
பெரும்பாலான விமானங்கள் எரிபொருள் மூலமாகவே இயங்குகின்றன. இதன் காரணமாக சில மணி நேரங்கள் பறந்த பின்னர், எரிபொருள் தீரும் தருவாயில், எரிபொருள் நிரப்ப தரை இறங்க வேண்டும். சில போர் விமானங்களில், வானில் பறக்கும் போதே எரிபொருள் நிரப்பும் வசதி உள்ளது. இதன் மூலம், சில நாட்களுக்கு தரையிறங்காமல் பறக்க முடியும். இந்நிலையில், சூரிய ஒளியால் இயங்க கூடிய விமானம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 90 நாட்களுக்கு தரையிறங்காமல், இந்த கண்காணிப்பு விமானத்தால் பறப்பில் ஈடுபட முடியும் என கூறப்படுகிறது.
2016 ஆம் ஆண்டில், 17,000 க்கும் மேற்பட்ட சூரிய சக்தி தகடுகளால் மூடப்பட்ட ஒரு வினோதமான தோற்றமுடைய விமானம், எதிர்கால விமானப் பயணத்தைப் பற்றிய ஒரு பார்வையை உலகிற்குக் காட்டியது.
ஒரு போயிங் 747 இன் இறக்கைகள் கொண்ட, ஆனால் ஒரு SUV வின் எடை மட்டுமே கொண்ட, அது ஒரு துளி எரிபொருளைப் பயன்படுத்தாமல் பூமியைச் சுற்றி வந்தது. சோலார் இம்பல்ஸ் 2 என்று அழைக்கப்படும் இது, சுவிஸ் ஆய்வாளர் பெர்ட்ராண்ட் பிக்கார்ட் மற்றும் சுவிஸ் பொறியாளர் பெர்ட்ராண்ட் போர்ஷ்பெர்க் ஆகியோரின் சிந்தனையில் உருவானது, புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் திறனை வெளிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது.
அந்த தொழில்நுட்ப அடிப்படையில் அமெரிக்காவை சேர்ந்த ஸ்கைட்வெல்லர் (SkyDweller) என்ற நிறுவனம், 90 நாட்கள் வரை தொடர்ந்து பறக்கும் கண்காணிப்பு விமானத்தை உருவாக்கியுள்ளது. 270 ச.மீ. பரப்பளவுள்ள இந்த விமானத்தின் இறக்கைகளில் 17,000 சோலார்பேனல்கள் நிறுவப்பட்டு, அதன் மூலம் தேவையான சூரிய ஒளி மின் சக்தியாக மாற்றப்படுகிறது.
மேகமூட்டமான வானிலையில் கூட, இதன் சூரிய மின்கலங்கள் 100kW வரை மின்சாரத்தை உருவாக்க முடியும் என கூறப்படுகிறது. இந்த மின்சாரம் 635 கிலோ எடையுள்ள பேட்டரிகளில் சேமிக்கப்பட்டு, இரவு நேரங்களில் கூட பறப்பில் ஈடுபட உதவுகிறது. பகலில் இந்த விமானம் 24,600 மற்றும் 34,400 அடி உயரத்திலும், இரவில் மின்சாரத்தைச் சேமிப்பதற்காக 4,900 முதல் 9,800 அடி உயரத்திலும் பறக்கிறது.
இந்த விமானத்தின் இறக்கைகள் போயிங் விமானத்தை விட அதிக நீளத்தை கொண்டிருந்தாலும், கார்பன் ஃபைபரை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதால், பாரம்பரிய ஜம்போ ஜெட் விமானத்தை விட 160 மடங்கு குறைவான எடை கொண்டது.
இதன் விமானக் கட்டுப்பாட்டு அமைப்பில் தானியங்கி காற்று-சுமை தணிப்பு மென்பொருளைப் பயன்படுத்துவதன் மூலம், விமானம் கொந்தளிப்பால் ஏற்படும் காற்றியக்க சுமைகளைக் குறைக்க முடியும்.
மேலும், 90 நாட்கள் வரை நம்பகத்தன்மையுடன் பறப்பில் ஈடுபட 4 மடங்கு அதிகப்படியான விமானக் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் அதிநவீன வாகன மேலாண்மை அமைப்பு (VMS) உள்ளது. இந்த VMS அமைப்பு, கணினியில் உள்ள எந்தவொரு சிக்கலையும் தானாகவே கண்டறிந்து சரிசெய்து, விமானம் தொடர்ந்து பறக்க உதவும். விமானத்தில் உள்ள அமைப்புகளில் ஒன்று செயலிழந்தால், காப்பு அமைப்பு (backup system) விமானம் தொடர்ந்து பறக்க உதவும்.
கடந்த மே மாதம், பிரிட்டிஷ் ஜெட் ஜெஃபிர் விமானம் 67 நாட்கள் இடைவிடாமல் பறந்து 1,608 மணி நேர உலக சாதனை படைத்தது. ஸ்கைட்வெல்லரின் இந்த புதிய கண்காணிப்பு விமானம், அந்த சாதனையை முறியடித்து, வானில் நிலைத்திருக்கும் காலத்தை இன்னும் அதிகரித்து சாதித்துள்ளது. இந்தச் சூரிய சக்தியில் இயங்கும் விமானம், எதிர்கால கண்காணிப்பு மற்றும் தகவல்தொடர்பு தொழில்நுட்பங்களில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.