2025ம் ஆண்டு 47.5 டிரில்லியனாக இருந்த தங்கள் வணிகம் 2026ல் 110 டிரில்லியனாக ஆகப் போகிறது என்று ஒரு அறிக்கையில் தெரிவித்தது. செமி கண்டக்டர்களோடு ரொபாட், மருத்துவ தொழில்நுட்பம், ஆடோமோடிவ் எலக்ட்ரானிக்ஸ், குளிர்சாதனத்தில் புதிய முன்னேற்றத்துடன் கூடிய சாதனங்கள் ஆகியவற்றிலும் முத்திரை பதிய இருக்கிறது சாம்சங் AI !
இருந்தாலும் பெரும் தொகை சிப் தயாரிப்பிற்குத்தான் என்று அதன் வைஸ் சேர்மன் டான் ஹட்ச்சன் தெரிவிக்கிறார். உலகெங்கும் உள்ள மிகப்பெரிய நிறுவனங்கள் இந்த ‘சிப் ரேஸில்” மும்முரமாக பங்கு கொள்ளவிருக்கின்றன. ஏனெனில் ஏ.ஐ. தொழில்நுட்பம் தவிர்க்க முடியாத ஒன்றாக இப்போது ஆகிவிட்டது.
இந்த பந்தய ஓட்டத்தில் சாம்சங் முன்னணியில் முதலாவதாக நிற்க, அடுத்து TSMC, Micron Technology, Intel, SK Hynix ஆகிய நிறுவனங்கள் அணி வகுக்கின்றன! இந்த ஐந்து நிறுவனங்களும் இணைந்து செமி கண்டக்டர் தயாரிப்பில் 18000 கோடி டாலர்களை முதலீடு செய்ய இருக்கின்றன. 2033ம் ஆண்டு வாக்கில் செமி கண்டக்டர் வணிகச் சந்தையானது 22444 கோடி டாலர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனிப்பட்ட ஒரு நிறுவனம் 7300 கோடி டாலர்களை ஒரு வருடத்தில் முதலீடு செய்வது ஒரு அபூர்வமான விஷயம்தான் என்று செமி கண்டக்டர் பற்றிய மூத்த விமரிசகரான ஸ்டேசி ராஸ்கன் வியப்புடன் தெரிவிக்கிறார்.
இது தவிர ஃபவுண்ட்ரி தொழில்நுட்பத்திலும் முன்னணியில் வரத் துடிக்கிறது சாம்சங். இதனால் பயப்படுவது முன்னணி நிறுவனமாக இப்போது இருக்கும் TMSC தான்.
இன்னும் அடுத்தபடியாக மெமரி மார்கெட் எனப்படும் நினைவாற்றல் சாதனங்கள் சந்தையிலும் சாம்சங் முந்தத் துடிக்கிறது. தென் கொரியாவிலேயே இப்போது முன்னனியில் இருக்கும் SK Hynix நிறுவனத்துடனான தனது போட்டியைத் துவங்கிய சாம்சங், உலக தரத்துக்கேற்ப ஏ ஐ ஆக்ஸிலரேட்டர்களைத் தயாரிக்க இப்போது தயார்!
சாம்சங்கின் இந்த முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்ச்சியுறும் தென் கொரிய அரசாங்கம் தனது முழு ஆதரவையும் சாம்சங்கிற்கு வழங்க முன் வந்துள்ளது. வரிச் சலுகை, கட்டமைப்புகளில் உதவி என பல விதமாக தென் கொரிய அரசாங்கம் சாம்சங்கிற்கு உதவப்போகிறது. தென்கொரியாவின் ஏற்றுமதியில் 20 சதவிகிதம் சாம்சங்கின் பங்களிப்பு என்பது ஒரு பெரிய செய்தியாகிவிட்டது.
சாம்சங்கின் இந்த அதிரடி முன்னேற்றம் உலகெங்கும் உள்ள பெரிய நிறுவனங்களில் ஒரு பரபரப்பையும், பிரமிப்பையும் உருவாக்கியுள்ளது.
சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் உள்ள வணிகத்தில் இப்போது ஏற்பட்டுள்ள சிக்கலில் தென்கொரியா பெரிய ஆதாயத்தைப் பெற்று தன்னை பலப்படுத்திக்கொள்ளும் என்பதும் நிதர்சனமாகத் தெரிகிறது.
ஆக, ஏ.ஐ. தொழில்நுட்ப முன்னேற்றம் சாம்சங்கின் முன்னேற்றமாகி விட்டது. சாம்சங்கின் விஸ்வரூபத்தை உலகம் காண இப்போது தயார்!
இதையெல்லாம் இந்தியாவில் உள்ள நமது இளைஞர்கள் உன்னிப்பாகக் கவனித்து உலகின் தற்போதைய நிலைமைக்கேற்ப தங்களைத் தயார்படுத்திக்கொண்டு முன்னேறவேண்டும், இல்லையா!
உலகளாவிய ஏ.ஐ. சிப் சந்தையின் பிரம்மாண்ட வளர்ச்சியைப் புரிந்து கொள்வதன் மூலம், எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப எந்தெந்த தொழில்நுட்பத் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற தெளிவான வழிகாட்டுதலைப் பெறுவீர்கள்.