

மனித உடலின் மிகவும் வியக்கத்தக்க பாகங்களில் ஒன்று கைரேகைகள். குற்றப் புலனாய்வு முதல் ஸ்மார்ட்போன்களைத் திறப்பது வரை, இன்று கைரேகை என்பது ஒருவரின் அடையாள அட்டையாகவே மாறிவிட்டது. இருவருக்கு ஒரே மாதிரியான கைரேகை இருக்க முடியுமா? குறிப்பாக, இரட்டையர்களின் கைரேகைகள் எப்படி இருக்கும்? வாருங்கள், இதற்கு பின்னால் உள்ள அறிவியலைப் பார்ப்போம்.
கைரேகைகள் எவ்வாறு உருவாகின்றன?
நாம் பிறப்பதற்கு முன்பே, கருப்பையில் இருக்கும்போதே நமது கைரேகைகள் உருவாகின்றன. கரு உருவான 10 முதல் 15 வாரங்களுக்குள் விரல் நுனிகளில் உள்ள சரும மடிப்புகள் (Friction Ridges) வளரத் தொடங்குகின்றன.
இந்த சரும மடிப்புகள் உருவாவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.
1. மரபணுக்கள்: நமது டி.என்.ஏ (DNA) கைரேகையின் பொதுவான வடிவத்தைத் தீர்மானிக்கிறது.
2. சூழல் காரணிகள்: கருப்பையில் உள்ள அம்னியோடிக் திரவத்தின் அழுத்தம், குழந்தையின் அசைவு, தொப்புள் கொடியின் நீளம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கைரேகையின் நுணுக்கமான மாற்றங்களை உருவாக்குகின்றன.
கைரேகைகளின் வகைகள்: அறிவியலாளர்கள் கைரேகைகளை மூன்று முக்கிய பிரிவுகளாகப் பிரிக்கின்றனர்:
லூப்கள்: இது 60-70% மக்களிடம் காணப்படும் பொதுவான வடிவம். கோடுகள் ஒரு பக்கமாகத் தொடங்கி மீண்டும் அதே பக்கம் வளையும்.
வோர்ல்கள்: 25-35% மக்களிடம் காணப்படும். இவை வட்ட வடிவில் அமைந்திருக்கும்.
ஆர்ச்சுகள்: இது மிகவும் அரிதானது. கோடுகள் ஒரு பக்கத்திலிருந்து தொடங்கி மலைப்பாதை போல உயர்ந்து மறுபக்கம் செல்லும்.
இருவருக்கு ஒரே ரேகை இருக்க முடியுமா?
அறிவியல் ரீதியாக, இருவருக்கு ஒரே மாதிரியான கைரேகை இருப்பதற்கான வாய்ப்பு மிக அரிதானது. இதுவரை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. அதாவது, இந்த பூமியில் இதுவரை வாழ்ந்த மற்றும் வாழப்போகும் மனிதர்களில் இருவருக்கு ஒரே மாதிரியான ரேகை இருப்பது நடைமுறையில் சாத்தியமற்றது. கைரேகையில் உள்ள 'லூப்' (Loop), 'வோர்ல்' (Whorl) மற்றும் 'ஆர்ச்' (Arch) போன்ற வடிவங்கள் ஒருவருக்கு இருப்பது போலவே மற்றொருவருக்கு அமைந்தாலும், அவற்றின் நுணுக்கமான முடிச்சுகள் எப்போதும் மாறுபடும்.
இரட்டையர்களின் கைரேகைகள் ஒரே மாதிரியானவையா?
இது ஒரு பொதுவான கட்டுக்கதை. 'ஒரே மாதிரியான இரட்டையர்கள்' (Identical Twins) ஒரே மாதிரியான டி.என்.ஏ-வை பகிர்ந்துகொள்கிறார்கள். அவர்களின் முக அமைப்பும், குணாதிசயங்களும் ஒன்றாக இருக்கலாம். ஆனால் அவர்களின் கைரேகைகள் கண்டிப்பாக வேறானவை.
ஒரே மாதிரியான இரட்டையர்கள் ஒரே கருப்பையில் வளர்ந்தாலும், ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறு நேரங்களில் நகர்கிறது, வெவ்வேறு இடங்களில் கருப்பையைத் தொடுகிறது. இந்த சிறிய அழுத்த மாறுபாடுகள், அவர்களின் விரல் நுனிகளில் தனித்துவமான கோடுகளை உருவாக்குகின்றன. எனவே, பொதுவான DNA சோதனையில் இரட்டையர்களை வேறுபடுத்துவது கடினம் என்றாலும், கைரேகை மூலம் அவர்களை மிக எளிதாக வேறுபடுத்தி அறிய முடியும்.
கைரேகைகள் மாறுமா?
நமது வாழ்நாள் முழுவதும் கைரேகைகள் மாறுவதே இல்லை. ஒருவருக்குக் காயம் ஏற்பட்டால் கூட, புதிய சருமம் வளரும்போது பழைய ரேகையே மீண்டும் உருவாகும். ஆனால், ஆழமான காயங்கள் ஏற்பட்டால் கைரேகை நிரந்தரமாக மாறக்கூடும். ஒருவரது உடல் எடை கூடினாலோ அல்லது குறைந்தாலோ ரேகையின் அளவு மாறலாமே தவிர, அதன் வடிவம் மாறாது.
கைரேகை என்பது வெறும் அடையாளம் மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதனும் இந்த உலகில் தனித்துவமானவன் என்பதற்கான உயிரியல் சான்று. நவீனத் தொழில் நுட்பங்கள் எவ்வளவு வளர்ந்தாலும், ஒரு சிறு விரல் நுனியில் ஒளிந்துள்ள இந்த சிக்கலான அறிவியலை மிஞ்ச எவராலும் முடியாது.